தினமும் போராடுவோம்.. இந்தியாவே ஒரே மாதிரி என்றால் தமிழகம் தனி மாதிரி.. ஸ்டாலின் மாஸ் பேச்சு!
தமிழகத்தில் கொஞ்சம் கண் அசந்தால் இந்தியை திணிக்க முயல்கிறார்கள், தமிழுக்காக தினமும் போராட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் கொஞ்சம் கண் அசந்தால் இந்தியை திணிக்க முயல்கிறார்கள், தமிழுக்காக தினமும் போராட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
திமுகவின் மறைந்த தலைவர் அறிஞர் அண்ணாவின் 111வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழக அரசியல் தலைவர்கள் பலர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார்கள்.
அண்ணாவின் நினைவை போற்றும் வகையில் தமிழகம் முழுக்க மாநாடுகள் நடந்து வருகிறது. இதையடுத்து மதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு சென்னையில் நடைபெற்றது.
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி.. ரஜினியால் தமிழக பாஜகவில் ஏற்பட்ட குழப்பம்.. பூசல்!
என்ன மாநாடு
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் விழா நடந்தது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக தலைவர் ஸ்டாலின் விழாவில் கலந்து கொண்டனர். இதில் திமுக தலைவர் ஸ்டாலின் அண்ணா குறித்து பேசினார். அதேபோல் தமிழுக்கு எதிராக செய்யப்படும் அரசியல் குறித்தும் ஸ்டாலின் பேசினார்.
என்ன சொன்னார்
ஸ்டாலின் தனது பேச்சில், அண்ணாவின் பிறந்த நாளை அடுத்து மதிமுக சார்பில் மாநாடு மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது. அறிஞர் அண்ணாதான் நம்முடை முகம், அவர்தான் நம்முடைய முகவரி. திமுகவின் முகமாக எப்போதும் அண்ணா இருப்பார். வைகோவின் கட்டளையை ஏற்று நான் இங்கே வந்துள்ளேன்.
எப்படி முக்கியம்
நடந்த நடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி சிறப்பாக வென்றது. மதிமுக திமுகவின் சின்னத்தில் போட்டியிட்டது. சின்னம் முக்கியமல்ல, எண்ணம்தான் முக்கியம் என்று மதிமுக செயல்பட்டது. 40 தொகுதிகளில் 39 தொகுதிகளில் சரித்திர வெற்றியை பெற்றுள்ளோம்.
நாங்கள்
இந்தியாவை ஒரு மாதிரி நின்றாலும். தமிழகம் தனி மாதிரி என்று நிரூபித்துள்ளோம். மொத்த இந்தியாவிற்கும் சேர்த்து நாங்கள்தான் குரல் கொடுத்து வருகிறோம். நாட்டின் எதிர்கட்சிக் குரலாக நாங்கள் மாறி இருக்கிறோம். சர்வாதிகாரம் தலை தூக்கி வருவதால், ஜனநாயக குரல் எழுப்பும் நேரம் இது.
போராட்டம் வேண்டும்
தமிழுக்காக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகம் திட்டமிட்டு பழிவாங்கப்படுகிறது; ரயில்வே, தபால் துறைகளில் தமிழ் புறக்கணிக்கப்படுகிறது. கொஞ்சம் கண் அசந்தால் இந்தியை திணிக்க முயல்கிறார்கள்.
எதிர்ப்பு
தமிழகத்தில் ஒருபக்கம் கலாசார தாக்குதலும் மறு பக்கம் ரசாயன தாக்குதலும் நடந்து வருகிறது. நாட்டின் பொருளாதாரம் நாசம் அடைந்துள்ளது. வேலைவாய்ப்பு மோசம் அடைந்துள்ளது. காஷ்மீர் ஒதுக்கப்படுகிறது. நீட் மூலம் தமிழக மாணவர்களின் மருத்துவ கனவு சிதைக்கப்பட்டுவிட்டது .இதை எல்லாம் திமுக ஜனநாயக ரீதியாக எதிர்க்கிறது.
தினமும்
ஒவ்வொரு நாளும் போராடி போராடிதான் நாம் உரிமையை காக்க வேண்டி இருக்கிறது. 1938ல் இருந்து இந்தியை எதிர்த்து போராடி வருகிறோம். திமுகவின் போராட்ட களத்தை நாடே பார்த்து இருக்கிறது. அவர்கள் திணித்துக் கொண்டே இருப்பார்கள், நாங்கள் எதிர்த்துக் கொண்டே இருப்போம், என்ற நிலை உருவாகி உள்ளது, என்று திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.