தேர்தல் பந்தலும் போட்டாச்சு... தோரணமும் கட்டியாச்சு... முரசு ஒலிக்க தொடங்குவது எப்போது?
சென்னை: அதிமுக கூட்டணியில் நீடிக்கும் தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு, தொகுதி பங்கீட்டு நிலை என்னவென்று தெரியாமல் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது.
தேமுதிக சுமார் 40 சீட்டுகள் வரை அதிமுக தலைமையிடம் கேட்டு இருப்பதாகவும், ஆனால் இதற்கு இரட்டை இலை சம்மதம் தெரிவிக்காமல் இழுத்து வருவதே முரசின் மவுனத்துக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
தேமுதிக-அதிமுக இடையே ரகசிய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் இரட்டை இலைக்கு ஆதரவாக முரசு ஒலிக்க தொடங்கி விடும் என்றும் தகவல்கள் வருகின்றன.
தேமுதிகவின் அமைதி
தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நேரத்தில் இருந்து அரசியல் கட்சிகள் தங்கள் பணியை விரைவுபடுத்தி விட்டன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீட்டு பேச்சு என பெரும்பாலான கட்சிகள் களத்தில் பம்பரமாக சுழன்று வருகின்றன. ஆனால் தேர்தலுக்கும், தங்களுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்பதுபோல் ஒரு கட்சி தொடர்ந்து அமைதியை கடைபிடித்து வருகிறது. 2011-ம் ஆண்டு தேர்தலில் பலம் வாய்ந்த திமுகவையே பின்னுக்கு தள்ளி எதிர்க்கட்சி அரியணையில் அமர்ந்த தேமுதிகதான் இந்த கட்சி.
கூட்டணிக்காக தவம் கிடந்தனர்
ஒரு காலத்தில் தேமுதிக கட்சி அலுவலகத்திலும், விஜயகாந்த் வீட்டு வாசலிலும் கூட்டணிக்காக பல்வேறு கட்சிகள் தவம் கிடந்த தேமுதிகவின் நிலைமை இந்த அளவுக்கு மோசமாகும் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். தமிழகத்தில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மக்களின் துணையுடன் 2005-ல் தேமுதிகவை தொடங்கினார் விஜயகாந்த்.
எதிர்க்கட்சி அந்தஸ்து
2006-ம் ஆண்டு சந்தித்த முதல் தேர்தலில் ஒரு இடம் மட்டும் பெற்றாலும், வாக்கு சதவீத அளவில் மக்களின் நம்பிக்கையை பெற்றது தேமுதிக. 2011-ம் தேர்தலில் இரட்டை இலையுடன்(அதிமுக) கை கோர்த்தது முரசு(தேமுதிக). அந்த தேர்தலில் பட்டிதொட்டி எங்கும் முரசு பலமாக ஒலித்தது. ஆம்.. ஜெயலலிதாவே ஆச்சரியப்படும் அளவுக்கு 29 இடங்களை பிடித்த தேமுதிக, பலம் வாய்ந்த திமுகவை கடாசிவிட்டு எதிர்க்கட்சி அரியணையில் கெத்தாக அமர்ந்தது. திமுக, அதிமுகவுக்கு மாற்றாக முரசு ஒலிக்க தொடங்கி விட்டது என்று அரசியல் நிபுணர்கள் பலரும் கூறினார்கள்.
செயலிழந்த முரசு
இப்படி தொடர்ந்து டாப் கியரில் பயணிக்க வேண்டிய தேமுதிக அடுத்தடுத்து சரிவை நோக்கி சென்றதுதான் பரிதாபத்தின் உச்சம். ''செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா'' என்பது போல் தவறான கூட்டணிக்கு சென்று 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதள பாதாளத்திற்கு சென்றது தேமுதிக. 2014 மற்றும் 2019 நாடாளுமன்ற தேர்தல்களிலும் முரசு கொஞ்சம் கூட ஒலிக்காமல் செயலிழந்து போனது.
வீழ்ச்சிக்கு காரணம் என்ன?
சுமார் 10 சதவீத வாக்கு வங்கியுடன் கம்பீரமாக வலம் வந்த தேமுதிக, இப்போது வெறும் 2 சதவீத வாக்கு வங்கியுடன் பரிதாபமாக காட்சியளிக்கிறது. ஜெயலிதாவுடன் மோதல், தவறான கூட்டணி, விஜயகாந்தின் உடல்நிலை பாதிப்பு ஆகியவையே ஆளும் கட்சி அளவுக்கு நின்று இருக்க வேண்டிய தேமுதிகவின் வீழ்ச்சிக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
மாம்பழம் கனிந்து விட்டது
தற்போது அதிமுக கூட்டணியில் நீடிக்கும் தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு, தொகுதி பங்கீட்டு நிலை என்னவென்று தெரியாமல் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. அதிமுக கூட்டணியில் உள்ள பாமக, வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கோரிக்கை(நெருக்கடி) விடுத்து அதில் வெற்றியும் பெற்று, தொகுதி பேச்சுவார்த்தைக்கு தயாராகி விட்டது. மாம்பழமே கனிந்து இரட்டை இலை பக்கம் ஒதுங்கிய நிலையில், முரசு தொடர்ந்து மவுனம் காப்பது அக்கட்சி தொண்டர்களிடம் சோர்வை உண்டாக்கி இருக்கிறது.
திமுகவுடன் கூட்டணியில்லை?
''நாங்கள் இடம்பெறும் கூட்டணியே ஆட்சியமைக்கும்'' என்று பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன் தெருவுக்கு, தெரு தொடந்து பேசி வருகின்றனர். திமுகவுடன் கூட்டணி இல்லை என்று பிரேமலதா அறிவித்துவிட்ட நிலையில் அதிமுகவை விட்டால் அவர்களுக்கு வேறு ஆள் இல்லை. ஆனால் இன்னும் அதிமுகவுடன் தொகுதி தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்கவில்லை.
ரகசிய பேச்சுவார்த்தை?
தேமுதிக சுமார் 40 சீட்டுகள் வரை அதிமுக தலைமையிடம் கேட்டு இருப்பதாகவும், ஆனால் இதற்கு இரட்டை இலை சம்மதம் தெரிவிக்காமல் இழுத்து வருவதே முரசின் மவுனத்துக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. பிரேமலதா சில இடங்களில் அதிமுகவை எதிர்த்து குரல் கொடுத்ததும், சசிகலாவை பாராட்டி பேசியதும் இதனால்தான் என்றும் தகவல்கள் கசிகின்றன. தேமுதிக-அதிமுக இடையே ரகசிய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் இரட்டை இலைக்கு ஆதரவாக முரசு ஒலிக்க தொடங்கி விடும் என்றும் தகவல்கள் வருகின்றன.
மவுனம் கலைக்குமா முரசு?
இது ஒருபுறமிருக்க விஜயகாந்த் விருத்தாச்சலத்தில், விஜயபிரபாகரன் அம்பத்தூரில், பிரேமலதா விருகம்பாக்கத்தில் என விஜயகாந்தின் மொத்த குடும்பமே சட்டசபை தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று தேமுதிக தொண்டர்கள் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த அளவுக்கு விசுவாசமாக இருக்கும் தொண்டர்களுக்காக, தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீட்டு குறித்து முரசு மவுனத்தை கலைத்து பலமாக ஒலிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.