தந்தையை மிஞ்சும் தனயன்! தேசிய அளவில் கவனம் பெற்ற முதலமைச்சர் ஸ்டாலினின் காலை உணவு திட்டம்.. பின்னணி!
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்து இருக்கும் " முதலமைச்சர் காலை உணவுத் திட்டம்" தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்தியாவிற்கே முன்னோடி திட்டமாக இந்த திட்டம் பார்க்கப்படுகிறது.
முற்போக்கான திட்டங்களை கொண்டு வருவதிலும், அதை செயல்படுத்துவதிலும் தமிழ்நாடு எப்போதுமே பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருந்திருக்கிறது. சுதந்திரத்திற்கு முன்.. முதல் சுதந்திர போராட்டத்தை தொடங்கி வைத்ததிலும் சரி.. சுதந்திரத்திற்கு பின் பலதொலைநோக்கு திட்டங்களை கொண்டு வந்ததிலும் சரி.. தமிழ்நாடுதான் எப்போதும் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்து இருக்கிறது. இந்த முன்னோடி திட்டங்களை கொண்டு வந்ததிலும், அதை செயல்படுத்தியதிலும் நீதிக்கட்சி, திராவிட முன்னேற்ற கழகத்தின் பங்குகள் அளப்பரியது.
அந்த வகையில் தமிழ்நாடு அரசு இந்தியாவிலேயே முதல்முறையாக கொண்டு வந்து இருக்கும் திட்டம்தான் அரசு பள்ளி மாணவர்களுக்கான "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்". பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்து இருக்கும் இந்த திட்டம் பற்றி பார்க்கும் முன்.. தமிழ்நாட்டில் பள்ளிகளில் உணவு வழங்கும் திட்டம் எப்படி நடைமுறைக்கு வந்தது என்ற சிறிய வரலாற்றை பார்த்துவிடுவோம்.
மதிய உணவு திட்டம்
இந்தியாவிலேயே முதல் முறையாக மதிய உணவு திட்டம் சென்னை மாநகராட்சியில் ஆயிரம் விளக்கில் இருக்கும் மாநகராட்சி பள்ளிகளில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னை மாநகராட்சி தலைவராக சர். பிட்டி தியாகராயர் இருந்த காலத்தில் 16-9-1920ல் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது அவர்களுக்கு தெரிந்து இருக்காது இந்த திட்டம்தான் இந்தியாவிற்கே முன்னோடியாக இருக்க போகிறது.. ஏன் உலகமே இந்த திட்டத்தை ஒருநாள் திரும்பி பார்க்க போகிறது என்று!
தொடக்கத்தில் 1600 பள்ளிகளில் மட்டும் இருந்த இந்த திட்டம் பின்னர் சுதந்திரத்திற்கு பின் காமராஜ் ஆட்சி காலத்தில் தமிழ்நாடு முழுக்க 1957ல் தொடக்க கல்வி பயிலும் மாணவ, மாணவியர் எல்லோருக்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ்நாடு முழுக்க இந்த திட்டத்தை கொண்டு வர 10 லட்சம் ரூபாய் அப்போதே ஒதுக்கீடு செய்யப்பட்டது.
முதலமைச்சர் கருணாநிதி லெகசி
அதன் பின்னர். முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரன் ஆட்சியின் போது ஜூலை 1982 முதல், இது சத்துணவு திட்டமாக கொண்டு வரப்பட்டது. இந்த சத்துணவு திட்டம் பெரிய வரவேற்பை பெற்றது. பொதுவாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு ஒரு வழக்கம் இருந்தது... தனக்கு முந்தைய ஆட்சிகளில் என்ன திட்டம் கொண்டு வந்தாலும் அதை கைவிடாமல், அதில் கூடுதல் பலன்களை சேர்ப்பதை வழக்கமாக வைத்து இருந்தார். நீங்கள் மக்களுக்கு "ஒன்று" செய்கிறீர்களா.. இதோ என்னுடைய ஆட்சியியல் "இரண்டு" செய்கிறேன் பாருங்கள் என்று கூடுதல் திட்டங்களை போட்டிபோட்டுக்கொண்டு வழங்கி வந்தார். தமிழ்நாடு முன்னேறியதும் அபப்டித்தான்!
