மொழியைக் காக்க இன்றும் கொதிக்கும் தமிழகம்.. பேரறிஞர் அண்ணா அப்படி என்ன பேசினார்..!
Recommended Video
சென்னை: தமிழ்மொழிக்காகவும், திராவிடஇனத்திற்காகவும் ஆட்சி மாற்றத்தை தமிழகத்தில் உருவாக்கி மிகப்பெரிய சமூக மாற்றத்துக்கு வித்திட்ட பேரறிஞர் அண்ணா இதே செப்டம்பர் 15ம் தேதி 1909ம் ஆண்டு காஞ்சிபுரத்தில் பிறந்தார்.
இந்தியாவை 'இந்தி'யாக மாற்ற மிகப்பெரிய முயற்சிகள் நடந்துவரும் இன்றைய சூழலில், அதற்கு அன்றே தமிழகத்தில் நிரந்தரமாக தடை போட்டவர் பேரறிஞர் அண்ணா என்று மக்களால் அன்போடுஅழைக்கப்படும் சி.என். அண்ணாதுரை. திராவிடய இயக்கங்கள் இன்று 50 ஆண்டுகளை தமிழகத்தை ஆண்டு வருகின்றன என்றால் அதற்கு விதை போட்டது அண்ணாதுரை.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இந்திய நாட்டின் ஆட்சி மொழியாக இந்தியை உயர்த்தி ஆங்கிலத்துக்கு விடை கொடுக்க நேரு தலைமயிலான மத்திய அரசு கடந்த 1963ம் ஆண்டு முடிவு செய்தது. இதற்கு அப்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்த பேரறிஞர் அண்ணா கடும் எதிர்ப்பு தெரிவித்து உரையாற்றினார்.
இது தான் ஜனநாயகம்
அவர் ஆற்றிய உரை இன்றைய சூழலுக்கு மட்டுமல்ல எப்போதும் பொருந்தும் என்பதால் அவற்றின் முக்கிய அம்சங்கள் சிலவற்றை இப்போது பார்ப்போம். "ஜனநாயகம் என்பது பெரும்பான்மை எண்ணிக்கை அடிப்படையிலான ஆட்சி மட்டும் அல்ல; சிறுபான்மை மக்களின் உரிமைகள், உணர்ச்சிகள் ஆகியவையும் புனிதம் என்று கருதி, அவற்றைக் காப்பாற்றுவது தான் ஜனநாயகம்.
பொதுமொழி எது
இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவாக ஒரு மொழி வேண்டும் என்று பலரும் வாதாடினர். அது ஏற்கப்பட்டால் இந்தியாவில் பேசப்படும் மொழிகளில் ஒன்றைத்தான் பொதுமொழியாக ஏற்க வேண்டும். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.
ஒற்றை மொழி என்பது அநீதி
இந்தியா 'ஒற்றை நாடு' என்று ஏற்றுக்கொள்வோமானால், இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், இந்தியா 'கூட்டாட்சி நாடு' இந்தியச் சமூகம் பன்மைத்துவம் கொண்டது. ஆகையால் ஒரே ஒரு மொழியைப் பொதுமொழியாக ஏற்பது ஏனைய மொழி பேசுவோருக்கெல்லாம் அநீதி இழைப்பதாகி விடும். அது மட்டுமல்ல சமூகத்தின் பெரும் பகுதி மக்களால் அம்மொழியைப் படிக்க முடியாமல் குறைகள் ஏற்படும்.
இந்தியா ஒரே நாடல்ல. இந்தியா பல்வேறு இனக் குழுக்களையும் மொழிக் குடும்பங்களையும் கொண்ட நாடு. இதனால் தான் இந்தியாவை 'துணை கண்டம்' என்று அழைக்கிறோம். இதனால்தான், ஒரே மொழியை இந்தியாவின் ஆட்சிமொழியாக நம்மால் ஏற்க முடியவில்லை.தேசிய கீதமான 'ஜனகண மன' பாடலும், தேசத் தாய் வாழ்த்தாக பாடப்படும் 'வந்தே மாதரம்' பாடலும் இந்தியில் இயற்றப்பட்டவை அல்ல. இந்தியை ஆட்சி மொழியாகத் திணிப்பது இந்தி பேசும் மாநிலங்களுக்கு திட்டவட்டமான, நிரந்திரமான சாதகமாக அமையும்" என்று கூறியிருக்கிறார் அண்ணாதுரை.
தமிழ் தான் செம்மொழி
இதபோல் நாடாளுமன்றத்தில் இன்னொரு முறை பேசிய அண்ணாதுரை "உயர்தனிச் செம்மொழியான தமிழ் மொழி என்னுடைய தாய் மொழி என்ற பெருமிதம் எனக்கு இருக்கிறது. எங்கள் உயிருடன், வாழ்வுடன் கலந்த மொழி தமிழ் மொழி, அந்த தமிழ் மொழி மற்றெதற்கும் தாழாத வகையில் ஆட்சி மொழி என்ற தகுதி தரப்படும்வரை நான் அமைதி பெறமாட்டேன், திருப்தி அடைய மாட்டேன். நான் தமிழுக்காக வாதாடுகிறேன். அதற்காக இந்திக்காக வாதாடுபவர்களின் தாய்மொழிப் பற்றை நான் மறுக்கவில்லை. அவர்கள் இந்திக்காகப் பாடுபடட்டும்" என்றார்
மற்றவர்களுக்கு எதிர்பாளன் அல்ல
இதேபோல் பேரறிஞர் அண்ணா நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது "நான் திராவிட இனத்தைச் சார்ந்தவன். நான் என்னை திராவிடன் என்று அழைத்துக் கொள்வதிலே பெருமைப்படுகிறேன். இப்படிக் கூறுவதால் நான் வங்காளிக்கோ மராட்டியருக்கோ குஜராத்தியருக்கோ எதிர்ப்பாளன் அல்ல. ராபர்ட் பர்ன்ஸ் சொன்னதுபோல, மனிதன் எப்படியிருந்தாலும் மனிதன்தான்" என்று கூறினார்.
சிறிய நாய்
இதேபோல் அறிஞர் அண்ணா இந்தி திணிப்புக்கு எதிராக ஆற்றிய மற்றொரு உரையில், உலகத்தோடு உரையாட ஆங்கிலம் இருக்கிறது. அப்படியானால் இந்தியாவுக்குள் உரையாட தமிழர்கள் இந்தியை ஏன் கற்க வேண்டும்? பெரிய நாய் செல்ல பெரிய கதவும், சிறிய நாய் செல்ல சிறிய கதவும் தேவையா? நான் சொல்கிறேன், பெரிய கதவின் வழியே சிறிய நாயும் செல்லட்டும் என்றார்.