ஸ்டாலினுக்கு எப்போதும் துணை நிற்போம்.. திடீர் அறிக்கை வெளியிட்ட கே.எஸ் அழகிரி.. சமாதானம்!
திமுக கட்சிக்கும், திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் எப்போதும் உறுதுணையாக உடன் நிற்போம் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை: திமுக கட்சிக்கும், திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் எப்போதும் உறுதுணையாக உடன் நிற்போம் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணி அமோக வெற்றிபெற்றது. உள்ளாட்சி தேர்தல் காரணமாக திமுக காங்கிரஸ் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த வாரம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ் அழகிரி கோபமாக அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
உள்ளாட்சி தேர்தலில் போதிய இடங்களை திமுக எங்களுக்கு அளிக்கவில்லை.ஒன்றியத்திற்கு, மாவட்டத்திற்கு தலைவர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் திமுக எங்களுக்கு அப்படி எதுவும் செய்யவில்லை. எங்களிடம் தருவதாக வாக்களித்த இடங்களை கூட திமுக எங்களுக்கு வழங்கவில்லை, என்று கே.எஸ் அழகிரி குறிப்பிட்டு இருந்தார்.
மதிக்கவில்லை
மேலும் 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் ஒரு மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகூட வழங்கவில்லை. மாவட்ட அளவில் பேசிமுடித்த எந்த ஒரு ஒத்துழைப்பும் இதுவரை கிடைக்கவில்லை என கூறப்பட்டுள்ளது. திமுகவின் செயல்பாடுகள் கூட்டணி தர்மத்திற்கு புறம்பாக இருந்தது என்று கே.எஸ் அழகிரி குறிப்பிட்டு இருந்தார்.
உடைகிறதா?
இதனால் திமுக - காங்கிரஸ் கூட்டணி உடைகிறதா என்று கேள்வி எழுந்தது. காங்கிரஸ் கட்சி வேறு யாருடனாவது கூட்டணி வைக்க முயற்சி செய்கிறதா? கே.எஸ் அழகிரி திடீர் என்று ஸ்டாலின் உடன் ஏன் மல்லுக்கு நிற்கிறார் என்று பலரும் கேள்வி எழுப்ப தொடங்கினார்கள்.
புதிய அறிக்கை
இந்த நிலையில் திடீர் திருப்பமாக தற்போது கே.எஸ் அழகிரி புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஸ்டாலினுக்கு ஆதரவாக அவர் அறிவிக்கை வெளியிட்டுள்ளார். மதவாத, பாசிச சக்திகளையும், அவர்களை ஆதரிப்பவர்களையும் திமுக தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இப்படிப்பட்ட சக்திகளை ஸ்டாலின் கடுமையாக எதிர்த்து வருகிறார்.
திமுக நிலைப்பாடு
திமுக மேற்கொண்டுள்ள உறுதியான நிலைப்பாட்டுக்கு எங்கள் ஆதரவு எப்போதும் இருக்கும். திமுகவிற்கு தொடர்ந்து ஆதரவளித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை நிற்கும். எங்கள் நிலைப்பாட்டில், நட்பிலும் எந்த மாற்றமும் கிடையாது.
கூட்டணி நீடிக்கும்
மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி எப்போதும் போல நீடிக்கும். எங்கள் வெற்றிகள் தொடர்ந்திட, ஒற்றுமையுடனும் புரிதலுடனும் சிறத்தன்மையுடன் செயல்படுவோம். மக்கள் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம், திமுக தலைவர் ஸ்டாலின் உடன் துணை நிற்போம், என்று கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
இனி இல்லை
இதனால் தற்போது திமுக - காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்ட விரிசல் சரியாகி உள்ளது. இதற்கு பின்னணியில் சில தலைவர்கள் சமாதானம் செய்துள்ளனர். இதனால் கே.எஸ் அழகிரி, மீண்டும் திமுக உடன் இணக்கமாக போக முடிவு செய்துள்ளார் என்கிறார்கள்.