ஹே.. கெட்ட வார்த்தையில் திட்டி! ஜெயிலில் தொடங்கிய லடாய்! ரோட்டுக்கு வந்த ஓபிஎஸ் - ஜெயக்குமார் மோதல்
சென்னை: ஜெயக்குமார் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே இன்று அதிமுக அலுவலகத்திற்கு வெளியிலேயே மோதல் ஏற்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
அதிமுக அலுவலகத்திற்கு உள்ளேயே இப்போது இரண்டு விதமான கூட்டங்கள் வெவ்வேறு அறையில் நடந்து கொண்டு இருக்கின்றன. ஒரு பக்கம் அதிமுகவில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள், அவருக்கு ஆதரவாக கூட்டம் நடத்தி வருகிறார்கள்.
இன்னொரு பக்கம் எடப்பாடி ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாக கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஒரே அலுவலகத்தில் ஒவ்வொரு மூலையில் இரண்டு வெவ்வேறு கேங்க் கூட்டங்களை நடத்துவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

என்ன நடந்தது?
இன்று காலையே எடப்பாடி பழனிசாமி சேலம் சென்றுவிட்டார். அவர் சேலத்தில் கொங்கு மண்டல நிர்வாகிகளை இன்று சந்திக்கிறார். மாலை கொங்கு மண்டல நிர்வாகிகளுடன் அவரின் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. இதில் தன்னை பொதுச்செயலாளர் ஆக்குவது தொடர்பாக கொங்கு மண்டலத்தில் உள்ள மாவட்ட நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று எடப்பாடி வலியுறுத்த உள்ளார். இதை தொடர்ந்து அவருக்கு ஆதரவான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை
இந்த நிலையில்தான் சென்னையில் இன்று ஜெயக்குமார் தலைமையில் தீர்மானக்குழு கூட்டம் நடைபெற்றது. அவர் எடப்பாடிக்கு ஆதரவாக இதில் பேசியதாக கூறப்படுகிறது. ஜெயக்குமார் முன்பே ஒற்றை தலைமை குறித்து பேசினார். ஒற்றை தலைமை யார் என்பதை கட்சி முடிவு செய்யும். நமக்கு ஒற்றை தலைமை தேவை. ஒற்றை தலைமையின் அவசியம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் இதைத்தான் வலியுறுத்தினர். என்று பேசினார். இந்த நிலையில்தான் இன்று அதிமுக தீர்மான குழு கூட்டத்தில் ஜெயக்குமார் பேசி இருக்கிறார்.

என்ன சொன்னார்?
இதில் பேசிய ஜெயக்குமார்.. பொதுக்குழுவில் என்னென்ன விஷயங்களை ஆலோசனை செய்யலாம் என்று விவாதம் செய்துள்ளார் எடப்பாடிக்கு ஆதரவாக சில விஷயங்களை குறிப்பிட்டுள்ளார். இன்னொரு பக்கம்.. இன்னொரு அறையில் ஓபிஎஸ் கலந்து கொள்ளும் மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தனது ஆதரவாளர்கள் தனக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தும் வகையில் ஓபிஎஸ் இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்தார். இந்த கூட்டம் ஓபிஎஸ் தலைமையில் தொடர்ந்து நடந்து வருகிறது.

மோதல்
இந்த கூட்டத்திற்காக ஓபிஎஸ் அதிமுக அலுவலகம் வருவதற்கு முன்பாக அங்கிருந்து ஜெயக்குமார் வெளியேறினார். அவரை வழி மறித்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சனங்களை வைத்தனர். ஜெயக்குமார் கார் மீது தாக்கி மோசமான வார்த்தைகளை பேசினர்.. ஹே ****** என்று கூறி அச்சில் ஏற்ற முடியாத கெட்ட வார்த்தைகளை குறிப்பிட்டு தாக்கி பேசினார். இதனால் இறுகிய முகத்தோடு காரில் இருந்த ஜெயக்குமார் அங்கிருந்து வேகமாக வெளியேறினார். இதன் பின்பே அங்கு ஓபிஎஸ் வந்தார்.

லடாய்
ஜெயக்குமார் - ஓபிஎஸ் இரண்டு தரப்பிற்கும் இடையிலான இந்த மோதல் இப்போது தொடங்கவில்லை... முன்பே ஜெயக்குமார் கைதான சமயத்திலேயே இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. திமுக நிர்வாகி ஒருவரை அடித்து, அரைநிர்வாணப்படுத்தி ஊர்வலமாக கூட்டி சென்ற வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் கைதான அன்று அதிமுக மூத்த தலைவர்கள் யாரும் இவரை சந்திக்கவில்லை.

சந்திப்பு
இதனால் ஜெயக்குமார் தரப்பு ஜெயிலில் கோபமாக இருந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து ஜெயக்குமாரை அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து பேசினார். எஸ்.பி.வேலுமணி, பெஞ்சமின் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளும் இதில் உடன் இருந்தனர். ஆனால் ஓபிஎஸ் இந்த நிகழ்வில் உடன் இல்லை. அப்போதே ஓபிஎஸ் மீது ஜெயக்குமாரும், அவரின் ஆதரவாளர்களும் அப்செட் ஆனதாக கூறப்பட்டது.

மரியாதை
இப்படி கட்சி மூத்த நிர்வாகியை ஒருங்கிணைப்பாளர் வந்து பார்க்கவில்லையே என்று மோதல் எழுந்தது. இரண்டு தரப்பிற்கும் அப்போதே இது லடாயை ஏற்படுத்தியது. ஓபிஎஸ் இல்லாமல் எடப்பாடி பழனிசாமி மட்டும் வேலுமணியோடு சென்று ஜெயக்குமாரை சந்தித்தது பெரிய சர்ச்சையானது. இதையடுத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனியாக ஓ பன்னீர்செல்வமும் ஜெயக்குமாரை நேரில் சென்று சந்தித்தார். ஆனாலும் இருவருக்கும் இடையில் நீரு பூத்த நெருப்பாக பிரச்சனை இருந்து வந்தது.. . தற்போது அதிமுக அலுவலகம் வெளியே நடந்த மோதலால் இந்த பிரச்சனை பெரிதாகி உள்ளது.












Click it and Unblock the Notifications