என்ன ஒரு சோகமான நாள்.. வாழ்க்கை தீர்மானிக்க முடியாதது.. கிரேஸி மோகன் மறைவு.. பிரபலங்கள் அதிர்ச்சி!
சென்னை: இன்று ஒரு சோகமான நாள் என கிரேஸி மோகன் மறைவு குறித்து திரைத்துறையினரும் அரசியல் கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகரும் வசனகர்த்தாவுமான கிரேஸிமோகன் இன்று காலமானார். அவரது உடல் சென்னை மந்தைவெளியில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அவரது உடலுக்கு திரைத்துறையினர் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேநேரத்தில் அரசியல் கட்சியினரும் திரை நட்சத்திரங்கள் பலரும் டிவிட்டரில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
|
அன்புமணி இரங்கல்
இந்தியாவின் இரண்டு பிரபலமான மற்றும் புகழ்பெற்ற எழுத்தாளர்கள், நாடக மற்றும் திரைப்பட நடிகர்களான கிரிஷ் கர்னாட் மற்றும் கிரேஸி மோகன் ஆகியோரை இந்தியா இழந்திருப்பதால் அதிர்ச்சியும் துக்கமும் அடைந்தேன். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
|
நடிகர் சித்தார்த்
கிரேஸி மோகன் சார் உயிருடன் இல்லை. சினிமா, நாடகம், சிரிப்பு மற்றும் வாழ்க்கைக்கு என்ன ஒரு சோகமான நாள். அவரைப்போல் இன்னொருவர் இருக்க மாட்டார். அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள். நம் சிரிக்கும் திறனின் பெரும் பகுதியாக இருந்தவர். என நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
|
ஆர்த்தி கணேஷ்
இதை என்னால் நம்பவே முடியவில்லை. 20 நாட்களுக்கு முன்புதான் புதிய புராஜெக்ட் தொடர்பாக அவரை சந்தித்தேன், கண் பார்வை பிரச்சனை மட்டும்தான் அவருக்கு இருந்தது. வாழ்க்கை தீர்மானிக்க முடியாதது. இவ்வாறு நடிகை ஆர்த்தி கணேஷ் தெரிவித்துள்ளார்.
|
குஷ்பு இரங்கல்
கிரேஸி மோகன் மறைந்த செய்தி கிடைத்தது. துரதிருஷ்டவசமாக அவரை காப்பாற்ற முடியவில்லை.. ஒரு மேதை மரபை விட்டுச்சென்றிருக்கிறார். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் .. அவரது ஆத்மா சாந்தியடையட்டும். என குஷ்பு தெரிவித்துள்ளார்.
|
டிடிவி தினகரன்
டிடிவி தினகரன் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில் புகழ் பெற்ற நகைச்சுவை வசனகர்த்தாவும், நடிகருமான கிரேசி மோகன் மறைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். நாடக மேடைகளிலும், சின்னத்திரையிலும், திரையுலகிலும் லட்சோபலட்சம் பேரை தன்னுடைய நகைச்சுவை ஆற்றலால் மனம் விட்டு சிரிக்க வைத்தவர் கிரேசி மோகன்.
|
பலரின் கவலைகளை போக்கியவர்
40 ஆண்டுகளாக நாடக மற்றும் திரை உலகில் ஏராளமான சாதனைகளைப் புரிந்தவர். நகைச்சுவை உணர்வை வாழ்க்கை முறையாகவே கொண்டாடி, அதன்மூலம் பலரின் கவலைகளைப் போக்கிய மோகன் அவர்களின் மறைவால் வாடும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.