தமிழகத்தில் தடையை மீறி ஆக.22-ல் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள்- இந்து முன்னணி
சென்னை: தமிழகத்தில் அரசு விதித்த தடையை மீறி 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படும் என்று இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக காடேஸ்வரா சி சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை:
விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அரசு தடை விதித்துள்ளதை இந்து முன்னணி கடுமையாகக் கண்டிக்கிறது. கடந்த 36 ஆண்டுகளாக இந்து முன்னணி இயக்கம் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை இந்துக்கள் ஒற்றுமை விழாவாக எழுச்சியுடன் கொண்டாடி வருகிறது.
விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தமிழக அரசு தடை.. இந்து முன்னணி கண்டனம்
இதுவரை பலவித கட்டுப்பாடுகளை அரசு விதித்த போதிலும், அவற்றையெல்லாம் அனுசரித்து விழாவை முன்னெடுத்து வந்துள்ளது என்பதை அரசும் அரசு அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் நன்கு அறிவர். இந்த நிலையில் இந்த ஆண்டு உலகே பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ள கொரோனா தொற்று நோய் காரணமாக சுகாதாரத்துறை விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன் விழா எடுக்க இந்து முன்னணி ஏற்பாடு செய்து வருகிறது.
கடந்த 5-ந் தேதி தமிழக அரசின் செயலர் கூட்டிய கூட்டத்தில் நமது கருத்தை வலியுறுத்தி கூறியிருந்தோம். அப்போது அரசு தரப்பும் விழா நடத்துவதற்கு சாதகமாகவே பேசினர்.
இப்போது விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை விதித்துள்ளது வேதனையானது. பிற மதங்களுக்கு எத்தகைய உரிமைகள் உள்ளனவோ அதேபோல் இந்துக்களும் வழிபாட்டு உரிமைகள் உள்ளன. எனவே வழிபாட்டு உரிமைகளை மீட்கும் வகையில் தக்க முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஆக.22-ல் ஒன்றரை லட்சம் இடங்களில் திட்டமிட்டபடி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறும்.
Recommended Video
இவ்வாறு காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.