மு.க.ஸ்டாலின் -கே.எஸ்.அழகிரி சந்திப்பில் நடந்தது என்ன...? இறுக்கத்தை தளர்த்திய தங்கபாலு
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று சந்திக்க சென்ற போது அங்கிருந்த இறுக்கமான சூழலை தங்கபாலு தான் தளர்த்தியுள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஸ்டாலின் அறையில் நேற்று நண்பகல் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது மிகவும் இறுக்கமான சூழலே காணப்பட்டுள்ளது.
ஊடகங்கள் புகைப்படம் எடுத்துச் சென்ற பின்னர், அறிக்கைக்கான காரணத்தையும், விளக்கத்தையும் ஸ்டாலினிடம் கே.எஸ். அழகிரி விளக்கியுள்ளார்.
விளக்கம்
திமுக காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக தாம் விடுத்த அறிக்கை குறித்து மு.க.ஸ்டாலினை சந்தித்து கே.எஸ்.அழகிரி நேற்று விளக்கம் கொடுத்தார். திமுக மீது பழி சுமத்தும் எண்ணம் தமக்கில்லை என்றும், கூட்டணி நீடிக்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றும் கூறியுள்ளார்.
அமைதி
கே.எஸ்.அழகிரியின் விளக்கத்தை கேட்டு எந்த ரியாக்ஷனும் காட்டாமல் மிகவும் இறுக்கமாக இருந்துள்ளார் மு.க.ஸ்டாலின். இதனால் அந்த அறையே அமைதியாக இருந்துள்ளது. இதையடுத்து தங்கபாலு தான் எதை எதையோ பேசி அங்கிருந்த இறுக்கத்தை தளர்த்தியுள்ளார்.
கோபம்
திமுகவுடன் நெருக்கம் பாராட்டும் சில காங்கிரஸ் தலைவர்களில் தங்கபாலுவும் ஒருவர். இதனால் அவர் பேசத்தொடங்கியதை அடுத்து சகஜ நிலைக்கு திரும்பியது அந்த அறை. தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச வேண்டியதை அறிக்கை விட்டது ஏன் என ஸ்டாலின் கேட்டதற்கு மழுப்பலான பதிலை கொடுத்துள்ளார் அறிக்கையை தயார் செய்த கோபண்ணா.
விமர்சனம்
காங்கிரஸ் கட்சியை உதாசீனப்படுத்தும் வகையில் பேசும் திமுக முன்னணி நிர்வாகிகளுக்கு நீங்கள் கடிவாளம் போட வேண்டும் என கே.ஆர்.ராமசாமி கோரிக்கை விடுத்துள்ளார். அதை நான் பார்த்துக்கொள்கிறேன், முதலில் உங்கள் ஆட்களுக்கு குறிப்பாக ப.சி. மகன், மாணிக்கம் தாகூர் போன்றவர்களுக்கு அட்வைஸ் செய்யுங்கள் என ஸ்டாலின் தெரிவித்தாராம்.