பாஜகவின் 2 டீல்.. எடப்பாடிக்கு வேற வழியே இல்ல.. இறங்கி வந்துட்டாரே.. உடைக்கும் அரசியல் விமர்சகர்!
எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் வேட்பாளராக மோடியை ஏற்பதுதான் ஒரே வழி என அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை : எடப்பாடி பழனிசாமி தனக்கு அந்த நேரத்தில் என்ன தேவையோ அதற்குத் தகுந்தபடி முடிவை எடுப்பார். பிரதமர் வேட்பாளராக மோடியை ஏற்றுக்கொண்டு, ஓபிஎஸ் உடன் சேர்ந்து வாருங்கள் என்பதுதான் பாஜகவின் டீல். பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தாமல், அதிமுகவால் இனி நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயிக்க முடியாது என அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி நமது ஒன் இந்தியாவிற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இன்று இரட்டை இலையைப் பெற வேண்டும் என்பதற்காகத்தான் இறங்கி வந்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்ஸை நீக்கியது நீக்கியதுதான், அவருக்கு பொதுக்குழுவில் உரிமை கொடுத்து வாக்கெடுப்பை நடத்த வேண்டிய அவசியமில்லை என்று சொல்லலாமே? என்று ரவீந்திரன் துரைசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பினரின் முடிவு தொடர்பாக ஒன் இந்தியாவிற்கு அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி அளித்துள்ள பேட்டி பின்வருமாறு:
கூட்ட நெரிசலில் 4 பேர் பலி.. பொங்கலுக்கு வேட்டி சேலை வழங்காததே காரணம்.. விமர்சித்த எடப்பாடி பழனிசாமி
பாஜக பாயிண்ட்
கேள்வி : பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எடப்பாடி அணி வேட்பாளரே வலுவானவர் என்று சொல்கிறார், ஓபிஎஸ்ஸை பின்வாங்கச் சொல்கிறார்.. ஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்பை பாஜக பின்வாங்கச் சொல்லவில்லை.. ஓபிஎஸ் தரப்பையே விட்டுக்கொடுக்க பாஜக கன்வின்ஸ் செய்வது ஏன்? நாம் சொன்னாலும் ஈபிஎஸ் ஏற்கமாட்டார் என்ற முடிவுக்கு பாஜக வந்துவிட்டதா?
பதில் : பாஜக சொல்லும் ஒரு பாயிண்ட் உண்மை. எடப்பாடி பழனிசாமி அணியின் வேட்பாளர் அப்பகுதியில் நல்ல செல்வாக்கு கொண்டவர் என்று சொல்கிறார்கள். ஆனால், சமூக நீதி பார்வையில் ஓபிஎஸ் அணி வேட்பாளர் தான் சரியான வேட்பாளர் என்பது எனது கருத்து. சுப்ரீம் கோர்ட் இரட்டை இலை பிரிய விரும்பவில்லை. எனவே, இதில் பிக்கல் பிடுங்கல்களை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், பொதுவான வேட்பாளரை தேர்ந்தெடுக்கச் சொல்லியுள்ளது.
ஓபிஎஸ் அந்தளவு பலம் இல்லை
மோடிதான் மீண்டும் பிரதமர் என்று ஓபிஎஸ் சொல்லிவிட்டார். எடப்பாடி பழனிசாமி இன்னும் சொல்லவில்லை. 62 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் 90% கட்சி நிர்வாகிகள் ஆதரவுடன் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஓபிஎஸ் அந்த அளவுக்கு பலத்துடன் இல்லை என்பது உண்மைதான். ஓபிஎஸ், ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர். முக்குலத்தோர் சமூகத்தவர் மத்தியில் செல்வாக்கு பெற்றவர், அவரை கட்சியில் இருந்து நீக்கியது தவறு என்ற எண்ணவோட்டம் தான் மக்களிடையே இருக்கிறது. 2024 எம்.பி தேர்தல் அதற்கு நிரூபணமாக அமையும்.
பாஜக தலைமைக்கு தெரியும்
கேள்வி : இத்தனை நாட்களாக அதிமுக விவகாரத்தில் நாங்கள் தலையிடவில்லை என பாஜக கூறிவந்த நிலையில், தற்போது, ஈபிஎஸ் ஓபிஎஸ் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் நட்டாவின் விருப்பம் என்று செய்தியாளர் சந்திப்பிலேயே சொல்ல வேண்டிய அவசியம் என்ன?
பதில் : இருவரும் ஒன்றாக இருந்தால் தான் வாக்குகள் திரளும். இருவரும் தனித்தனியாக இருந்தால் சாதிக்கட்சி என்பது போல, மற்ற சமூகத்து மக்கள், வாக்களிக்க மாட்டார்கள். அது பாஜக தலைமைக்கு தெரிகிறது. இருவரும் இணைந்து இருந்தால் தான் வாக்குகள் சிதறாமல் கிடைக்கும் என்று பாஜக தலைமை நினைக்கிறது.
எடப்பாடி அப்படி சொல்லவில்லையே
கேள்வி : பாஜக அதிமுகவின் ஒற்றுமையை விரும்பினாலும், எடப்பாடி பழனிசாமி அதற்கு உடன்படவில்லையே.. அவர் பாஜகவே வேண்டாம் என்ற இடத்துக்கு நகர்ந்ததாகத்தானே தெர்கிறது..?
பதில் : தேர்தல் ஆணையம் இந்த இடைத்தேர்தலில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஒன்றாக இணைந்தால் தான் இரட்டை இலை எனச் சொல்லிவிட்டது. இன்று இரட்டை இலையைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இறங்கி வந்துள்ளனர். இதே எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்ஸை நீக்கியது நீக்கியதுதான், ஓபிஎஸ் மீண்டும் வருவார் என்பதையும், அவருக்கு பொதுக்குழுவில் உரிமை கொடுத்து வாக்கெடுப்பை நடத்த வேண்டிய அவசியமில்லை என்று சொல்லலாமே? ஆனால், எடப்பாடி பழனிசாமி அப்படி சொல்லவில்லையே.. எடப்பாடியின் நிலைப்பாடு மாறும் தன்மை கொண்டது. தனக்கு அந்த நேரத்தில் என்ன தேவையோ அதற்குத் தகுந்தபடி முடிவை எடுப்பார்.
பாஜக டீல்
எடப்பாடி பழனிசாமி தனித்து நின்றால் 15 கூட வராது. பிரதமர் வேட்பாளராக மோடியை ஏற்றுக்கொண்டு, ஓபிஎஸ் உடன் சேர்ந்து வாருங்கள் என்பதுதான் பாஜகவின் டீல். எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் வேட்பாளர் என மோடியை சொல்வது லாபம் என்றால், இரட்டை இலை சின்னத்தில் ஈபிஎஸ் ஆதரவாளர்களும், ஓபிஎஸ் ஆதரவாளர்களும் போட்டியிடலாம் என்ற ஃபார்முலாவை கொண்டு வரலாம், அதன் மூலம் பாஜகவுக்கு சில சீட்களை கொண்டு வரலாம் என பாஜக கணக்குப் போடுகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் வேட்பாளராக மோடியை ஏற்பதுதான் ஒரே வழி. பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தாமல், அதிமுகவால் இனி நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயிக்க முடியாது.