உருட்டு கட்டையை எடுத்து ஒரே அடி.. ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி தலை சிதறி பலி! சென்னையில் ஷாக்
சென்னை: சென்னையில் 'காக்கா முட்டை' திரைப்பட பாணியில் ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த நபரை இளைஞர்கள் சிலர் கம்பால் தாக்கியதில் அவர் கீழே விழுந்து தலை சிதறி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ரயில்களில் ஜன்னல் அல்லது படிக்கட்டு அருகே அமர்ந்து செல்லும் பயணிகளிடம் செல்போன் திருடும் சம்பவங்களும், அதனால் சில நேரங்களில் இதுபோன்ற அசம்பாவிதங்களும் ஏற்படுவது வாடிக்கையாகி உள்ளது.
மேலும், இளைஞர்கள் சிலர் அங்குக் கஞ்சா போதையில் சுற்றி வருவதால் ரயில் பயணிகளுக்கு மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருவதாகக் கூறப்படுகிறது.
மேற்குவங்க இளைஞர்
மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் ரோனி ஷேக் (24). கட்டுமானத் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இதனிடையே, கேரளாவின் மலப்புரத்தில் கட்டிட வேலை பார்ப்பதற்காக, கடந்த வெள்ளிக்கிழமை மேற்கு வங்கத்தின் சந்தர்காசி ரயில் நிலையத்தில் இருந்து கோரமண்டலம் விரைவு ரயிலில் ரோனி ஷேக் புறப்பட்டார். அவருடன் அவரது உறவினர் அஷ்ரத் ஷேக் என்பவரும் வந்துள்ளார். இந்நிலையில், அடுத்த நாள் சனிக்கிழமை மாலை அந்த ரயில் கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தது.
கம்பால் அடித்த மர்மநபர்கள்
அந்த சமயத்தில், ரோனி ஷேக் ரயில் படிக்கட்டில் அமர்ந்து செல்போனில் படம் பார்த்தபடி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த சில இளைஞர்கள், பெரிய கம்பால் ரோனி ஷேக்கின் கையில் அடித்து செல்போன் பறிக்க முயன்றனர். இதில் அவரது முகத்தில் கம்பு படவே, ரோனி ஷேக் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் ரயில் சக்கரத்தின் அருகே உள்ள இரும்பு அவரது தலையை பிளந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கைது நடவடிக்கை
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், அங்கு வந்த ரோனி ஷேக் உடலைக் கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் அதே பகுதியை சேர்ந்த விஜய் (18), விஜய்குமார் (18) ஆகிய இரட்டை சகோதரர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தொடரும் பயங்கரம்
சில பகுதிகளில் ரயில் படியில் அமர்ந்து செல்லும் பயணிகளைக் கம்பை எடுத்துத் தாக்கி செல்போனை பறித்து, அதை விற்று பணம் வாங்குவது இளைஞர்கள் சிலரின் வழக்கமாகவே உள்ளது. மேலும், அந்தப் பணத்தின் மூலம் கஞ்சா அடிப்பதும், பின்னர் குற்றச்செயல்களில் ஈடுபடுவதும் தொடர்கதையாகி வருகிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை போலீஸார் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.