அப்படித்தான் சத்துணவு திட்டத்திலும் எம்ஜிஆரை விஞ்சும் அளவிற்கு பல்வேறு கூடுதல் பலன்களை சேர்த்தார் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி. 1989ல் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில் சத்துணவு திட்டம் புதுப்பொலிவு பெற்றது. அப்போது சட்டசபையில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை வழங்கப்பட்ட முட்டை இனி வாரந்தோறும் ஒரு முறை வழங்கப்படும் என்று திமுக அரசு அறிவித்தது.
சத்துணவில் அதிகரித்த முட்டைகள்
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இந்தியாவில் இப்போது வரை 13 மாநிலங்களில் மட்டுமே முட்டை வழங்கப்படுகிறது. அதிலும் சில மாநிலங்களில் வாரம் ஒரு முறை மட்டுமே கொடுக்கப்படுகிறது. ஆனால்.. தமிழ்நாடு 1989லேயே வாரம் ஒரு முட்டை கொடுக்கப்பட்டுவிட்டது. அதை அறிவித்தவர் கருணாநிதி. திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று இணையத்தில் கம்பு சுற்றும் நபர்களுக்கு இந்த "லெகசி" தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அதோடு விடவில்லை.. 2006ல் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் காமராஜ் பிறந்த தினமான ஜூலை 15ம் தேதி அன்று வாரம் இரண்டு முட்டை வழங்கும் திட்டத்தை அறிவித்தார். இதற்கான செலவினமாக ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தியாவிலேயே மதிய உணவு திட்டத்திற்கு அதிக தொகை ஒதுக்கிய மாநிலம் தமிழ்நாடுதான்!
பின்னர் அடுத்த வருடமே வாரம் மூன்று முட்டை என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார். 2008ல் 3 முட்டையில் இருந்து வாரம் 5 முட்டை ஆனது. அப்போது இந்த திட்டத்திற்கு ரூ.125.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சத்துணவில் முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு. ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு வாழைப்பழங்கள் வழங்கும் திட்டமும் கொண்டு வரப்பட்டது. சும்மா சாப்பாடு சாப்பிட்டா மட்டும் போதுமா? சத்து வேண்டாமா? புரோட்டின் வேண்டாமா? என்று யோசித்து 5 முட்டை போடும் திட்டத்தை கொண்டு வந்தது கருணாநிதி.
இப்போதும் கூட மதிய உணவில் 5 முட்டை போடும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்.
தந்தையை மிஞ்சிய தனயன்
அந்த தந்தையை மிஞ்சும் தனயனாகத்தான் தற்போது முதல்வர் ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார். பிற மாநிலங்கள் மதிய உணவு திட்டத்திலேயே இன்னும் முழுமை பெறாத நிலையில்தான் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் "முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை" அறிமுகப்படுத்தி உள்ளார். கடந்த மே மாதம் 7ம் தேதி இதற்கான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் அறிவித்தார்.
இதற்கான அரசாணையும் கடந்த ஜூலை மாதம் 27ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, சென்னை உள்ளிட்ட அனைத்து மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மற்றும் மலைப் பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டம் மூலம் நேரடியாக ஒரு லட்சத்து 14,095 மாணவா்களுக்கு காலை உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மொத்தம் ரூ.33.56 கோடியில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னது என்ன?
