இந்திய அணி செய்த 'முக்கிய' தவறுகள்! பாகிஸ்தானுடன் தோற்க காரணம் இதுதான்! மீண்டு வருவோம் "டோன்ட் வொரி"
சென்னை: 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி முதல் முறையாக 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தோல்வியை தழுவி இருக்கலாம், உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக பாகிஸ்தான் அணியிடம் தோற்று போய் இருக்கலாம், ஆனால் இதற்காக நாம் வருத்தப்பட்டு மூலையில் முடங்கி கிடக்க தேவை கிடையாது.
விருட்டென்று விசுவரூபம் எடுத்து கிளம்ப வேண்டியது தான் நமது அடுத்த குறிக்கோளாக இருக்க வேண்டும்.
பொள்ளாச்சி பலாத்கார வழக்கு.. கைதானவர்களுக்கு சாலையோரம் கொடுத்த 'சலுகை..' 7 போலீசார் அதிரடி சஸ்பெண்ட்
கண்டிப்பாக பல வருடங்களுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் மோதுவதால் ஒரு உச்சகட்ட எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்தது. பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை பல வருடங்களாக இந்திய பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ளவில்லை. ஏனென்றால் அவர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
கடுமையான அழுத்தங்கள்
இது தவிர, பல தரப்பிலிருந்தும் எழுப்பப்பட்ட கடுமையான போட்டி தொடர்பான எதிர்பார்ப்புகள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கூடுதல் சுமையாக மாறி விட்டது. அழுத்தம் காரணமாக எழுந்த பதற்றம், போதிய அளவுக்கு பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளாத அனுபவம் இன்மை, மற்றும் பாகிஸ்தான் அணியை கத்து குட்டி அணி என்று குறைத்து மதிப்பிட்டது, ஆகிய மூன்றும் இந்திய அணி தோல்விக்கு முக்கிய காரணங்களாக மாறின. என்னதான் ஐபிஎல் தொடரில் சரியாக ஆடாவிட்டாலும் ஐசிஐசிஐ தொடர்களில் சிறப்பாக ஆடக்கூடிய விராட்கோலி தான் கிங் கோலி என்பதை இன்றைய போட்டியில் நிரூபித்துக் காட்டினார். அதே நேரம் ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக ஆடிய அனைத்து வீரர்களும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி என்பதால் பதட்டத்தின் காரணமாக கோட்டை விட்டு நடையை கட்டினர்.
முதல் முறையாக தோல்வி
இந்திய அணி முதல் முறையாக உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஒன்றில் பாகிஸ்தானிடம் இப்போதுதான் தோல்வியடைந்துள்ளது. இதேபோல இந்திய 20 ஓவர் கிரிக்கெட் அணி முதல் முறையாக 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றுள்ளது இதுதான் முதல் முறை. இது மிகப்பெரிய தோல்வி தான், மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால் நமது வீரர்களின் திறமை உலகம் அறிந்த விஷயம். பதட்டத்தின் காரணமாகவோ அல்லது சரியான திட்டமிடல் இல்லாததாலோ அல்லது பாகிஸ்தான் அணியை மிகவும் குறைத்து மதிப்பிட்டு விட்டதாலோ ஏதோ ஒரு இடத்தில் நாம் சரிந்து விட்டோம். இதை நினைத்து வெட்கப்படவோ வேதனைப்படவோ தேவை கிடையாது. வீறுகொண்டு எழுந்து நாம் யார் என்பதை காட்ட வேண்டியதுதான் அடுத்தகட்ட பணியாக இருக்க வேண்டும்.
வாழ்வா சாவா போட்டிகள்
இனி நாம் மோதப்போகும் போட்டிகள் வாழ்வா சாவா என்ற அளவுக்கு போட்டிகளாக மாறப்போகின்றன இந்த நேரத்தில் மன உறுதியை இழந்து விடுவது போட்டியை விட்டு வெளியேறி விடுவதற்கு சமம். அதற்கு ஒருபோதும் இடம் தரக்கூடாது. இந்த நேரத்தில்தான் ரசிகர்கள் நம்ம வீரர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.
நாம்தான் காலரைத் தூக்கி விடவேண்டும்
இம்ரான்கான், வாசிம் அக்ரம், சோயிப் அக்தர் சக்லைன் முஷ்டாக் போன்ற உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு நாம் இதற்கு முந்தைய உலகக் கோப்பை போட்டிகளில் வெற்றி வாகை சூடியது வரலாறு. இத்தனை நாட்களாக ஜெயித்த ஒரு அணி இன்று தோற்று இருக்கிறது. இதற்கு பாகிஸ்தான் பெரிதாக பெருமைப்பட தேவை கிடையாது. பல தசாப்தங்களாக நம்மிடம் தொடர்ந்து அடிவாங்கி புறமுதுகிட்டு ஓடியது பாகிஸ்தான் அணி. இத்தனை வருடத்திற்கு பிறகு ஏதோ ஒரு ஆறுதல் வெற்றி கிடைத்துவிட்டது அவர்களுக்கு. அவ்வளவுதான் என்று நாம் கடந்து செல்ல வேண்டுமே தவிர ஏதோ நாம்தான் அடிக்கடி தோற்றதை போன்று நமக்கு நாமே உடைந்து போய் விடக் கூடாது என்ற உண்மையை ரசிகர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
ரசிகர்கள் ஆதரவு அவசியம்
ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவுதான் அடுத்தடுத்த போட்டிகளில் இந்திய அணி வீறுகொண்டு எழ வைக்கும். ஒவ்வொரு வீரர் பெயராக தோண்டி எடுத்து அவரை தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்டிக் கொண்டு இருப்பது வருங்காலத்துக்கு உதவாது.
விளையாட்டில் எதற்கு மானத்தை வைக்க வேண்டும்
பாகிஸ்தானுடன் தோற்றது மான பிரச்சினை என்று பலரும் கூறுவதை நான் சமூக வலைத்தளத்தில் பார்க்கிறோம். ஆனால் விளையாட்டு என்பது யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ அவர்கள் வெற்றி பெறக்கூடிய ஒரு ஏற்பாடுதான் என்பதுதான் எதார்த்தம். சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் தோற்று விடக் கூடாது என்று நாயகன் பதட்டத்தோடு பேசும்போது அவரது மனைவி கதாபாத்திரம் கூறும் வசனங்கள் இங்கு ரொம்பவே பொருத்தம்.. விளையாட்டில் ஏன் மானத்தை வைக்க வேண்டும். நல்லா விளையாடினால் ஜெயிக்க போகிறோம். இதுதான் அந்த டயலாக். இவ்வளவுதான் விஷயம். எழுந்து வா இந்திய அணியே..