அரசியலுக்கு அப்பாற்பட்டு நாம் ஒருங்கிணைய வேண்டிய நேரம்... சோனியாவிடம் எடுத்துக்கூறிய ஸ்டாலின்
சென்னை: அரசியலுக்கு அப்பாற்பட்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒருங்கிணைய வேண்டிய நேரம் இது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சனை குறித்து சோனியாகாந்தி தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசிய அவர் இதனைக் கூறினார்.
மேலும், அனைத்துக் கட்சி வடித்தெடுக்க வேண்டிய கூட்டு தீர்மானத்தில் இடம்பெற வேண்டிய சில கோரிக்கைகளையும் ஸ்டாலின் சோனியாவிடம் எடுத்துக்கூறினார்.
அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது;
கொடூரமான நகைச்சுவை.. எங்கே பிளான்.. எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஆவேசமான சோனியா காந்தி
மெத்தனம்
''தமிழகத்தில் பா.ஜ.க.,வின் 'பிராக்சி' (Proxy) அரசாக அ.தி.மு.க. செயல்பட்டு வருவதால், இங்குள்ள நிலைமையும் கொடூரமாக உள்ளது. கொரோனா பிரச்சினையை அவர்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளாமல், மார்ச் மாத இறுதிவரை அனைத்தும் வழக்கம் போலவே செயல்பட்டு வந்தது''.
பொருளாதார பிரச்சனை
''நோய்த் தொற்றின் தாக்கம் குறையவே இல்லை.மருத்துவப் பிரச்சினைகள் மட்டுமின்றி, பொருளாதார பிரச்சினைகளும் கவனிக்கப்படவில்லை. ஊரடங்கு காலத்தில் இந்தியாவில் 40 கோடி பேர் வறுமையின் காரணமாக ஆபத்தான நிலைக்கு கொரோனாவால் தள்ளப்படுவார்கள் என்று முன்னதாகவே ஐ.நா.வின் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது''.
அரசியலுக்கு அப்பால்
''நாம் அனைவரும் ஒன்றிணைந்து, அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒருங்கிணைந்து நமது மக்களுக்கான கடமையை நிறைவேற்றுவோம்.
நெருக்கடிகள் மிகுந்த காலக்கட்டங்களில் கூட, இந்தியாவின் கூட்டாட்சித் தன்மையைப் புறக்கணித்துவிடக் கூடாது. அனைத்து மாநிலங்களையும் சேர்த்த கூட்டு நடவடிக்கைக் குழு ஆரம்பத்திலேயே துவக்கப்பட்டிருக்க வேண்டும்''.
ஜனநாயக நெறிமுறை
''கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கவோ, புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவோ அல்லது பொருளாதார நிவாரணங்களை வழங்கவோ, மத்திய அரசு எந்தவிதமான ஆக்கபூர்வ நடவடிக்கைகளை எடுக்கவில்லை. மாறாக ஜனநாயக நெறிமுறைகளையும் நிலைநிறுத்தப்பட்ட கொள்கைகளையும் மீறியே மத்திய அரசு செயல்பட்டுள்ளது''.
நிவாரணம்
''இந்த நெருக்கடியான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமும் உதவிகளும் வழங்குவது; சரியான கேள்விகளைக் கேட்டு அரசைப் பொறுப்புக்குள்ளாக்குவது என எதிர்க்கட்சித் தலைவர்களாக நமக்கு இரு முக்கிய பணிகள் உள்ளது. இந்த கொரோனா வைரஸ் காலகட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும், நானும் தமிழகத்தில் நிவாரண முயற்சிகள் மேற்கொள்வதில் முழுமையாக ஈடுபட்டு வருகிறோம்''.
கூடுத் தீர்மானம்
''ஊரடங்கு தொடர்ந்து நீடிப்பதால் வாழ்வாதாரம் இழந்து தவிப்பவர்களுக்காக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்ட நாட்களை 150 ஆக உயர்த்த வேண்டும். விவசாயிகள் மற்றும் சிறு தொழில் செய்வோருக்கான கடன்களை தள்ளுபடி செய்திட வேண்டும். நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் உள்ளவர்களின் கடன்களுக்கு காலம் தாழ்த்தி திருப்பி செலுத்துவதற்கான வசதி செய்து தரப்பட வேண்டும்.''