சென்னையில் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கிறார்களே.. அவர்கள் லைஃப் எப்படி இருக்கிறது தெரியுமா?
சென்னை: கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவோர் எண்ணிக்கை தமிழகத்தில் பிற நகரங்களைக் காட்டிலும் சென்னையில் மிக அதிகம். இதற்கு முக்கியமான காரணம், லேசான அறிகுறி இருப்போரையும் குறைந்த வயதுடையோரையும் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்தால், அவசர தேவைக்கு வருவோருக்கு படுக்கை வசதியில்லாமல் சென்றுவிடும் என்ற முன்னெச்சரிக்கை காரணம்.
இவ்வாறு வீட்டில் இருந்தபடியே, மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ள சிகிச்சைகளை பின்பற்றுவோர், எந்தமாதிரியான வழிமுறைகளை கடைபிடிக்கிறார்கள்? அவர்களின் சிக்கல்கள் என்ன என்பது பற்றி பார்க்கலாம்.
சிகிச்சைக்கு சென்ற இடம் தனியார் மருத்துவமனையோ அல்லது அரசு மருத்துவமனையோ, எதுவாக இருந்தாலும் சரி, கொரோனா பாதித்தவர் பற்றிய விவரம் சுகாதாரத்துறை, சென்னை மாநகராட்சிக்கு முறைப்படி தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து நோயாளிகள் வசிக்கக்கூடிய வீட்டின் வெளிப்புறத்தில் தகரத்தால் ஆன கேட் அடித்து வைக்கப்படுகிறது. இந்த தகரத்தை பார்த்ததுமே அந்த வீட்டில் கொரோனா பாதித்தவர் இருக்கிறார்கள் என்பது தெரிந்து விடும். எனவே அங்கு யாரும் செல்ல தயக்கம் காட்டுவார்கள்.
தமிழ் சித்த மருத்துவத்தின் சாதனை.. குடியரசுத் தலைவர் மாளிகையிலும் இனி கபசுர குடிநீர்.. செம செய்தி!
தன்னார்வலர்கள்
ஒருவேளை அவசியத் தேவைகளுக்காக செல்ல வேண்டுமென்றால் மாநகராட்சி ஊழியர்களிடம் தெரிவித்து அனுமதி பெற்று உள்ளே செல்லலாம். அல்லது அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொடுப்பதற்காக தன்னார்வலர்கள் செயல்படுகிறார்கள். அவர்கள் மூலமாகத்தான் பொருட்களை வாங்கிக் கொள்ள வேண்டும்.
வீட்டுக்குள் தனித்தனி தீவுகள்
ஒரு வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் இருக்கும் பட்சத்தில், அவர்கள் அனைவருக்குமே நோய் பாதிப்பு இருந்தாலும், அருகருகே அமர்வதற்கு அனுமதி கிடையாது. 6 அடி இடைவெளி விட்டுத்தான் குடும்ப உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஏனெனில் ஒருவருக்கு வைரஸ் லோடு குறைவாக இருக்கலாம். இன்னொருவருக்கு அதிகமாக இருக்கலாம். எனவே அதிகமாக இருப்பவரிடம் இருந்து குறைவான பாதிப்பு உள்ளோருக்கு பரவி விடக்கூடாது, என்பதால் மருத்துவர்கள் இப்படி பரிந்துரை செய்கிறார்கள்.
ஏசி கிடையாது
புழுக்கமாக இருந்தாலும் சரி, ஏசி உபயோகப்படுத்தக் கூடாது என்பது மருத்துவர்கள் அறிவுரை. மேலும், கதவு, ஜன்னல் போன்றவற்றை முழுமையாக திறந்து வைக்கக் கூடாதாம். வைரஸ் பாதிப்பு அண்டை வீடுகளுக்கும் போய் விடக் கூடாது என்பதால் இந்த ஏற்பாடு. லேசாக கதவை திறந்து வைத்துக் கொள்ளலாம். எனவே வெப்பம் காரணமாக கடும் அவதிப்பட நேரிடுவதாக கூறுகிறார்கள் வீட்டு தனிமையில் இருப்போர்.
