234 எம்.எல்.ஏ-க்களையும் கடத்த போகிறோம்.. வண்ணாரப்பேட்டை போலீசுக்கு வந்த மிரட்டல் கடிதம்
சென்னை: தமிழகத்தில் உள்ள 234 எம்.எல்.ஏ-க்களையும் கடத்த உள்ளதாக சென்னை வண்ணாரப்பேட்டை போலீசுக்கு மர்ம மிரட்டல் கடிதம் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது. வண்ணாரப்பேட்டையில் சி.ஏ.ஏ, என்.ஆர்.சி-க்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது போலீஸார் தடியடி நடத்தியதை தொடர்ந்து இப்போது தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது.
இந்தச் சூழலில் சென்னை வண்ணாரப்பேட்டை போலீஸ் ஸ்டேசனுக்கு மர்ம கடிதம் ஒன்று வந்திருக்கிறது. அந்த கடிதத்தில் " அல் ஹக்' என்ற பெயரில் ஒரு இயக்கம் செயல்படுகிறது. இந்த இயக்கத்தில் 250 பேர் உள்ளனர். தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகைப் பதிவேடு போன்றவற்றை நடைமுறைப்படுத்தக் கூடாது, அதை மீறி ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தினால் இயக்கத்தில் உள்ள 250 பேரும் சேர்ந்து 234-எம்.எல்.ஏ-க்களைக் கடத்துவோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடிதம் தொடர்பாக வண்ணாரப்பேட்டை போலீஸார், உடனடியாக தங்களது உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்கள். இது பற்றி விசாரணையும் நடந்து வருகிறது. மொட்டையாக அனுப்பப்பட்ட இந்த கடித விவகாரம் போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே சிஏஏவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது . இந்த போராட்டங்களில் அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க போலீசார் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். இந்த சூழலில் சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எம்எல்ஏக்களை கடத்துவோம் என்று வண்ணாரப்பேட்டை போலீசுக்கு மிரட்டல் கடிதம் வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை அனுப்பியவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.