நட்சத்திர ஹோட்டலில் பேசியது என்ன?.. தூது போன பாஜக.. அறிக்கை வெளியிட்ட சசி.. நமட்டு சிரிப்பில் அதிமுக
சென்னை: தீவிர அரசியலில் ஈடுபட மாட்டேன் என்ற சசிகலாவின் மனமாற்றத்திற்கு அமித்ஷா ஈபிஎஸ்- ஓபிஎஸ்ஸிடம் கொடுத்த கிரீன் சிக்னலே காரணம் என சொல்லப்படுகிறது.
எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம், அமித்ஷா உள்ளிட்டோர் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குறித்து மட்டுமே 3 மணி நேரமாக பேசினார்கள் என்பது அபத்தமாக உள்ளது. அவர்கள் சசிகலா குறித்தும் பேசியுள்ளார்கள் என்றே விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து பேசப்பட்டதாகவே பெரும்பாலான அரசியல் நோக்காளர்கள் தெரிவிக்கிறார்கள். இதுதான் சசிகலாவை அரசியலில் இருந்து ஒதுங்கும் முடிவை எடுக்க வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சசிகலா அறிவிப்பு டிரெய்லர்தான்.. இனிதான் மெயின் பிக்சர்.. தயாராகும் தூது.. விரைவில் பெரிய திருப்பம்!
அமித்ஷா கோரிக்கை
அன்று நள்ளிரவு லீலா பேலஸில் அமித்ஷாவின் கோரிக்கையை ஏற்க எடப்பாடி பழனிச்சாமியும் ஓ பன்னீர் செல்வமும் ஏற்க மறுத்துவிட்டனர். மாறாக அவரை கட்சியில் சேர்த்தாலோ இல்லை அமமுகவை இணைத்தாலோ மறுபடியும் பழையபடி சசிகலா குடும்பத்தினரின் கை ஓங்கி இருக்கும் என்பதால் மறுத்துவிட்டனராம்.
ஓட்டுக்களை பிரிக்கும்
சசிகலாவின் அரசியல் பிரவேசம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றாலும் ஓட்டுக்களை பிரிக்கும். இது திமுகவுக்கு சாதகமாக அமைந்துவிடும். ஓட்டுக்கள் பிரிந்து வரும் தேர்தலில் திமுக ஜெயித்துவிட்டால் மத்திய அரசின் திட்டங்களை திமுக எதிர்க்கும். மேலும் தமிழகத்தில் பாஜக மலரவே மலராது என்ற வார்த்தை அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு சவாலாக அமைந்துவிட்டது.
திமுகவை விடக் கூடாது
எப்படியாவது அதிமுக ஆட்சியை தக்க வைக்க வேண்டும். திமுகவை வர விடக் கூடாது.. கூடவே கணிசமான எண்ணிக்கையில் பாஜக சட்டசபைக்குள் போய் விட வேண்டும். என்பதில் பாஜக தலைமை தீவிரமாக உள்ளது. இதனால் சசிகலாவின் ஆதரவு நிலைப்பாட்டுக்கு ஈபிஎஸ் ஓபிஎஸ் ஒப்புக் கொள்ளாததால், அமித்ஷா மூலம் சசிகலாவுக்கு தூது சென்றிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜக நிர்பந்தம்
இபிஎஸ், ஓபிஎஸ் உறுதியாக இருந்ததால் வேறு வழியின்றி அவர்கள் பக்கம் சைட் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு பாஜக தள்ளப்பட்டுள்ளதாம். மறுபக்கம், சசிகலாவுக்கு மறைமுகமாக சில வழக்கு மிரட்டல்கள் போனதாக சொல்கிறார்கள். சொத்துக் குவிப்பு வழக்கிற்கே பல கோடி மதிப்பிலான சொத்துகள் பறி போன நிலையில் பழைய விஷயங்களை தூசி தட்டினால் எதுவும் மிஞ்சாது என்றும் எச்சரிக்கை கலந்த அறிவுரை வழங்கப்பட்டதாம்.
வார்னிங்
இதையெல்லாம் தீவிரமாக யோசித்த சசிகலாவுக்கு மேலும் ஒரு வார்னிங் கொடுக்கப்பட்டதாம். இது போன்று மேலும் மேலும் வழக்குகளை போடுவதால் அதிமுகவை கைப்பற்றினாலும் தேர்தலில் போட்டியிட முடியாமல் வெறும் பொம்மை போல் இருக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்று சொல்லப்பட்டதாம். இதையெல்லாம் சிந்தித்து பார்த்தே சசிகலா ஒரு முடிவுக்கு வந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்தே சசிகலா நேற்று அந்த அறிக்கையை வெளியிட்டாராம்.