தலை கவசம் போடுங்க... காவல்துறையினருக்கு புதிய டிஜிபி அதிரடி உத்தரவு
சென்னை:புதிதாக பொறுப்பேற்றுள்ள சட்டம் ஒழுங்கு டிஜிபி திரிபாதி காவல்துறையினருக்கு அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்த ராஜேந்திரன் பதவி ஒய்வு பெற்றதை அடுத்து புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக திரிபாதி கடந்த மாதம் 30-ம் தேதி பொறுப்பேற்றார். டிஜிபியாக பொறுப்பேற்றதும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்றி குற்றங்களை களைய முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறியிருந்தார்.
பதவியேற்றதும் தமிழகத்தில் உள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் ஆகியோருக்கு சுற்றறிக்கை மூலம் உத்தரவு ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த உத்தரவில் காவல்துறையை சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது கண்டிப்பாக ஹெல்மட் அணிய வேண்டும். அவர்கள் சீருடையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது ஹெல்மட் கட்டாயம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
காவலர்கள் மீது கடும் நடவடிக்கை
ஹெல்மட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் செல்லும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் அனைவரும் ஹெல்மட் அணியவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை போலீசார் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
நீதிமன்றம் உத்தரவு
இரு சக்கர வாகனத்தில் செல்வோர் விபத்தில் சிக்கும்போது ஹெல்மட் அணியாததால் உயிர் இழக்க நேரிடுகிறது. அதுவும் பின் இருக்கையில் அமர்ந்து பயணிப்போர் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இதை ஒரு ஆய்வு தெளிவு படுத்துகிறது. இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் இருவரும் கட்டாயமாக ஹெல்மட் அணிய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போக்குவரத்து விதி
இந்த உத்தரவை மேற்கோள் காட்டிய புதிய டிஜிபி திரிபாதி தனது முதல் உத்தரவாக காவல்துறையினர் அனைவரும் ஹெல்மட் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அதோடு போக்குவரத்து விதிகளை மீறும் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
டிஜிபி உத்தரவு
சாதாரண மக்கள் போக்குவரத்து விதிகளை மீறினால் என்ன தண்டனை வழங்கப்படுமோ அதே தண்டனை காவல்துறையினருக்கும் வழங்கப் பட வேண்டும் என்று டிஜிபி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். டிஜிபியின் இந்த முதல் உத்தரவே அதிரடி உத்தரவாக உள்ளது என்று காவல்துறையினர் கூறுகிறார்கள்.