இது 2வது தடவை.. மத்திய, மாநில அரசை திடீரென்று விமர்சிக்கும் தேமுதிக.. கூட்டணியில் என்ன நடக்குது?
மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டால், எதிர்ப்போம் என்று தேதிமுக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை: மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டால், எதிர்ப்போம் என்று தேதிமுக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் லோக்சபா மற்றும் 22 தமிழக சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக தேமுதிக கூட்டணி வைத்து போட்டியிட்டது. இதில் தேமுதிக பெரிய அளவில் வாக்கு வங்கியை இழந்தது. லோக்சபா தேர்தலிலும் வெற்றிபெறவில்லை.
ஆனால் சட்டசபை இடைத்தேர்தலில் 22 தொகுதியில் 9 இடங்களில் அதிமுக கூட்டணி வென்று ஆட்சியை தக்க வைத்தது. அதேபோல் கடைசியாக நடந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியிலும் அதிமுக கூட்டணியே வென்றது.
என் பொண்டாட்டி எஸ்.ஐ... நம்பி ஏமாந்த ராஜதுரை.. வாடகைக்கு டிரஸ் எடுத்து ஊரை ஏமாற்றிய சூரிய பிரியா!
தேர்தல் எப்படி
இந்த நிலையில் தேமுதிக மற்றும் அதிமுக கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும் என்று தேமுதிக ஏற்கனவே அறிவித்து இருந்தது. எங்கள் கூட்டணி நிலையாக இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலிலும் நாங்கள் சேர்ந்து போட்டியிடுவோம். எங்கள் கூட்டணி தொடர்ந்து வெற்றிபெறும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா குறிப்பிட்டு இருந்தார்.
வேறு வேறு நிலைப்பாடு
ஆனால் டாக்டர்கள் போராட்டத்தில் அதிமுகவும் தேமுதிகவும் வேறு வேறு நிலைப்பாட்டை எடுத்து இருந்தது. அதன்படி, டாக்டர்கள் கோரிக்கை நியாயமானது. அவர்களின் நியாயமான கோரிக்கையை அதிமுக அரசு நிறைவேற்ற வேண்டும். அவர்களுடன் பேச வேண்டும் என்று பிரேமலதா குறிப்பிட்டு இருந்தார்.
கேள்விகள்
அவரின் இந்த கருத்து நிறைய கேள்விகளை எழுப்பி இருந்தது. ஏன் திடீர் என்று அதிமுகவிற்கு எதிராக பிரேமலதா பேசுகிறார். அரசு மருத்துவர்கள் போராட்டத்தை கடுமையாக எதிர்க்கும் போது அவர்களின் கூட்டணியில் இருக்கும் பிரேமலதா ஏன் இப்படி ஆதரிக்கிறார் என்று கேள்விகள் எழுந்தது.
இப்போது என்ன சொன்னார்
இந்த நிலையில் தற்போது மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் எதிராக முக்கிய கருத்து ஒன்றை குறிப்பிட்டு இருக்கிறார் பிரேமலதா. திருத்தணியில் பேசிய அவர், வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வரப்படுவது சரிதான். ஆனால் மக்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்த கூடாது. திட்டங்கள் ஏழை எளிய மக்களை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்.
வரிகள் எப்படி
ஜி.எஸ்.டி போன்ற வரிகள் விதிக்கப்படுவது அவசியம் என்றால் செய்யலாம். ஆனால் அதனால் பாதிப்பு ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும், என்று பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிட்டு இருக்கிறார். அவரின் இந்த பேட்டி தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
என்ன நடக்குது?
கூட்டணியில் இணைந்த பின் தேமுதிக இப்படி ஒரு கருத்தை முதல்முறையாக சொல்லி இருக்கிறது. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இப்போதே தேமுதிக காய்களை நகர்த்துகிறதா? இல்லை உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிடம் அதிக இடங்களை பேசி வாங்குவதற்கான இப்போதே முரண்டு பிடிக்க தொடங்கி உள்ளதா என்று கேள்வி எழுந்துள்ளது.