நோ நோ.. 21 தொகுதியில் போட்டியில்லை.. லோக்சபா தேர்தலில் ஆதரவு இல்லை.. ரஜினி அறிவிப்பு!
தமிழகத்தில் 21 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் 21 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் வந்துவிட்டது. இன்று மாலை இதற்கான தேதிகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் புதிதாக களமிறங்க இருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தனித்து போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இந்த தேர்தலில் என்ன முடிவெடுப்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள்.
ஆனால் லோக்சபா தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிக்க மாட்டேன் என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டு இருந்தார். இதுகுறித்து தற்போது அவர் பேட்டியளித்துள்ளார்.
கமல் கையில் டார்ச் லைட்.. மக்கள் நீதி மய்யத்திற்கு கிடைத்தது புதிய சின்னம்!
ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் ''லோக்சபா தேர்தலில் நாங்கள் யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை. ரஜினி மக்கள் மன்றம் சார்பாக இதில் யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை.
21 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியில்லை. எங்கள் இலக்கு சட்டமன்ற பொதுத்தேர்தல்தான். இடைத்தேர்தல் கிடையாது, என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டார்.
இதையடுத்து அவரிடம் செய்தியாளர் ஒருவர் ''தண்ணீர் பிரச்னையை தீர்க்க உதவும் கட்சிக்குத்தான் ஆதரவு என்று கூறினீர்கள். மாநில கட்சியா, மத்திய கட்சியா?'' என்று கேள்வி கேட்டார்.
இதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த் ''இரண்டு கட்சிக்கும்தான்'' என்று கூறினார்.