பொதுக்குழுவை எப்படி ஒருங்கிணைப்பது... திமுக மாவட்டச் செயலாளர்களிடம் ஸ்டாலின் பேசியது என்ன..?
சென்னை: திமுகவின் புதிய பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்குழு வரும் 9-ம் தேதி நடைபெறவுள்ள உள்ள நிலையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தி முடித்துள்ளார் மு.க.ஸ்டாலின்.
அந்தக் கூட்டத்தில் பொதுக்குழு கூட்டத்தை காணொலிக் காட்சி மூலம் எப்படி ஒருங்கிணைப்பது என்பது பற்றி ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக விவாதிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல் 13 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைக்கும் பணிகளையும் முடுக்கிவிடுமாறு மாவட்டச் செயலாளர்களிடம் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
அதிமுகவை பலவீனப்படுத்த பாஜக அரசு முயற்சி... சசிகலா மீது கரிசனம் காட்டும் கே.எஸ்.அழகிரி..!
மு.க.ஸ்டாலின் பேச்சு
பரபரப்பான அரசியல் நகர்வுகள் திமுகவில் நடைபெற்று வரும் சூழலில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தியிருக்கிறார் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின். காணொலிக் காட்சி மூலம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டம் சுமார் ஒன்றரை மணி நேரம் நீண்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் முழுக்க முழுக்க பொதுக்குழு கூட்டம் ஒருங்கிணைப்பு பற்றியே பேசப்பட்டிருக்கிறது.
முக்கியத்துவம் வாய்ந்த
திமுகவின் புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்கும் பொதுக்குழு கூட்டம் வரும் 9-ம் தேதி நடைபெற உள்ளதால் அது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது. இதுவரை திமுகவில் 3 பொதுச்செயலாளர்கள் மட்டுமே இருந்திருக்கின்றனர். அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் அலங்கரித்த பதவியை துரைமுருகன் அலங்கரிக்கவுள்ளார். இதனால் இந்தப் பொதுக்குழுவை பொறுத்தவரை திமுகவினருக்கு ஸ்பெஷல் பொதுக்குழு.
ஒருங்கிணைப்பு
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் எல்லோரிடமும் பொதுக்குழுவை எப்படி ஒருங்கிணைக்க வேண்டும் என்பது பற்றி ஆலோசனைகள் வழங்கினார். மாவட்ட திமுக அலுவலகம் அல்லது பெரிய திருமண மண்டபத்தில் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் பொதுக்குழு உறுப்பினர்களை சமூக இடைவெளியுடன் அமர வைத்து அவர்களிடம் மினிட் நோட்களில் கையெழுத்து பெற வேண்டும் என்றும் அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் பொதுக்குழு கூட்டத்திற்கு பேட்ஜ் எப்படி முக்கியமோ அதைப்போல் மாவட்ட தலைநகரங்களில் ஒருங்கிணைத்து நடத்தப்படும் கூட்டத்தில் கலந்துகொள்பவர்களும் பேட்ஜ் அணிவது கட்டாயம் என கூறியிருக்கிறார் ஸ்டாலின்.
உரிய நேரத்தில்
அதேபோல் பொதுக்குழு உறுப்பினர்களை தவிர மாவட்டச் செயலாளர்கள் வேறு யாருக்கும் அரங்கிற்குள் அனுமதி தரக்கூடாது என்றும் உரிய நேரத்தில் அனைவரும் கலந்துகொள்ளும் வகையில் முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். அதேபோல் செல்போன் உள்ளிட்டவைகளுக்கும் அனுமதி மறுக்குமாறு அவர் கூறியிருக்கிறார். இதனிடையே தேர்தல் பணிகளில் மாவட்டச் செயலாளர்கள் முழு கவனத்தை செலுத்துங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளார் ஸ்டாலின்.