உருவாகுது மேலடுக்கு சுழற்சி... மீண்டும் தென் மாவட்டங்களில் மூன்று நாளைக்கு மழை வெளுக்க போகுது
சென்னை: இலங்கைக்கு தென் கிழக்கே வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி தற்போது உருவாகி வருகிறது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் மீண்டும் கன மழை பெய்ய வாய்ப்பு உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால் தொடர்ந்து பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக காவிரி டெல்டா, தென்மாவட்டங்கள் மற்றும் கட லோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
நல்ல மழை
சென்னையிலும் நல்ல மழைபெய்து வருகிறது. இன்று கூட சென்னையில் நல்ல மழை பெய்தது. காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, நாகை, திருவாரூர், அரியலூர், விருதுநகர், உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்தது.
வானிலை மையம்
இது பற்றி சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில், தமிழ்நாட்டில் நேற்று அதிக பட்சமாக 4 செ.மீ. அளவுக்கு மழை பெய்திருக்கிறது.
கனமழை இல்லை
வளிமண்டல மேலடுக்கில் நிலவும் சுழற்சி காரணமாக மேகங்கள் திரண்டு வருவதால், அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் ஆங்காங்கே மழை பெய்கிறது. இந்த மழை 2 நாட்களுக்கு நீடிக்கும். ஆனால் கன மழை பெய்யக் கூடிய அளவுக்கு சூழல்கள் இல்லை
கனமழை
இலங்கைக்கு தென் கிழக்கே மேலடுக்கு சுழற்சி தற்போது உருவாகி வருகிறது. இதனால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம். இந்த மேலடுக்கு சுழற்சியின் காரணமாக 3 நாட்களுக்கு பிறகு தென் மாவட்டங்களில் மீண்டும் கன மழை பெய்ய வாய்ப்பு உருவாகி இருக்கிறது" என்றார். தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாகவே 12 சதவீதம் வடகிழக்கு பருவ மழை பெய்துள்ளதாகவும் கூறினார்.