ஜி.கே.வாசன் என்ன செய்கிறார்.. என்ன செய்ய போகிறார்.. என்ன செய்ய வாய்ப்புண்டு?
தமாகா தலைவர் ஜிகே வாசன் முன்பு உள்ள சாய்ஸ்கள் இவைதான்
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் என்னவோ செய்கிறார், ஆனால் என்ன செய்கிறார் என்றுதான் தெரியவில்லை. அவரது அறிக்கை அதைத்தான் சூசகமாக சுட்டிக் காட்டுகிறது.
தமிழகம் கண்ட வித்தியாசமான இளம் தலைவர்களில் ஜி.கே.வாசனும் ஒருவர். ஒரு காலத்தில் தமிழக அரசியல் களத்தை ஆட்டிப்படைத்த சக்தியாக திகழ்ந்தவர். தனது தந்தை போட்டுக் கொடுத்த அழகான அடித்தளத்தை அப்படியே வலுவாக்கி தேசிய அளவில் உயருவார் என்று கூட எதிர்பார்த்தனர்.
ஆனால் அடித்தளத்தை மட்டும் வைத்துக் கொண்ட ஜி.கே.வாசன், அதை வலுவாக்கவும் தவறினார், அதை மேலும் மேலும் வளர்க்கவும் மறந்தார். இதனால் வாசம் இல்லாத மலராக மாறிப் போனார் ஜி.கே.வாசன்.
வாக்கு வங்கி
தமிழ் மாநில காங்கிரஸை தொடர்ந்து நடத்தாமல் காங்கிரஸுடன் இணைத்ததுதான் அவர் செய்த முதல் தவறு என்கிறார்கள். அதை விட பெரியதவறு, அங்கிருந்து வெளியேறி மீண்டும் தமாகாவை ஆரம்பித்தது. ஆரம்பித்த அவருக்கு அதை நடத்த முடியாமல் திணறல்தான் ஏற்பட்டது. காரணம், தனக்கென எந்த வாக்கு வங்கியையும் அவர் உருவாக்கி வைத்துக் கொள்ளாமல் போனது.
மைனஸ் பாயிண்ட்டுகள்
விளைவு, முக்கியத் தலைவர்களை அவர் இழந்தார். உடன் இருந்த நல்ல தலைவர்கள் எல்லாம் விலகி காங்கிரஸுக்குப் போய் விட்டனர். முடிவெடுப்பதில் நிதானம், எதிலும் அவசரம் காட்டாதது என ஏகப்பட்ட மைனஸ் பாயிண்டுகளுடன் நடமாடி வரும் ஜி.கே.வாசன் தனது கட்சியை வலுவாக்க இன்று வரை பெரிய அளவில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது ஆச்சரியமானது.
வதந்திகள்
தமாகா இருக்கு, ஆனால் எங்கே இருக்கு என்பதுதான் இன்றைய நிலவரமாக உள்ளது. இதைக் கண்டு அவர் கலவரமாகவில்லை என்பது அரசியலில் வித்தியாசமானது. இந்த நிலையில்தான் அவரை வைத்து சில வதந்திகள் கிளம்பி விட்டன. அவர் பாஜகவில் இணையப் போவதாக ஒரு வதந்தி வெளியானது. அதை அவர் உடனடியாக மறுத்து விட்டார். ஆனால் இப்போது காங்கிரஸில் வந்து சேருங்க என்று கே.எஸ். அழகிரி அழைப்பு விடுகிறார்.
காங்கிரஸ்
உண்மையில் அழகிரி அழைப்பு விடுத்திருப்பது ஜி.கே.வாசனையா என்ற கேள்வி பின்னாடியே வருகிறது. வாசனைத் தவிர மற்றவர்களைத்தான் காங்கிரஸ் வரவேற்க தயாராக இருக்கும். வாசனை அது உள்ளே வர விடாது என்று தெரிகிறது. காரணம், அந்த அளவுக்கு வாசன் எதிர்ப்பு லாபி காங்கிரஸில் பலமாக உள்ளது. அத்தனை பேரும் ஒரு காலத்தில் மூப்பனாரால் பலனடைந்தவர்கள் என்பதுதான் இதில் கொடுமையானது.
தஞ்சாவூர்
தந்தையை விரும்பியவர்கள், அவரால் பலனடைந்தவர்கள் மகனை வெறுக்கிறார்கள், வரவிடாமல் தடுக்கிறார்கள். அதைப் பற்றி வாசனும் கூட கவலைப்பட்டது இல்லை. அவருக்கு இப்போது தேவை ஒரு அதிகாரம். கரைந்து போய்க் கொண்டிருக்கும் கட்சியை காப்பாற்ற அது உடனடியாக தேவை. அதுதான் எம்.பி. பதவி. தஞ்சாவூரில் அவரது கட்சி வெல்லுமா என்று தெரியவில்லை. வென்றாலும் கூட அது பெரிதாக பலன் கொடுக்காது. மாறாக வாசன் பதவியில் இருந்தால்தான் கட்சிக்கு பலம் கிடைக்கும்.
மறைமுக டீல்?
இந்த கோணத்தில்தான் அவர் பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் மறைமுகமாக டீல் பேசி வருகிறாரா என்ற சந்தேகம் எழுகிறது. முன்பு இப்படித்தான் திருநாவுக்கரசர் பாஜகவில் இணைந்து ராஜ்யசபா எம்பியாகி, மத்திய அமைச்சருமாகி தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். இப்போது காங்கிரஸுக்கும் வந்து விட்டார். அதன் தலைவராகவும் ஒரு ரவுண்டு முடித்து விட்டார். இதே பாணியில் வாசனும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயல்கிறாரா என்று தெரியவில்லை.
உயர் பதவி
வாசன் மீண்டும் காங்கிரஸில் சேர விரும்பினால் ராகுல் காந்தி முதலில் பலமாக இருக்க வேண்டும். அவர் பிரதமர் பதவி போன்ற உயர் பதவியில் அமரும்போதுதான் வாசனால் காங்கிரஸில் சேருவதை நினைக்க முடியும். இல்லாவிட்டால் சுற்றியிருப்பவர்கள் ராகுல் காந்தியிடம் எதையாவது போட்டுக் கொடுத்து உள்ளே வர விடாமல் செய்யத்தான் முயல்வார்கள். இவர்களை மீறி ராகுல் காந்தி செயல்பட வேண்டும் என்றால் ராகுல் காந்தி உயர் பதவியில் வலுவாக அமர வேண்டியது முக்கியம்.
முக்கிய இடம்
இன்னொரு ஆப்ஷன் வாசனுக்கு இருக்கிறது. அது என்னவென்றால்.. ரஜினிகாந்த். மூப்பனார் - ரஜினிகாந்த் உறவு உலகம் அறிந்தது.. செவ்வாய் கிரகம் வரை தெரிந்த ஒன்று. அந்தப் பாசம், வாசன் மீதும் ரஜினிக்கு எப்போதும் உண்டு. ஒரு வேளை அவர் கட்சி தொடங்கினால், நிச்சயம் வாசனுக்கும் ஒரு முக்கிய இடத்தை ரஜினி கொடுக்கக் கூடும். எனவே அதுவரை வாசன், அரசியலில் தாக்குப்பிடித்தாக வேண்டும். இப்படி பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு வாசன் ஏதோ செய்து கொண்டிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசுகிறார்கள்.
பார்க்கலாம்.. அரசியலில் எதையுமே கடைசி விநாடி வரை கணிக்க முடியாது.