ஆக்ஸிஜன் அளவு முக்கியம்
ஆக்ஸிஜன் அளவு குறிப்பிட்ட அளவுக்கு மேல் குறைந்தால் உடனடியாக தங்களை தொடர்பு கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுரை செய்கிறார்கள். ஆக்ஸிஜன் அளவை தினமும் பரிசோதனை செய்வதற்காக ஒரு கையடக்க கருவியை வீட்டு தனிமையில் இருக்கும் நோயாளிகள் வாங்கி வைத்துக் கொள்வது அவசியமாகிறது. மேலும் இவ்வாறு செய்யப்படும் பரிசோதனை முடிவுகளை மருத்துவமனையின் செல்போன் செயலிகளில் பதிவேற்றம் செய்து தகவல் தெரிவித்தபடி இருக்க வேண்டுமாம்.
ரிப்பீட் டெஸ்ட் கட்டாயமில்லையாம்
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக இருந்தால் 14 நாட்கள் கழித்து மறுபடியும் பரிசோதனை செய்வதை கட்டாயப்படுத்துகிறார்கள். ஆனால் அரசு மருத்துவமனைகள் அதை கண்டு கொள்வது கிடையாது. 14 நாட்கள் முடிந்த பிறகு வீட்டை விட்டு வெளியே போகலாம். மறுபடி, கொரோனா பரிசோதனை தேவை இல்லை என்பது போல விதிமுறை மாறியுள்ளதால் நோயாளிகள் குணமடைந்துவிட்டதாக நினைத்து வெளியே செல்கிறார்கள். 3 நாட்கள் தொடர்ச்சியாக காய்ச்சல் இருக்க கூடாது என்பது போன்ற விதிமுறைகள் இதில் உண்டு. ஆனால் சிலர் முன்னெச்சரிக்கையாக மேலும் சில நாட்கள் வீடுகளுக்குள் தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள்.
மெதுவாக ரிப்பீட் பரிசோதனை
ஒருவேளை 14 நாட்கள் கழித்து பரிசோதனை செய்யும்போது கொரோனா பாசிட்டிவ் என்று காட்டினால், அது மாநகராட்சிக்கு தகவலாக சென்றுவிடும் என்பதால் மறுபடியும் வந்து வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும் என்ற நோட்டீசை ஒட்டுவார்களாம். இதற்கு பயந்தே வீட்டு தனிமையில் இருக்கும் பலரும் 21 நாட்கள் கழித்து வேண்டுமானால் டெஸ்ட் செய்து கொள்கிறோம். அதுவரை வீட்டை விட்டு போக மாட்டோம் என முடிவு எடுப்பதாக கூறப்படுகிறது. மாநகராட்சியிலிருந்து தினமும் நோயாளிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்கள் உடல் நலத்தை விசாரிக்க ஏற்பாடுகள் உள்ளன. அவர்களும் கடமை உணர்ச்சியோடு செய்கிறார்களாம். ஆனால், நோயாளிகள் பதிலுக்கு ஏதாவது கேள்விகள் கேட்டால், அந்த ஊழியர்களுக்கு போதிய, விவரம் தெரிவதில்லை என்ற விமர்சனங்களும் உள்ளன.
நாட்டு வைத்தியம்
மேலும், டாக்டர்களின் மருந்துகளுடன், கபசுர குடிநீர் உள்ளிட்ட நாட்டு வைத்திய முறைகளையும் வீட்டு தனிமையில் இருப்போர் பின்பற்றுகிறார்கள். தூதுவளை, ஆடாதொடை போன்றவற்றை வைத்து கசாயம் குடித்து வருவோரும் உள்ளனர். இதற்கு மருத்துவர்கள் சம்மதம் அவசியம். பெரும்பாலும் மருத்துவர்கள் இதில் பிரச்சனை இல்லை என்று சொல்கிறார்கள். ஆனால் ஒரு அளவுக்கு மேல் கபசுர குடிநீர் உள்ளிட்டவற்றை குடிக்கும்போது அது வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
வரும் முன் காப்போம்
என்னதான் இருந்தாலும் ஒரே வீட்டுக்குள், ஒரே குடும்பத்தார், நெருங்கிக் கூட பேச முடியாமல், சிறைக் கைதிகளைப் போல தனித் தனியாக இருப்பது மன ரீதியாக வேதனை தரக் கூடியது. கொரோனாவிலிருந்து மீண்டு விடலாம் என்ற போதிலும், அது வராமல் தற்காத்துக் கொள்வதுதான் இது போன்ற பிரச்சனைகளிலிருந்து மக்களை காப்பாற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.