பொள்ளாச்சி பாலியல் வழக்கு.. சி.பி.ஐ. விசாரணையை கண்காணிப்போம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
Recommended Video
சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கின் சி.பி.ஐ. விசாரணையை கண்காணிப்போம் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், பேராசிரியைகள், இளம்பெண்கள் உள்பட ஏராளமான பெண்களை ஒரு கும்பல் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோ படம் பிடித்து, அதை காட்டி மிரட்டி பணம் பறித்து வந்தது.
இதில் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். பாதிக்கப்பட்ட மாணவியின் வீடியோவும் சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. பாலியல் வழக்கின் சி.பி.ஐ. புலன் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் மேற்பார்வையிட வேண்டும் என்ற தமிழ்நாடு பெண்கள் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் கே.சாந்தகுமாரி பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி, நீதிபதி சி.சரவணன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. தரப்பு புலன் விசாரணை நடுநிலையுடன் நடந்து வருவதாகவும். கைது செய்யப்பட்ட 5 பேருக்கு எதிராக இடைக்கால குற்றப்பத்திரிகையை கோவை தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. கடந்த மே 23-ந்தேதி தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இதுகுறித்து விரிவான அறிக்கையை சி.பி.ஐ. தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். சி.பி.ஐ. புலன் விசாரணையை உயர்நீதிமன்றம் மேற்பார்வையிடும் என்றும் தெரிவித்த நீதிபதிகள் வருகிற நவம்பர் 4-ந்தேதிக்கு வழக்கை தள்ளிவைத்தனர்.