தமிழகம்.. ஊரடங்கில் மேலும் சலுகைகள்.. தியேட்டர்கள், பள்ளிகள் திறக்க அனுமதியா? இன்று அரசு அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவில் மேலும் என்னென்ன தளர்வுகள் என்பது பற்றி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவிக்க உள்ளார்.
அக்டோபர் 31ஆம் தேதியுடன் இந்த மாதத்துக்கான ஊரடங்கு உத்தரவு தளர்வுகள் நிறைவடைகின்றன.
புதிய ஊரடங்கு உத்தரவு தளர்வுகள், நவம்பர் மாதம் முதல் நாள் முதல் அமலுக்கு வரும். எனவே அது தொடர்பான அறிவிப்புகளை தமிழக அரசு இன்று மாலைக்குள் வெளியிடும்.
ஐரோப்பிய நாடுகள் ஆரம்பிச்சாச்சு.. இந்தியாவில் மீண்டும் வருகிறதா கடும் ஊரடங்கு? மத்திய அமைச்சர் பதில்
முதல்வர் ஆய்வு
புதிதாக தமிழகத்தில் எந்தெந்த மாதிரியான தளர்வுகள் வழங்கலாம் என்பது பற்றி மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழு ஆகியவற்றுடன் கடந்த 28ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியிருந்தார். ஒவ்வொரு முறையும் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்படும்போதும் இவ்விரு தரப்புடனும் முதல்வர் ஆலோசனை நடத்துவது வழக்கம்.
அதிக தளர்வுகள்
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்து வருவதாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே இன்னும் அதிக தளர்வுகள் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏற்கனவே பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், எஞ்சியிருப்பது ஒரு சில விஷயங்கள் மட்டும்தான்.
தியேட்டர்கள் திறப்பு
தியேட்டர்கள், பூங்காக்கள், கடற்கரை, கேளிக்கை பூங்காக்கள், சுற்றுலா தலங்கள் போன்றவைதான் இதுவரை திறக்க அனுமதிக்கப்படாத இடங்களாக உள்ளன. நவம்பர் மாதம் முதல் தியேட்டர்களில் உள்ளிட்ட இந்த இடங்களுக்கு அனுமதி வழங்கப்படலாம் என்று தெரிகிறது. அதேநேரம், பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பதில் அரசு அவசரம் காட்டாது என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பள்ளிகள் திறப்பு
டிசம்பர் மாதம் முதல் அவசர கால அடிப்படையில், கொரோனா தடுப்பூசிகள் அமலுக்கு வர வாய்ப்பு இருப்பதாக மருத்துவ துறை வட்டாரங்கள் கூறுகின்றன. எனவே, பள்ளி, கல்லூரிகள் திறப்பு பற்றி அதன் பிறகுதான் முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. இந்த அறிவிப்பில் என்ன மாதிரி சலுகைகள் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. குறிப்பாக திரையரங்குகளை திறப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதால், அவர்களும் இந்த அறிவிப்பை மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.