அந்த நொடிதான் முடிவை மாற்றியது.. திருமாவிற்கு 3219 வாக்குகள் தந்த வெற்றி..நேற்று இரவு என்ன நடந்தது?
சிதம்பரம் தனித் தொகுதியில் போட்டியிட்ட விசிக தலைவர் திருமாவளவன் நேற்று கடும் இழுபறிக்கு பின் வெற்றிபெற்றார்.
Recommended Video
சென்னை: சிதம்பரம் தனித் தொகுதியில் போட்டியிட்ட விசிக தலைவர் திருமாவளவன் நேற்று கடும் இழுபறிக்கு பின் வெற்றிபெற்றார். இந்த வெற்றி எப்படி சாத்தியமானது என்பது குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. 38 தொகுதிகளில் 37 தொகுதியில் திமுக மாபெரும் வெற்றியை ருசித்துள்ளது. சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் வெற்றி பெற்றார்.
ஆனால் இந்த வெற்றி அத்தனை எளிதாக கிடைக்கவில்லை. மிக முக்கியமான தருணம் ஒன்றில்தான் இந்த தேர்தல் முடிவில் திருப்பம் ஏற்பட்டது.
என்ன நடந்தது
சிதம்பரம் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் சந்திரசேகர் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டார். திமுக கூட்டணியில் இடம்பெற்று இருந்த விசிக தலைவர் திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிட்டார். வாக்குகள் எண்ணப்பட்ட தொடக்கத்தில் 1500 வாக்குகள் வரைய முன்னிலையில் இருந்தார் திருமாவளவன்.
மாலை நிலை
மாலை வரை கொஞ்ச வாக்குகள் முன்னிலையில் தொடர்ந்து நீடித்து வந்த திருமாவளவன் திடீர் என்று 600 வாக்குகள் பின்னுக்கு சென்றார். அதன்பின் மீண்டும் 1500 வாக்குகள் பின்னுக்கு சென்றார். இது விசிக, திமுக ஆகிய இரண்டு கட்சியினருக்கும் பெரிய அதிர்ச்சியை அளித்தது.
எப்படி
சிதம்பரம் தொகுதி தனித் தொகுதியாக இருந்தாலும் தலித் அல்லாத சமூகத்தினரும் அங்கு அதிக அளவில் இருக்கிறார்கள். இதனால் அனைத்து சாதியினரும் வாக்களிக்கும் நபர்களே பெரும்பாலும் வெல்ல முடியும். இந்த நிலையில்தான் சில வாக்குசாவடிகளில் நடந்த தேர்தலுக்கான வாக்குகள் நேற்று சிதம்பரத்தில் எண்ணப்படாமல் இருந்துள்ளது.
முக்கியமாக எண்ணவில்லை
அதன்படி சிதம்பரத்தில் பட்டியலின மக்கள் அதிகம் இருக்கும் கிராமங்களில் நடந்த தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்படாமல் இருந்துள்ளது. இங்கு திருமாவிற்கு ஆதரவான வாக்காளர்கள் அதிகம். இதுதான் நேற்று திருமாவளவன் மாலை முழுக்க பின்னடைவை சந்திக்க மிக முக்கிய காரணமாக இருந்தது. இங்கு சுமார் 4000 வாக்குகள் வரை போடப்பட்டு இருந்தது. இதுதான் எண்ணப்படாமல் இருந்தது.
ஏன் எண்ணவில்லை
இந்த தொகுதியில் நடந்த தேர்தலுக்கான வாக்குபதிவு எந்திரங்கள் நேற்று மாலை வேலை செய்யாமல் போய் இருக்கிறது. இதனால்தான் வாக்குகளை எண்ண முடியாமல் அந்த வாக்கு எண்ணிக்கை மட்டும் நிறுத்தப்பட்டது. ஆனால் இந்த கோளாறு விவகாரம் திருமாவளவனுக்கு மிக தாமதமாகவே தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக தேர்தல் மேற்பார்வையாளருக்கு இதுகுறித்து புகார் அளித்தார்.
அந்த நொடிதான்
அந்த நொடிதான் தேர்தல் முடிவுகளில் மாற்றம் ஏற்பட தொடங்கியது. புகாரை அடுத்து உடனடியாக எந்திரம் சரி செய்யப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டது. பின் 10 நிமிடத்தில் மீண்டும் திருமாவளவன் முன்னிலை பெற்றார். இந்த பிரச்சனை காரணமாகவே நேற்று தேர்தலில் சிதம்பரத்தில் முடிவுகளை அறிவிக்க நள்ளிரவு தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்றார்
திருமாவளவன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சந்திரசேகரை விட 3219 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார். திருமாவளவன் மொத்தம் 5,00,229 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் 4,97.010 வாக்குகள் பெற்றார்.