இடைத்தேர்தல் வேட்பாளர்.. கோரிக்கை வைத்த முக்கிய நிர்வாகிகள்.. ‘ஓகே’ சொன்ன ஓபிஎஸ்.. என்ன நடந்தது?
சென்னை : நேற்று சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்திடம் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமி அணியினர் தங்கள் வேட்பாளரை அறிவித்த பிறகு நாம் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈரோடு இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் களமிறங்கும் நிலையில் அதிமுக இரண்டு பிரிவாக போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி அணியினர் தேர்தல் வேலைகளைத் தீவிரப்படுத்திய நிலையில், நேற்று ஓபிஎஸ் மாவட்ட செயலாளர்களைக் கூட்டி ஆலோசித்து இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி என அறிவித்தார்.
அதிமுகவின் இரண்டு அணிகளையும் ஒன்றிணைத்து ஒரே அதிமுக வேட்பாளராக போட்டியிட வைக்க பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் முயன்ற நிலையில், அந்த முயற்சி பலிக்கவில்லை.
இரட்டை இலை ஓபிஎஸ்ஸுக்கா? ஆலோசனை கூட்டத்திற்கே அழைப்பு இல்லையாமே.. 'திகுதிகு' ஈரோடு இடைத்தேர்தல்!
ஓபிஎஸ் ஈபிஎஸ்
எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தனித்தனியாக கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்த நிலையில், தமாகா தலைவர் ஜிகே வாசன் போன்றோர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். ஓபிஎஸ்ஸும் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்த நிலையில், யாரும் இதுவரை வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கவில்லை. அதேசமயம், பாஜக எடுக்கும் முடிவைப் பொறுத்தே எங்கள் முடிவை அறிவிப்போம் எனக் கூறியுள்ளனர்.
ஆலோசனைக் கூட்டம்
இதற்கிடையே குஜராத் மாநிலத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓபிஎஸ், அங்கு முக்கிய பாஜக தலைவர்களைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் தமிழ்நாடு திரும்பிய ஓபிஎஸ், நேற்று மாலை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர், புகழேந்தி, மருது அழகுராஜ், தர்மர் எம்.பி மற்றும் ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஆதரவாளர்கள் வேண்டுகோள்
இந்தக் கூட்டம் சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் பலரும், எடப்பாடி பழனிசாமி தரப்பு, இடைத்தேர்தல் வேட்பாளரை அறிவித்த பின்னர் தான் நாம் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பொதுமக்களின் ஆதரவு பெற்ற செல்வாக்கு மிக்க நபரை நமது அணி சார்பில் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேட்பாளர்
இதனை ஏற்றுக்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள், ஈபிஎஸ் அணி சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பிறகே நமது அணி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் வேட்பாளரை தேர்வு செய்யும் அதிகாரம், ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்படுவதற்காக இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உறுதி
இதையடுத்து பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், "நான்கரை ஆண்டுகள் கேட்பாரற்று பணத்தை கொள்ளையடித்துள்ளனர். எம்.ஜி.ஆர் வகுத்த சட்ட விதியை மறைத்து அதை மதிக்காமல் செயல்படுகின்றனர். அதை இந்த இடைத்தேர்தலில் முறியடிப்போம். இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளோம். மக்கள் அனைவரும் எங்கள் பக்கம் உள்ளார்கள். உறுதியாக இரட்டை இல்லை சின்னம் எங்களுக்குதான் கிடைக்கும்.
ஊர் வந்து சேரமாட்டார்
சிலர், ஆள் இல்லாத கடையில் நாங்கள் டீ ஆத்துவதாகச் சொல்கிறார்கள் யார் டீ ஆத்துவது என்பதை ஈரோடு தேர்தல் முடிவு செய்யும். பாதை மாறிப் போனால் ஊர் வந்து சேராது, எடப்பாடி பழனிசாமி என்றைக்குமே ஊர் வந்து சேர மாட்டார். அதிமுக ஒன்றியணைய வேண்டும் என்பதுதான் தொண்டர்களின் விருப்பமாக இருக்கிறது. அதையேதான் நாங்களும் கூறி வருகிறோம்" எனத் தெரிவித்தார்.