பதறும் எடப்பாடியார்.. துடிக்கும் ஸ்டாலின்.. வேடிக்கை பார்க்கும் பாஜக.. இனி அடுத்து என்ன நடக்கும்?
சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் ஏழரை சதவீத உள் ஒதுக்கீடு தொடர்பாக செமையாக பாலிட்டிக்ஸ் நடந்து வருகிறது. இதைப் பார்த்து அரசுப் பள்ளி மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் மனதுக்குள் குமைந்து போய்க் கிடக்கின்றனர்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க அரசு முடிவெடுத்தது. உண்மையில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குமாறுதான் இதுதொடர்பாக உருவாக்கப்பட்ட கமிஷன் பரிந்துரைத்திருந்தது. ஆனால் தமிழக அரசுதான் இதை 7.5 சதவீதமாக குறைத்து விட்டது. இங்கேயே அதிமுக அரசுக்கு முதல் சறுக்கல் வந்து விட்டது.
தற்போது இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் பெற வேண்டியுள்ளது. ஆனால் ஆளுநர் தரப்பில் பெரும் தாமதம் நிலவுகிறது. ஏற்கனவே காலதாமதமாகி விட்ட நிலையில் மேலும் அவகாசம் கேட்டுள்ளார் ஆளுநர். ஆளுநரை யாரும் உத்தரவிட்டு வலியுறுத்த முடியாது என்றாலும் கூட ஏன் இந்த தாமதம் என்று எல்லோரும் கேட்க ஆரம்பித்து விட்டனர்.
"உடலுறவு" சர்ச்சை பேச்சு.. 15 வருஷத்துக்கு முன்பு அழ வைத்த திருமா.. இன்று திருப்பி தருகிறாரா குஷ்பு
அரசியல்
மக்களுக்கு ஆளுநர் மீது அதிருப்தியே ஏற்படும் அளவுக்கு இந்த விவகாரம் பெரிதாகி வருகிறது. ஆனால் இதில் உள்ளடி அரசியலும் பின்னிப் பிணைந்திருப்பதுதான் பலரையும் அதிர வைத்துள்ளது. அதாவது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த சட்ட மசோதாவின் மூலமாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்து மக்களின் மனதில் இடம் பிடிக்க நினைக்கிறார்.
உள்ஒதுக்கீடு
ஏற்கனவே பல்வேறு அறிவிப்புகள் மூலம் மாணவர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் எடப்பாடியாருக்கு நல்ல அபிப்பிராயம் உள்ளது. அதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. அந்த வரிசையில் இந்த உள் ஒதுக்கீடும் அமைய வேண்டும் என்று அவர் விரும்புகிறார். ஆனால் ஆளுநர் தரப்பு அதற்கு ஒத்துழைக்காமல் உள்ளது. அதனால் எடப்பாடியார் சற்றே அதிருப்தியாகவும் உள்ளார்.
எடப்பாடியார்
மறுபக்கம், இந்த உள் ஒதுக்கீடு வந்தால் எடப்பாடியாருக்கு நல்ல பெயர் கிடைத்து விடுமே என்று உள்ளுக்குள் பதை பதைப்போடு திமுக தரப்பு உள்ளது. ஒதுக்கீடு வர வேண்டும் என்று வெளியில் குரல் கொடுத்தாலும் கூட அப்படி வந்தால் அதன் முழுப் பெயரும் எடப்பாடியாருக்குத்தான் போகும் என்ற அச்சம் அக்கட்சிக்கு உள்ளது. எனவேதான் முன்கூட்டியே ஆளுநர் மாளிகை முன்பு பெரும் கூட்டத்தைக் கூட்டி தனது பலத்தைக் காட்டி போராட்டம் ஒன்றை நடத்தி விட்டது.
ஸ்கெட்ச்
நாளை ஆளுநர் ஒப்புதல் அளித்தாலும் கூட, எங்களது போராட்டத்தால்தான் ஆளுநர் பணிந்து வந்தார் என்று பேசிக் கொள்ளலாமே என்ற ஸ்கெட்ச்தான் இது என்று சொல்கிறார்கள். இது எடப்பாடியாருக்கும் தெரிந்துள்ளது. இதனால்தான் அவரும் சற்றே டென்ஷனாக உள்ளார்.
பாஜக
ஆனால் பாஜக தரப்பில் வேறு மாதிரியான கருத்தோட்டம் இருப்பதாக சொல்கிறார்கள். மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்தால் அதிமுகவுக்கு பெயர் கிடைக்கும், போராட்டம் நடத்தி கிடைத்தால் அதனால் திமுகவுக்கும் பெயர் கிடைக்கும்.. இரண்டு பேருக்கும் பெயர் கிடைக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று பாஜக தரப்பு யோசிக்கிறதாம். அதன் பிரதிபலிப்பே ஆளுநரின் தாமதம் என்றும் பேச்சு அடிபடுகிறது.
எது உண்மையோ தெரியாது.. ஆனால் இவர்களுக்கு இடையில் சிக்கித் தவித்து வருவது என்னவோ அந்த அப்பாவி அரசுப் பள்ளி மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும்தான்.