டெல்லியில் தோன்றிய புதிய "பகை".. அவர் வேண்டாங்க.. அதிமுகவின் "முகத்தையே" ஒதுக்கிய எடப்பாடி? ஏன்?
சென்னை: பொதுவாக ஒரு கட்சிக்குள்.. அல்லது ஒரு அணிக்குள் புதிய தலைவர் வருகிறார் என்றார் அவர் நிர்வாகிகளை மாற்றுவது வழக்கம்தான். உதாரணமாக ஐடி நிறுவனங்களில் புதிய டிஎல் வந்தால் தனது அணியை மொத்தமாக மாற்றம் செய்வார். கிரிக்கெட்டில் கூட புதிய கேப்டன் வந்த பின் தனக்கு ஏற்ற வீரர்களை தேர்வு செய்வார். அப்படித்தான் தற்போது எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவில் மாற்றங்களை செய்து வருகிறார்.. தனக்கு ஏற்ற டீமை உருவாக்கி வருகிறார்!
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் ஆன ஜூலை 11ம் தேதியே எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கினார். அதன்பின் அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்களை வரிசையாக தூக்கினார்.
சமீபத்தில் பண்ருட்டி ராமச்சந்திரனை கட்சியில் இருந்து நீக்கியது வரை அடுத்தடுத்து பல நிர்வாகிகளை அவர் கட்சியில் இருந்து தூக்கிவிட்டார். அதிமுகவில் தன்னுடைய பேச்சை கேட்கும், தன்னுடைய குரலுக்கு செவி சாய்க்கும் நபர்களை மட்டுமே வைத்துக்கொள்ள அவர் திட்டமிட்டு உள்ளாராம்.
அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தீர்ப்பு வந்தால் எல்லாமே மாறிவிடும். அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் எல்லாம் இல்லாமல் போய்விடும். இருந்தாலும் கூட அவர் நம்பிக்கையாக அதிமுகவில் மாற்றங்களை செய்து வருகிறாராம்.
ஆமா.. அதிமுக எம்எல்ஏக்கள்தான்.. இத்தனை கேமரா முன்னாடி எப்படி சொல்ல முடியும்.. இபிஎஸ்ஸுக்கு சசி ஷாக்
மாற்றங்கள்
அந்த வகையில் தமிழ்நாட்டில் மட்டுமின்றி டெல்லியிலும் பல்வேறு மாற்றங்களை செய்ய எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு வருகிறாராம். டெல்லியில் அதிமுகவின் முகமாக இருந்தவர் தம்பிதுரை எம்பி. ஆனால் ஜெயலலிதா மறைவிற்கு பின் பெரிதாக அதிமுக தலைகள் இவரை கண்டுகொள்ளவில்லை. அதன்பின் எடப்பாடி எழுச்சிக்கு பின் பெரிய அளவில் தம்பிதுரை ஓரம்கட்டப்பட்டார். இவர்கள் இருவருக்கும் மோதல் எல்லாம் இல்லை. இருந்தாலும் தம்பிதுரை பெரிதாக கவனம் பெறவில்லை.
சைலன்ட் மோட்
அவரும் கொஞ்சம் சைலன்ட் மோடில் இருந்தது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் கடந்த சில வாரங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு (கடந்த பயணம் இல்லை, அதற்கும் முந்தையது) சென்றார். கடந்த பயணத்திற்கு முந்தைய பயணத்தில் எடப்பாடி பழனிசாமி மோடியை சந்திக்க முயன்றார். ஆனால் அவரால் பார்க்க முடியவில்லை. எடப்பாடி தமிழ்நாடு திரும்பி வந்த பின் திடீரென தம்பிதுரை உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். அவரின் இந்த சந்திப்பு பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியது.
சந்திப்பு
எதற்காக இந்த சந்திப்பு நடைபெற்றது. ஏன் இவர்கள் சந்திப்பு நடத்தினார்கள். அமித் ஷாவிடம் எடப்பாடிக்கு ஆதரவாக தம்பிதுரை பேசினாரா அல்லது எதிராக பேசினாரா என்று கேள்விகள் எழுந்தன. அதன்பின் தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி கூட எடப்பாடி பழனிசாமியை தனியாக சந்திக்கவில்லை. இதனால் தம்பிதுரை அப்படி என்னதான் பேசினார் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில்தான் தற்போது தம்பிதுரை ஓரம்கட்டப்படுவதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.
ஓரம் கட்டப்படுகிறார்
அதன்படி சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் டெல்லிக்கு சென்றார். இந்த முறை சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி ஆகியோருடன் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்றார். இந்த பயணத்தில் எடப்பாடி பழனிசாமி தம்பிதுரை கூட வைத்திருக்கவில்லை. அமித் ஷாவை சந்தித்த போது தம்பிதுரை உடன் இல்லை. இதுதான் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. தம்பிதுரையை எடப்பாடி மொத்தமாக ஓரம்கட்டுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
எடப்பாடி
டெல்லியில் அதிமுகவின் முகமாக இருப்பவர் தம்பிதுரைதான். அப்படி இருக்கும் போது இவரை ஏன் எடப்பாடி முன்னிலைப்படுத்தவில்லை என்பதுதான் கேள்விக்குறியாகி உள்ளது. இதை பற்றி அதிமுக வட்டாரத்தில் விசாரித்ததில் தம்பிதுரை பட்டும்படாமல் செயல்படுகிறார். எடப்பாடி பழனிசாமி , ஓ பன்னீர்செல்வம் இரண்டு அணியிலும் அவர் கால் வைக்க பார்க்கிறார். இரண்டு அணிக்கும் இடையில் இருந்து கடைசியில் வெற்றிபெறும் டீமில் இணைய பார்க்கிறார். இதை எடப்பாடி விரும்பவில்லை.
எடப்பாடி மோதல்
அதனால்தான் தம்பிதுரையை எடப்பாடி ஒதுக்கி வருகிறார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அதோடு எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆனால், தம்பிதுரைக்கு அடுத்த முறை எம்பி சீட் கிடைப்பதே சந்தேகம்தான் என்றும் கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ஆனால் தம்பிதுரைக்கு நெருக்கமான தரப்போ அப்படி எல்லாம் இல்லை. தம்பிதுரை - எடப்பாடி ராசியாகத்தான் இருக்கிறார்கள். தேவையின்றி டெல்லி பயணத்தை வைத்து வதந்தியை கிளப்புகிறார்கள் என்று விமர்சனம் வைத்துள்ளனர்.