தனிச்சின்னத்தில் போட்டி... பாஜக, பாமக இருக்கும் கூட்டணியில் சேரவே மாட்டோம் - திருமாவளவன் உறுதி
விசிகவின் தனித்தன்மை பாதிக்கப்படாத வகையில் நாங்கள் முடிவெடுப்போம்; தனி சின்னத்தில் போட்டியிடுவது உறுதி. பாமக, பாஜக இருக்கும் அணியில் நாங்கள் இடம்பெறமாட்டோம் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை: ஆட்சிகள் மாறலாம் காட்சிகள் மாறலாம் அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பார்கள். அரசியலைப் பொறுத்தவரை நிரந்தர பகைவனும் இல்லை நிரந்தர நண்பனும் இல்லை. நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்தால் யார் அணியில் யார் இருப்பார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. திமுக கூட்டணியில்தான் நாங்கள் இருக்கிறோம் என்று கூறியுள்ள விசிக தலைவர் தொல். திருமாவளவன், பாஜக, பாமக கட்சிகள் உள்ள கூட்டணியில் இடம் பெற மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் ஆளும் அதிமுகவும், எதிர்கட்சியான திமுகவும் தேர்தல் பணிகளில் ஆயத்தமாகி வருகின்றன. 200 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டார் ஸ்டாலின்.
திமுக கூட்டணியில் விசிக , மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் திமுக தனது கூட்டணி கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வற்புறுத்துவதாக செய்திகள் வெளியாகின. இதை திமுக தலைவர் ஸ்டாலின் மறுத்ததுடன், இது கூட்டணியை உடைக்க நடக்கும் சதி என்றார்.
மதிமுக , விசிக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தனித்துவத்தை நிலைநிறுத்த தனிச்சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். அதே நேரத்தில் பாமகவை கூட்டணிக்குள் கொண்டுவரவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனும் , பாமகவின் அன்புமணியும் தனியாக சந்தித்து கூட்டணி பற்றி பேசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து ஜி.கே. மணியிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, ராமதாஸ் மற்றும் அன்புமணி உள்ளிட்ட பாமக நிர்வாகிகளின் எண்ணமெல்லாம் முழுக்கமுழுக்க இட ஒதுக்கீடு பற்றித்தான் இருக்கிறது. இந்த இட ஒதுக்கீடு பிரச்சனை முடிந்த பின்னர்தான் தேர்தலை பற்றியும், கூட்டணியை பற்றியும் ஆலோசிப்போம் என்று கூறியுள்ளார்.
கூட்டணியை விட இட ஒதுக்கீடுதான் பாமகவுக்கு முக்கியம். இது குறித்து திமுக வாய் திறக்காமல் உள்ளது. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க திமுக முன் வந்தால், கூட்டணி குறித்து ராமதாஸ் முடிவு செய்வார் என்று தெரிவித்துள்ளார் ஜி.கே. மணி. திமுக அணிக்கு பாமக வந்தால் அந்த அணியில் உள்ள விசிகவின் நிலை என்னவாகும் என்பதே இப்போதய கேள்வியாக உள்ளது.
இது குறித்து பேசியுள்ள விசிக தலைவர் தொல். திருமாவளவன், திமுக கூட்டணியில் தான் விசிக உள்ளது என்று கூறினார். திமுகதான் தொகுதி பங்கீடு குறித்து முடிவெடுக்க வேண்டும். எங்களை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட திமுக வற்புறுத்தவில்லை. தனிச்சின்னத்தில் போட்டியிடும் போது வெற்றி பாதிப்புகள் அதிகம் என்றார்.
இதெல்லாம் எடப்பாடிக்கு தெரியுமா.. தெரியாதா? பாஜக குறித்து திருமாவளவன் பகீர் புகார்
திமுக தரப்பில் நியாயம் இருக்கிறது. இருப்பினும் சின்னம் தொடர்பாக முடிவெடுக்கும் சுதந்திரம் எங்களுக்கும் இருக்கிறது என்றும் கூறினார். விசிகவின் தனித்தன்மை பாதிக்கப்படாத வகையில் நாங்கள் முடிவெடுப்போம்; தனி சின்னத்தில் போட்டியிடுவது உறுதி என்று கூறிய தொல். திருமாவளவன், பாமக, பாஜக இருக்கும் அணியில் நாங்கள் இடம்பெறமாட்டோம் என்றும் தெரிவித்தார்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் விசிக இடம் பெறவில்லை. மதிமுக,கம்யூனிஸ்ட் கட்சிகள், தேமுதிக, விசிக இணைந்து மக்கள் நலக்கூட்டணியை உருவாக்கி போட்டியிட்டன. லோக்சபா தேர்தலில் இந்த நான்கு கட்சியினரும் திமுக உடன் இணைந்தன.
பாமக தனித்து களமிறங்கி அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியது. லோக்சபா தேர்தலில் பாஜக, அதிமுக இருந்த அணியில் களம் கண்டது. அதிமுக தயவில் ராஜ்யசபா எம்பியாகியுள்ளார் அன்புமணி ராமதாஸ். இந்த சூழ்நிலையில் திமுக கூட்டணிக்கு பாமக செல்லுமா? விசிக விலகுமா என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்து விடும்.