ரஜினியின் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு.. அதிமுக தலைவர்கள் சொல்வது என்ன?
சென்னை: ரஜினி கட்சி தொடங்குவதால் அதிமுகவுக்கும் வாக்கு வங்கிக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கடந்த 30 ஆம் தேதி ராகவேந்திரா மண்டபத்தில் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினி விரைவில் முடிவை அறிவிப்பதாக அறிவித்தார்.
இதன்படி ஜனவரியில் கட்சி தொடங்கப்போவதாகவும், டிசம்பரில் கட்சி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் ரஜினி டுவிட்டரில் இன்று அறிவித்தார். அவர் தனது ட்வீட் பதிவில், வரப்போகிற சட்ட மன்றத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப் பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்.. அதிசயம் .. நிகழும்!!!" என்று கூறியுள்ளார்.
ஜனவரியில் கட்சி தொடக்கம்.. டிச. 31ல் அறிவிப்பு.. ரஜினிகாந்த் திடீர் அறிவிப்பு
எதிர்பார்ப்பு
ரஜினியின் அரசியல் வருகை குறித்து அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் கூறுகையில், "ரஜினியின் அரசியல் வருகை குறித்த எதிர்ப்பார்ப்பு இறுதி கட்டத்தை எட்டி விட்டது.
வைகை செல்வன்
ரஜினி கட்சி தொடங்குவதால் அதிமுகவுக்கும் வாக்கு வங்கிக்கும் எந்த பாதிப்பும் இல்லை. அனைவருக்கும் கட்சி தொடங்கும் உரிமை உள்ளது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு பிறகு அதிமுக இருக்காது என்று சொன்னார்கள். ஆனால் ஒபிஎஸ் இபிஎஸ் சிறப்பாக வழிநடத்தி கொண்டு இருக்கின்றனர். அதிமுக தொண்டர்கள் எங்கும் செல்லவில்லை" என்றார்.
கூட்டணி
துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில், சிறந்த திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் கட்சி துவங்கியதை வரவேற்கிறேன். அவருடைய வரவு நல்வரவாகட்டும். அரசியலில் எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். வாய்ப்பு இருந்தால் ரஜினிகாந்த் கட்சியுடன் கூட்டணி அமையும்.
முதல்வர் கருத்து
முன்னதாக சேலத்தில் நிருபர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அவர், முழுமையாக ரஜினிகாந்த் பேசியதை பார்த்து, ஆலோசித்து கருத்து கூறுகிறேன் என்று கூறினார்.