இந்த பற்றி தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலினும்.. "சமூகநீதியை உள்ளடக்கிய திராவிட மாடல் அரசின் மகத்தான திட்டம்தான் இந்தக் காலை உணவுத் திட்டம். வயிற்றுக்கு நிறைவும் - செவிக்கு அறிவும் ஊட்டுபவையாக பள்ளிச் சாலைகளை மாற்றும் முயற்சி இது. இலட்சக்கணக்கான மாணவக் கண்மணிகளின் மனம் குளிர நான் காரணம் ஆகிறேன் என்பதே எனக்கு ஏற்பட்டுள்ள பெருமகிழ்ச்சி. திராவிட இயக்கக் கொள்கைகளில் உணர்வுப்பூர்வமாகத் தோய்ந்து போன எனக்கு, ஏழைக் குழந்தைகளின் பள்ளிப் படிப்பை ஊக்குவிக்கும் இந்தத் திட்டம் ஒரு கனவுத் திட்டம்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
முதல்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு இந்த உணவு வழங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக 15 மாவட்டங்களில் உள்ள 292 கிராமப் பஞ்சாயத்துகளில் சோதனை முறையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. காலை 7.45 மணிக்குள் சமையல் பணிகள் முடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு இந்த உத்தரவில் கூறி உள்ளது. இந்த திட்டத்தில் கவனிக்கப்பட வேண்டிய விஷயமே காலை உணவு திட்டத்தின் மெனுதான்!
மெனு என்ன?
பல்வேறு விதமான சிற்றுண்டி வகைகளில் ஏதேனும் ஒன்றை குறிப்பிட்டுள்ள நாட்களில் வழங்க வேண்டும்.
- திங்கட்கிழமையில் உப்புமா வகை. ரவா உப்புமா உடன் காய்கறி சாம்பார் அல்லது சேமியா உப்புமா உடன் காய்கறி சாம்பார், கோதுமை ரவா உப்புமா உடன் காய்கறி சாம்பார்.
- செவ்வாய்க்கிழமையில் கிச்சடி வகை. ரவா கிச்சடி சேமியா காய்கறி கிச்சடி அல்லது சோள காய்கறி கிச்சடி அல்லது கோதுமை ரவா காய்கறி கிச்சடி
- புதன்கிழமை பொங்கல் வகை, ரவா பொங்கல் உடன் காய்கறி சாம்பார் அல்லது வெண் பொங்கல் உடன் காய்கறி சாம்பார்.
- வியாழக்கிழமையில் சேமியா வகை: சேமியா உப்புமா உடன் காய்கறி சாம்பார் அல்லது அரிசி உப்புமா உடன் காய்கறி சாம்பார் அல்லது ரவா உப்புமா உடன் காய்கறி சாம்பார், கோதுமை ரவா உப்புமா உடன் காய்கறி சாம்பார் கொடுக்க வேண்டும்.
- வெள்ளிக்கிழமை ஏதாவது ஒரு கிச்சடி வகையுடன் செவ்வாய்க்கிழமை உணவு வகையின்படி ரவா கேசரி சேமியா கேசரி வழங்கப்படும்.
சத்தான உணவு
ஒரு குழந்தைக்கு ஒரு நாளைக்கு வழங்கப்படும் காலை உணவுக்கான மூலப் பொருட்களின் அளவு 50 கிராம் அரிசி / ரவை/கோதுமை ரவை / சேமியா / உள்ளூரில் / அந்தந்த இடங்களில் விளையும் சிறுதானியங்கள் / மற்றும் சாம்பாருக்கான பருப்பு 15 கிராம் மற்றும் உள்ளூரில் கிடைக்கக் கூடிய காய்கறிகள் சமைத்த பின் 150 - 200 கிராம் உணவு மற்றும் 60 மி.கி காய்கறியுடன் கூடிய சாம்பார் . ஒரு வாரத்தில் குறைந்தது 2 நாட்களாவது உள்ளூரில் கிடைக்கக் கூடிய சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுக்க எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டதில்லை.. மதிய உணவு திட்டத்தில் டாப்பில் இருக்கும் தமிழ்நாடு இப்போது காலை உணவுத் திட்டத்தையும் கொண்டு வந்துள்ளது. காலை பள்ளிக்கு வரும் பிஞ்சுகள் பசியோடு வரக்கூடாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்திருக்கும் இந்த திட்டம் இந்த நாட்டிற்கே எடுத்துக்காட்டான திட்டமாக உருவெடுத்து உள்ளது... 50 ஆண்டுகளுக்கு பின் மற்ற மாநிலங்கள் இந்த திட்டம் பற்றி யோசிக்கையில் அது திமுகவின் லெகசி திட்டமாக உருவெடுத்து இருக்கும்!