சித்ரா மரண வழக்கு.. எப்.ஐ.ஆரில் இருக்கிறது ட்விஸ்ட்.. மாறுபட்ட வாக்குமூலம் கொடுத்தது அம்பலம்
சென்னை: பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை, புகழ் நடிகை சித்ரா மரண வழக்கில் காவல்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில், அவரது தந்தை மற்றும் கணவர் ஆகிய இருவரும் மாறுபட்ட தகவல்களை தெரிவித்துள்ளனர்.
நடிகை சித்ரா, நேற்று முன்தினம் அதிகாலை, சென்னை நசரத்பேட்டையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சித்ரா தாயார், விஜயா, இது கொலைதான்.., தனது மருமகன் ஹேமந்த்தான் அடித்தே கொன்றார் என பேட்டி கொடுக்க, பரபரப்பு, மர்மம் உச்சத்திற்குப் போனது.
சித்ரா பிரதே பரிசோதனை
அதே நேரம், நேற்று நடைபெற்ற, சித்ரா பிரேத பரிசோதனையின்போது, அவர் தற்கொலை செய்தது உறுதியாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்து இந்த சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்தது. சித்ரா கன்னத்தில் உள்ள நகக்கீறல் அவரது நகரத்தால் ஏற்பட்ட கீறல்தான் என்று காவல்துறை கூறியுள்ளது. அதேநேரம், சித்ரா தற்கொலைக்கு யார் காரணம் என்ற கேள்விக்கான விடையை காவல்துறை தேட ஆரம்பித்துள்ளது.
சித்ரா தந்தை வாக்குமூலம்
இந்த நிலையில், காவல்துறை பதிவு செய்துள்ள எப்.ஐ.ஆரில் சித்ராவின் கணவர் மற்றும் தந்தை ஆகியோர் அளித்த வாக்குமூலம் மாறுபட்டதாக உள்ளது. சித்ராவின் தந்தை பெயர் காமராஜ். அவர் போலீசில் அளித்த தகவலில், சம்பவம் நடந்த முந்தைய நாள் இரவில், சித்ரா தன்னிடம் போனில் பேசினார் என்றும் மறுநாள் அதிகாலை 4 மணியளவில் தனது செல்போனுக்கு சம்மந்தி ரவிச்சந்திரன் கால் செய்ததாகவும் கூறியுள்ளார்.
கணவர் வெளியே போனார்
தான் போனை எடுக்காமல் தூங்கிக் கொண்டிருந்ததால், தனது மனைவியை ரவிச்சந்திரன் போனில் தொடர்பு கொண்டு,, சித்ரா உயிரிழந்துவிட்டதாக கூறினார். அதிகாலையில், படப்பிடிப்பு முடிந்து வந்த சிறிது நேரத்தில், ஹேமந்த்தை, காரிலுள்ள ஒரு பொருளை எடுத்துவர சித்ரா அனுப்பி வைத்துள்ளார். அப்போதுதான் கதவை உட்புறமாக தாழிட்டுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார் காமராஜ். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் திறந்து பார்த்தபோது சித்ரா தூக்கில் தொங்கியது தெரியவந்திருப்பதாக காமராஜ் தெரிவித்துள்ளார்.
குளிக்கப்போனதாக கூறிய கணவர்
அதேநேரம், கணவர் ஹேமந்த் அளித்த வாக்குமூலத்தில், சித்ரா, குளித்து விட்டு உடை மாற்ற வேண்டும் எனக் கூறி தன்னை வெளியே செல்லுமாறு கூறியதாகவும், அப்போதுதான் கதவை தாழிட்டதாகவும் கூறியிருந்தார். கணவரை ஏன் மனைவி வெளியே போகச் சொல்லிவிட்டு ஆடை மாற்ற வேண்டும் என்ற கேள்வி அப்போதே எழுந்தது.
மாறுபட்ட கருத்து
இந்த நிலையில்தான் எப்.ஐ.ஆரிலுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சித்ரா தன்னை காருக்கு போய் பொருளை எடுக்க கூறியதாக ஹேமந்த்தான், காமராஜிடம் கூறியிருக்க வேண்டும். ஆனால் போலீசில் ஏன் மாற்றிக் கூறினார்? என்ற கேள்விக்கு விடை தெரியவில்லை.
ஹேமந்த் பெற்றோர்
காவல்துறையினர் இரண்டாவது நாளான ஹேமந்த்திடம் நேற்று விசாரணை நடத்திய நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம், தங்கள் மகன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது, பொய்யானது என்று ஹேமந்த் பெற்றோர் தெரிவித்துள்ளனர். உண்மையை கண்டறிந்து தங்கள் மீது விழுந்த அவப்பெயரை நீக்க உதவ வேண்டும் என்று போலீசாருக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.