குருமூர்த்தி அப்படி சொல்கிறார்.. ஜெயக்குமார் இப்படி சொல்கிறாரே.. சசிகலா வருகையால் செம திருப்பங்கள்
சென்னை: அதிமுகவில் சசிகலாவை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி நேற்று பேசிய நிலையில், அதிமுக செய்தி தொடர்பாளரும், அமைச்சருமான ஜெயக்குமார் அதற்கு ஒரு பதில் கொடுத்துள்ளார்.
அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தன்னை ஒரு தலைவராக முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரங்களை துவங்கிவிட்டார். அந்தக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது.
இப்போது திடீரென ஒரு சிக்கல் எழுந்துள்ளது. பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா இந்த மாதம் இறுதியில் ரிலீஸ் செய்யப்படுகிறார்.
கோகுல இந்திரா புகழாரம்
சசிகலா வந்ததும் தற்போது அதிமுகவில் இருக்கக்கூடிய சிலர் அவருக்கு ஆதரவாளர்களாக மாறக்கூடும் என்ற பேச்சு இருக்கிறது. சமீபத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, சசிகலா ஒரு தவ வாழ்க்கை வாழ்ந்தவர் என்று, மாபெரும் புகழாரம் சூட்டி அதிமுக தலைவர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தார். ஆனாலும் கூட, இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என்று அதிமுகவில் மேலே உள்ள பலரும் ஆசுவாசப்படுத்திக் கொண்டனர்.
நிறைய கேள்விகள்
துக்ளக் ஆண்டு விழாவில் குருமூர்த்தி, சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொள்ளலாம் என்று ஒரே போடாக போட்டதைத்தான் அதிமுகவில் பலராலும் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. அதிமுகவில் சசிகலா இணைக்கப்பட்டால் யார் முதல்வர் வேட்பாளராக முன் நிறுத்தப்படுவார்? எடப்பாடி பழனிச்சாமியை அவர் எப்படி முதல்வர் வேட்பாளராக ஒப்புக்கொள்வார்? அவரே முதல்வர் வேட்பாளராக இருக்க வேண்டும் என்று விரும்புவாரே, என்றெல்லாம் பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
எடப்பாடியார் முதல்வர் வேட்பாளர்
அதிமுகவில் பெரும்பாலான தலைவர்கள் சசிகலாவை ஏற்றுக்கொண்டால், எடப்பாடி பழனிசாமியின், முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்த நிலையில்தான், குருமூர்த்திக்கு எதிராக அதிமுக சீனியர் அமைச்சரும், கட்சியின் செய்தி தொடர்பாளருமான ஜெயக்குமார் இன்று இவ்வாறு ஒரு கருத்து தெரிவித்துள்ளார். இதன்மூலம் குருமூர்த்தி கருத்தை அதிமுகவில் உள்ள தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
சாணக்கியர் என்ற நினைப்பு
ஜெயகுமார் அளித்த பேட்டியில், குருமூர்த்திக்கு, "தான் ஒரு சாணக்கியர், கிங் மேக்கர் என்று நினைப்பு இருக்கிறது. வீடு தீப்பற்றி எரியும் போது எந்த தண்ணீராக இருந்தாலும் அதை வைத்து அணைக்க வேண்டும்" என்றும் குருமூர்த்தி சொல்கிறார். இங்கு எந்த வீடும் தீப்பற்றி எரியவில்லை, அணைக்க வேண்டிய அவசியமும் இல்லை" என்று பதில் கொடுத்துள்ளார் ஜெயக்குமார்.
சசிகலாவை ஏற்கப்போவதில்லை
எனவே, எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் சசிகலாவின் வருகையை ஏற்கப்போவதில்லை என்பது தெளிவாக தெரிகிறது. எனவே சசிகலா ரிலீஸ் ஆனபிறகும், பெரும்பாலான அமைச்சர்கள் கருத்தில், இப்போதுள்ள நிலைமையில் பெரிய மாற்றங்கள் இருக்காது என்பதற்கு ஜெயக்குமார் பேட்டி ஒரு உதாரணமாக பார்க்கப்படுகிறது.
அணி திரளும் அதிமுக
சசிகலாவுக்கு ஜால்ரா அடிப்பவர்களை கட்சி கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது என்றும் ஜெயக்குமார் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். இதன்மூலம் சசிகலா ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்க வாய்ப்பு இருக்கிறது என்று தெளிவாக தெரிகிறது. குருமூர்த்தி யோசனையைக் கேட்டு, ஒருவேளை பாஜக அழுத்தம் கொடுத்தாலும், சசிகலாவுக்கு எதிராக அணிதிரள எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சீனியர் அமைச்சர்கள் தயாராக இருப்பதால் பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு முன்பு அதிமுகவில் சசிகலா காரணமாக பல்வேறு சலசலப்புகள் ஏற்படும் போகிறது என்பதற்கான முன்னறிவுப்பு மணியாக ஜெயக்குமாரின் இந்தப் பேட்டி பார்க்கப்படுகிறது.