அரசு மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.. உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
சென்னை: அரசு மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளதாகவும், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் நோயாளியை கவனிக்காத மருத்துவரை நோயாளியின் உறவினர்கள் தாக்கியதால் 2017 மார்ச் 16ம் தேதி பயிற்சி மருத்துவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி குமரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
கீழடியில் உலகத்தரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.. தமிழ்நாடு நாளில் முதல்வர் சூப்பர் அறிவிப்பு
மருத்துவர்கள் போராட்டம்
அதேபோல முதுகலை மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கையில் தங்களது உரிமைகள் பாதிக்கப்படுவதாக கூறி, 2017ம் ஆண்டு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் வழக்கறிஞர் ஏ.கே.வேலன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அவசர சிகிச்சை
இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவில் இரண்டு மருத்துவர்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பது குறித்தும், அரசு மருத்துவர்களுக்கு காவல் பாதுகாப்பு வழங்க முடியுமா என்பது குறித்தும் விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தனர்.
நீதிபதிகள் கேள்வி
இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, டாக்டர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு ராணுவத்தினர், காவல்துறையினர், துப்புரவு பணியாளர்கள் இதுபோல வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் என்னாவது என்று கேள்வி எழுப்பினர்.
வேலை நிறுத்தம்
மேலும் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அரசு ஊழியர் போராட்டத்தின் போது பயன்படுத்தப்பட்ட டெஸ்மா சட்டம் தற்போது அமலில் உள்ளதா எனவும் கேள்வி எழுப்பினர்.
வழக்கறிஞர் பதில்
அதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண், டெஸ்மா சட்டம் என்பது அவசர சட்டமாகத்தான் கொண்டு வரப்பட்டதாகவும், அது அமலில் உள்ளதா, இல்லையா என்பது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாகக் கூறினார்.
போராட்டம் வாபஸ்
தற்போது, மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை எவ்வித நிபந்தனையுமின்றி வாபஸ் பெற்றுள்ளதாகவும், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தபடும் என்றும் தெரிவித்தார். இதையடுத்து, அரசு மருத்துவர்களுக்கு காவல் பாதுகாப்பு வழங்க முடியுமா என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுத்தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.