"ஃபேக்டர் 4".. சாஸ்திரி செய்த அதே தவறை செய்யும் டிராவிட்! இந்திய டீமை துரத்தும் பூதம்! கவனிச்சீங்களா
சென்னை: உலகக் கோப்பை டி 20 தொடர் நெருங்கி வரும் நிலையில் இந்திய அணியில் 4 விதமான பிரச்சனைகள் இருக்கின்றன. இந்த பிரச்சனைகளை சரி செய்யாத பட்சத்தில் இந்திய அணிக்கு அது பெரிய சிக்கலாக மாறும் வாய்ப்புகள் உள்ளன.
உலகக் கோப்பை டி 20 தொடர் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. இந்திய அணி ஆடும் முதல் போட்டி அக்டோபர் 23ம் தேதி நடக்க உள்ளது.
பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்த தொடர் நடக்க உள்ளது. இந்த நிலையில்தான் இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக பும்ரா வெளியேறி உள்ளார்.
அதேபோல் காயம் காரணமாக ஜடேஜா வெளியேறி உள்ளார். இந்த நிலையில்தான் இந்திய அணி இன்னும் முழுமை அடையாமல் சிக்கலில் மாட்டி உள்ளது.
ஆசியக் கோப்பை: ”போர் கண்ட சிங்கம்” இலங்கை கிரிக்கெட்டுக்கு புத்துயிர் கொடுத்த ”ஒரு ஆபத்து”
என்ன சிக்கல்
இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்டு உள்ள இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் , தினேஷ் கார்த்திக், யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். இதில் பும்ரா இல்லை. ஜடேஜா இல்லை. இந்திய அணிக்கு 4 விஷயங்கள் சிக்கலாக மாறி உள்ளது. 2019 உலகக் கோப்பை 50 ஓவர் தொடருக்கு முன்பாக சாஸ்திரி கோச்சிங்கில் இந்திய அணி செய்த அதே தவறை இந்த முறை டிராவிட் கோச்சிங்கில் செய்து வருகிறது.
பேக்டர் 1
இந்திய அணி நிலையாக எந்த வீரரையும் பவுலிங்கில் பயன்படுத்துவது இல்லை, அதாவது அதிக அளவில் ரொட்டேஷன் செய்கிறது. சிராஜ், உமேஷ், அவேஷ், உம்ரான் என்று அடுத்தடுத்து ரொட்டேஷன் செய்கிறது. அதிக அளவில் பரிசோதனைகளை செய்கிறது. சாஸ்திரி - கோலி இந்திய அணியை வழி நடத்திய போதும் இதேபோல் இந்திய அணி அடிக்கடி பவுலர்களை மாற்றியது. நிறைய சோதனை முயற்சிகளை செய்தது. இந்த சோதனை முயற்சிகள்தான் இந்திய அணிக்கு பெரிய அளவில் தலைவலியாக மாறியது.
பேக்டர் 2
இந்திய அணியில் ஒரு பேட்டிங் ஆல் ரவுண்டர் குறைக்கிறார். 2019 உலகக் கோப்பையில் இந்திய அணியில் விஜய் சங்கரை தேவையின்றி ஆல் ரவுண்டர் என்று நம்பி எடுத்தனர். கடந்த வருடம் டி 20 உலகக் கோப்பையில் பாண்டியா இருந்தாலும் அவர் பார்மில் இல்லை. இந்த வருடம் நன்றாக இருந்த ஆல் ரவுண்டர் ஜடேஜா வெளியேறிவிட்டார். இப்போது மீண்டும் அக்சர் பட்டேலை அங்கே இறக்கி உள்ளனர். இடையில் ஹூடா, வெங்கடேஷ் ஐயர் போன்றவர்களை இறக்கி தேவையின்றி சோதனை முயற்சிகளை இந்திய அணி செய்தது.
பேக்டர் 3
இந்திய அணியின் ஓப்பனிங் இன்னும் சரியாகவில்லை. கடந்த உலகக் கோப்பையிலும் ராகுல் சொதப்பினார். இந்த முறையும் சொதப்பி வருகிறார். ஐபிஎல் தவிர சர்வதேச போட்டிகளில் அவர் சரியாக ஆடுவது இல்லை. சர்வதேச போட்டிகளில் ஆரஞ்ச் கேப் இல்லை என்பதாலோ, என்னவோ.. அவர் சரியாக ஆடுவது இல்லை. ஆசிய கோப்பை தொடரிலும் இவர் சரியாக ஆடவில்லை. இது கண்டிப்பாக இந்த முறையும் இந்திய அணிக்கு பெரிய சிக்கலாக இருக்கும்.
பேக்டர் 4
இதெல்லாம் போக இந்திய அணி 2019 உலகக் கோப்பை தொடரில் மிடில் ஆர்டரில் கடுமையாக சொதப்பியது. இந்த முறையும் தினேஷ் கார்த்திக் - பண்ட் இடையே இங்கி பிங்கிபாங்கி போட்டு உறுதியாக ஒரு முடிவு எடுக்காமல் சொதப்பி வருகிறது. இந்திய அணி இன்னும் மிடில் ஆர்டரில் ஹர்திக் பாண்டியாவிற்கு பின் ஆட போவது யார், தீபக் ஹுடாவிற்கு இடம் உண்டா என்பதில் முடிவு எடுக்க முடியாமல் சொதப்பி வருகிறது. உலகக் கோப்பை டி 20 தொடர் நெருங்கி வரும் நிலையில் இந்திய அணியில் உள்ள இந்த 4 விதமான பிரச்சனைகள் காரணமாக அணிக்கு அது பெரிய சிக்கலாக மாறும் வாய்ப்புகள் உள்ளன.