உடைந்த தடைகள்.. அதிமுகவில் சசிகலா இணைப்பு? இனிதான் ஆட்டமே ஆரம்பம்!
சென்னை: அதிமுகவில் திடுக்கிடும் அரசியல் திருப்பங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. சிறையிலிருந்து சசிகலா ரிலீசானதும் அதிமுகவில் அவர் இணைவதற்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. தடைகள் அகலத் தொடங்கியுள்ளன. எனவே தேர்தலுக்கு முன்பு அதிமுக தலைகீழாக மாறவும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.
சசிகலாவும், அதிமுகவும் இணைந்து செயல்பட வேண்டும் என்று ஆரம்பம் முதலே வலியுறுத்தி வரும் மூத்த அரசியல் தலைவர்கள் இருவர். ஒருவர் கி.வீரமணி. இன்னொருவர் சுப்பிரமணியன் சுவாமி.
இருவருக்குமே நோக்கம் வேறு. ஆனால், அதிமுக-சசிகலா இணைந்து செயல்பட வேண்டும் என்ற புள்ளியில் இருவருக்கும் ஒரே எண்ணம்தான்.
கொம்பு சீவல்
அதேநேரம், சசிகலா-அதிமுக தனித்தனியாக இருப்பதுதான் பாஜகவை வளர்க்க உதவும் என்பது பாஜக மேலிடத்திற்கு நெருக்கமாக உள்ள தமிழகத்தைச் சேர்ந்த சில 'அறிவுஜீவிகள்' அட்வைசாக இருந்துள்ளது. எனவேதான், அதிமுகவில் ஒரு தரப்பை கொம்பு சீவும் வேலை துரிதமாக நடந்து கொண்டே இருந்தது. அப்படி எதிர்க்க தயாராகாத தலைவர்களை, ஆண்மையுடன் சம்மந்தப்படுத்தி பேசி, உசுப்பேற்றி கொம்பு சீவ மெனக்கெட்டனர் சிலர்.
திமுக முதல் டார்கெட்
இன்னொரு பக்கம், ரஜினிகாந்த் வருகையின் மூலம், திமுகவுக்கு செல்லும் வாக்குகளை பிரிக்க முடியும் என்றும் இந்த தரப்பு நம்பியது. பாஜகவை வளர்க்கிறோமோ இல்லையோ.. திமுகவை ஆட்சிக்கு வர விடக்கூடாது என்பதற்காகவே, இத்தனை மூவ்களும் எடுத்து வைக்கப்பட்டது. ஆனால் ரஜினி அரசியலுக்கு வர மாட்டேன் என்று கூறியதால் அனைத்து திட்டங்களும் தவிடுபொடியாகிவிட்டது.
ஓட்டு பிரியும்
இப்போது திமுகவை பலவீனப்படுத்த வேண்டுமானால் அதிமுகவை மேலும் வலுப்படுத்த வேண்டும். சசிகலா அணி தனியாக இருந்தால் அது நடக்காது. ஓட்டு பிரியும். இந்த நிலையில்தான், சசிகலாவை அதிமுகவில் இணைக்க மனதை 'கஷ்டமாக்கிக் கொண்டு' 'அறிவுஜீவிகள்' தரப்பு முன்வந்துள்ளது. எனவே சசிகலாவை அதிமுகவில் இணைக்க இருந்த ஒரே தடையும் விலகிவிட்டது.
தடைகள் தகர்ந்தது
துக்ளக் ஆண்டு விழாவில் நேற்று பேசிய அதன் ஆசிரியர் குருமூர்த்தி, சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார். வீடு பற்றி எரியும் போது கங்கை தண்ணீருக்காக காத்திருக்க முடியாது. வேறு வகை தண்ணீரையும் (வேறு வார்த்தையில் குறிப்பிட்டார்) பயன்படுத்தலாம் என அவர் கூறியுள்ளார். திமுகதான் தீ என குறிப்பிடுகிறார். எனவே அதை அணைக்க சசிகலாவாக இருந்தாலும் பரவாயில்லை என்கிறார். சு.சாமி தரப்பு, இப்போ குருமூர்த்தி தரப்பு இரண்டுமே பச்சைக் கொடி காட்டிவிட்டதால், சசிகலா அதிமுகவில் இணைவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.
எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி தன்னை ஒரு பெரிய தலைவராக முன்னிறுத்தி வருகிறார். சசிகலா வருகையால், அதிகாரப் போட்டி உருவாகுமே என்பதுதான் அடுத்த கேள்வியாக உள்ளது. திடீரென மாறிவிட்ட இந்த கள நிலவரத்தை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு எப்படி எதிர்கொள்ளும்? சசிகலா தலைமையை ஏற்று செயல்படுவார்களா, அப்படி செயல்பட்டால் முதல்வர் வேட்பாளர் யாராக இருப்பார்? எடப்பாடி பழனிச்சாமியே தொடருவாரா, அல்லது சசிகலா முதல்வர் வேட்பாளராகுவாரா? இப்படியெல்லாம் பல கேள்விகள் எழுகின்றன. எனவே இப்போது சசிகலா தரப்பையும் விட எடப்பாடி தரப்புதான் அதிக யோசனையில் இருக்கிறது. இதற்கு குருமூர்த்தி பேச்சு ஆரம்ப புள்ளி வைத்துள்ளது.