கரைந்த காலங்கள்.. கரையாத நினைவுகள்... எப்படி இருக்கிறார் கருணாநிதியின் ''நிழல்'' ஆற்காடு வீராசாமி ?
சென்னை: கருணாநிதியின் வலதுகரமாகவும், திமுகவின் தளகர்த்தர்களில் ஒருவராகவும் திகழ்ந்த ஆற்காடு வீராசாமியை தமிழக மக்கள் மறந்திருக்க வாய்ப்பே இல்லை.
ஒரு காலத்தில் ஓஹோவென ஊடக வெளிச்சத்தில் இருந்த ஆளுமைகளும், பிரபலங்களும் கால ஓட்டத்தில் ஓய்வுக்கு தள்ளப்பட்டதில் ஆற்காடு வீராசாமி மட்டும் விதிவிலக்கல்ல.
தற்போது 83-வயதாகும் ஆற்காடு வீராசாமி புத்தகங்கள் படிப்பது, பேரப்பிள்ளைகளோடு பேசுவது என தனது நேரத்தை கழித்து ஓய்வெடுத்து வருகிறார்.
சென்னையைத் தொடர்ந்து கோவையிலும் பிளாஸ்மா வங்கி.. விரைவில் திறப்பு.. விறுவிறு நடவடிக்கை!
திமுக முன்னணி நிர்வாகி
கருணாநிதியின் நிழலாக அவரை பின் தொடர்ந்த நிர்வாகிகளில் ஆற்காடு வீராசாமியை போன்று யாரும் இருந்திருக்க முடியாது. அந்தளவுக்கு கருணாநிதி மீது கொண்ட பற்று காரணமாக அவரை தீவிரமாக பின் தொடர்வார் இவர். ஒரு கட்டத்தில் கருணாநிதிக்கு நடை தளர்ந்த போது, அவருக்கு ஊன்றுகோலாக தனது தோள்பட்டையை கொடுத்து கை தாங்கி மேடைக்கு அழைத்து வந்து அமரவைக்கவும் செய்தார். இப்படி கருணாநிதிக்கு வலதுகரமாகவும் திமுகவின் உட்கட்சி பிரச்சனைகளை பஞ்சாயத்து செய்யும் மத்தியஸ்தராகவும் விளங்கினார் ஆற்காடு வீராசாமி.
மின்சாரத்துறை அமைச்சர்
மின் வாரிய தலைமை பொறியாளருக்கு உதவியாளராக அரசு பணியில் சேர்ந்த இவருக்கு, காலம் கொடுத்த கொடையாக மின்சாரத்துறை அமைச்சர் பதவியே பிற்காலத்தில் கிடைத்தது. வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள குப்பாடிசத்திரம் என்ற குக்கிராமத்தில் இருந்து சென்னை சூளை பகுதிக்கு குடிவந்த இவருக்கு, திமுகவில் கிடைத்த முதல் கட்சிப் பதவி சூளை பகுதிச் செயலாளர். பேராசிரியர் அன்பழகனின் ஆரம்பகால அறிமுகம் மந்திரியாகவும், திமுக பொருளாளராகவும் உயர ஆற்காட்டாருக்கு வழிவகுத்து கொடுத்தது.
ஆற்காட்டார் வீடு
ஆற்காடு வீராசாமியை பொறுத்தவரை 1996-2011 வரையிலான 15 ஆண்டு காலம் திமுகவில் அதிகாரம் படைத்த நபராக வலம் வந்தார். இதன் காரணமாகவே கோபாலபுரத்திற்கும், ஆழ்வார்பேட்டைக்கும் செல்வதற்கு முன், எதற்கும் ஆற்காட்டார் காதிலும் போட்டு வைப்போம் என எண்ணி அவரது அண்ணா நகர் இல்லத்தில் கட்சியினர் சாரை சாரையாக குவிந்தனர். ஆற்காடு வீராசாமிக்கும் முரசொலி மாறனுக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்தும் யாரையும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்காமல் இருவரையும் மெயிண்டெயின் செய்து வந்தார் கருணாநிதி.
மின்வாரியம்
தமிழ்நாடு மின் வாரிய ஊழியராக தனது பணியை தொடங்கியதாலோ என்னவோ, மின் வாரியம் தொடர்பான விவகாரங்களில் அனைத்து தகவல்களையும் அத்துபடியாக வைத்திருந்தார். அதிகாரிகளை கேள்விக்கணைகளால் துளைத்தெடுப்பார். இப்படி இருந்த மனிதன் தான் 2008-ம் ஆண்டுக்கு பிறகு உடல்நலக் குறைவு, வயது முதிர்வு காரணமாக தடுமாறத் தொடங்கினார். துறை ரீதியான செயல்பாடுகளில் பழைய வேகம் குறைந்தது. விளைவு மின் வெட்டு பிரச்சனை திமுக ஆட்சியையே பலி வாங்கும் அளவுக்கு சென்றது.
பதவி விலகினார்
இதனிடையே மு.க.ஸ்டாலின் பொருளாளராக வர வேண்டும் என்பதற்காக அந்தப் பதவியில் இருந்து விலகி முழுநேர அரசியலுக்கு விடை கொடுத்தார். கருணாநிதிக்கும் அன்பழகனுக்கும் இடையே அவ்வப்போது ஏற்படும் மனஸ்தாபங்களை உடனடியாக தலையிட்டு அதை முடிவுக்கு கொண்டு வருவதில் ஆற்காட்டார் கெட்டிக்காரராக திகழ்ந்தார். அதேபோல் மு.க.அழகிரிக்கும் மு.க.ஸ்டாலினுக்குமான மனக்கசப்புகளை அடிக்கடி பேசி தீர்த்து வைத்திருக்கிறார்.
கலாநிதி வீராசாமி
ஆற்காட்டாருக்கு இரண்டு மகன்கள் அதில் ஒருவர் மருத்துவர் மற்றொருவர் பொறியாளர். மருத்துவரான கலாநிதி வீராசாமியை அரசியல் வாரிசாக கொண்டு வந்துள்ளார் இவர். வடசென்னை மக்களவை உறுப்பினராக உள்ள கலாநிதி வீராசாமியை பொறுத்தவரை தனது தந்தை குணாதிசயங்களில் இருந்து சற்று மாறுபட்டு காணக்கூடியவர். பேச்சு, நிர்வாகம், உள்ளிட்ட விவகாரங்களில் தனது தந்தை ஆற்காடு வீராசாமியோடு ஒப்பிடுகையில் சற்று பின் தங்கியுள்ளார்.
உடல்நலக் குறைவு
தற்போது 83 வயதாகும் ஆற்காடு வீராசாமி சென்னை அண்ணா நகரில் உள்ள தனது இல்லத்தில் முழு நேர ஓய்வில் இருந்து வருகிறார். ஏற்கனவே இடுப்பு அறுவைச் சிகிச்சை செய்துகொண்டவர் என்பதாலும், வயது முதிர்வாலும் அவரால் முன்பை போல் நடக்க முடியாத நிலை உள்ளது. புத்தகங்களை வாசிப்பது, பழைய நினைவுகளை அசைபோடுவது என தனது நேரத்தை செலவிட்டு வரும் ஆற்காடு வீராசாமியின் உடல்நிலை முன்பைக் காட்டிலும் இப்போது தளர்ந்துவிட்டது.