பொன்முடி தம்பதியின் தண்டனை என்ன? 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைப்பு! சிறை செல்ல தேவையில்லை
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அது போல் ரூ 50 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் இருவரும் தேசியக் கொடி நீக்கப்பட்ட காரில் தனது வீட்டிலிருந்து உயர்நீதிமன்றத்திற்கு வந்தனர்.

அங்கு நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்படவுள்ள அறை எண் 46 இல் காத்திருந்தனர். அவர்களுடன் மகன் சிகாமணி வந்திருந்தார். இந்த நிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பொன்முடி, விசாலாட்சியிடம் தண்டனை விவரங்கள் குறித்து என்ன சொல்கிறீர்கள் என நீதிபதி கேட்டார்.
அப்போது பொன்முடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, தண்டனை வழங்கும் போது அவர்களுடைய வயது மற்றும் மருத்துவ சிகிச்சைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். குறைந்தபட்ச தண்டனை வழங்கவும் கோரிக்கை வைத்தார். பொன்முடியின் மருத்துவ அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
பொன்முடியின் வயதையும் மருத்துவ காரணங்களையும் பதிவு செய்கிறேன், ஆனால் கீழமை நீதிமன்ற தீர்ப்பு ரத்து செய்தது செய்ததுதான். அதில் மாற்ற முடியாது என நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து தண்டனை விவரங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயச்சந்திரனால் அறிவிக்கப்பட்டது.
பொன்முடிக்கு தண்டனை: அதன்படி பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அது போல் ரூ 50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தை செலுத்த தவறினால் ஆறு மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். மேல்முறையீடு செய்யும் வகையில் சிறை தண்டனையை 30 நாட்கள் நிறுத்தி வைப்பதாக நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்தார். மேல்முறையீடு செய்ய கூடுதல் அவகாசம் தேவைப்பட்டால் 30 நாட்களுக்கு பிறகு நீதிமன்றத்தை நாடலாம் என்றும் தெரிவித்திருந்தார். 30 நாட்கள் அவகாசத்திற்கு பின் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
அவருடைய மனைவி விசாலாட்சிக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் , 50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதனால் அவர்கள் இருவரும் தற்போது சிறைக்கு செல்ல தேவையில்லை. பொன்முடிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவருடைய அமைச்சர் பதவியும், எம்எல்ஏ பதவியும் தகுதியிழப்பு ஏற்பட்டுள்ளது.
பின்னணி என்ன: கடந்த 2006- 2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் உயர்கல்வி, கனிமவளத் துறை துறை அமைச்சராக இருந்தார் பொன்முடி. அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ 1.73 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக அதிமுக ஆட்சி காலத்தில் வழக்கு தொடரப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கடந்த 2011 ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இதையடுத்து விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு கடந்த 2015 ஆம் ஆண்டு இந்த வழக்கு மாற்றப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரமூர்த்தி இந்த வழக்கில் பொன்முடி, மனைவி விசாலாட்சி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என கூறி இருவரையும் விடுதலை செய்தார். இந்த தீர்ப்பு கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி வழங்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் கடந்த 2017ஆம் ஆண்டு மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. இந்த நிலையில் இது நீதிபதி ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. கடந்த நவம்பர் 27ஆம் தேதி இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயசந்திரன் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தார். இந்த நிலையில் நேற்று அவர் தீர்ப்பளித்தார். இந்த நிலையில் இன்றைய தினம் பொன்முடிக்கும் அவருடைய மனைவி விசாலாட்சிக்கும் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications