பாரிமுனையிலுள்ள கச்சாலீஸ்வரர் ஆலய சொத்துக்களை பாதுகாக்க என்ன நடவடிக்கை? ஹைகோர்ட் கேள்வி
சென்னை: சென்னை பாரிமுனையில் உள்ள கச்சாலீஸ்வரர் ஆலயத்திக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்று, இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு கச்சாலீஸ்வரர் ஆலயத்துக்கு சொந்தமான தெப்ப குளத்தில் நடத்தப்படும் விழாவில் அருள்மிகு கச்சாலீஸ்வரர், அருள்மிகு காளியம்மன், அருள்மிகு முத்துகுமாரசுவாமி, அருள்மிகு சிவ சண்முக விநாயகர், அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலய தெய்வங்கள் 5 நாள் பங்கேற்கின்றனர்.
ஆலயத்தை சரியாக பராமரிக்காததால், குளத்தின் தண்ணீர் வரத்து தடைபட்டு கடந்த 9 ஆண்டுகளாக தெப்பத்திருவிழா நடத்தப்படாமல் உள்ளது. குளத்தை சுற்றியுள்ள சுவர்கள் சிதிலமடைந்து காணப்படுவதால், அருகில் வசிக்கும் பொதுமக்களின் உயிருக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
மாஸ்க் போடாவிட்டால் அபராதம் விதிப்பதோடு விடுவதில்லை.. முகக் கவசமும் கொடுத்து அசத்தும் கரூர் போலீஸ்
இதுகுறித்து, தமிழக ஆளுநர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறைக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், ஆலயத்தை பராமரிக்கவும், கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை கண்டறிய ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அடங்கிய அமர்வு, கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 4 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.