‘தனி கேம்’.. எடப்பாடியின் சாதுர்யம்.. ஃபைட் அவங்க கூட இல்லயாம்! டெல்லிக்கு சொன்ன சேதி! ப்ரியன் பளிச்
பாஜகவை நேரடியாக பகைத்துக் கொள்ளக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கும் ஈபிஎஸ், அதேநேரம், வேறொரு கணக்கும் போட்டுள்ளார் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.
சென்னை : எடப்பாடி பழனிசமி தரப்பு, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளரை அறிவித்த கையோடு, பேனர் மூலம் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இடைத்தேர்தலில் மட்டும் ஒரு 'தனி கேம்' ஆட எடப்பாடி பழனிசாமி தயாராகிவிட்டார் என நமது ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக மட்டும் வேட்பாளரை அறிவிக்காமல் இருந்து வந்த நிலையில், ஒரே நாளில் ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் தங்கள் அணிகளின் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.
பாஜகவின் முடிவுக்காக இருவரும் இத்தனை நாட்களாக தாமதித்து வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அதிரடி முடிவை எடுப்பதற்கு பின்னால் இருக்கும் கணக்குகள் என்ன என்பதை விவரிக்கிறார் பத்திரிகையாளர் ப்ரியன். அவரது பேட்டி இனி...
அடேங்கப்பா.. “ட்விஸ்ட்டு”.. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
ஈபிஎஸ் அணி - வலிமையான வேட்பாளர்?
கேள்வி : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசுவை வேட்பாளராக அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. அவர் வலுவான வேட்பாளர் தானா?
பதில் : ஒன்றுபட்ட அதிமுகவாக இருந்தால் அவர் வலிமையான வேட்பாளர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. குறிப்பாக, அந்த தொகுதியில் 18 சதவீதம் வரை அவர் சார்ந்த சமூகத்தினர் இருக்கின்றனர். அந்தப் பகுதியின் பெரும்பான்மை சமூக மக்களின் நம்பிக்கை மிகுந்த தலைவராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். தென்னரசு, ஒன்றுபட்ட அதிமுக வேட்பாளராக களமிறங்கி இருந்தால் திமுக கூட்டணிக்கு டஃப் ஃபைட் கொடுத்திருப்பார். இப்போதும் ஓரளவுக்கு வாக்குகளைப் பெறுவார். இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக மக்கள் வாக்களிப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதைத்தாண்டி தென்னரசு, ஆளுங்கட்சி கூட்டணிக்கு அடுத்த இடைத்தைப் பெறுவார். ஆனால், எவ்வளவு வித்தியாசம் என்பதுதான் யூகிக்க முடியாததாக இருக்கிறது.
இதே அங்கு நடந்திருந்தால்
ஈரோடு கிழக்கு இல்லாமல் டெல்டா மாவட்டத்திலோ, தென் மாவட்டங்களிலோ இடைத்தேர்தல் நடந்திருந்தால் எடப்பாடி பழனிசாமி ஆர்வம் காட்டியிருக்க மாட்டார். இப்போது ஓபிஎஸ் எப்படி இதில் இருந்து விலகுவதற்கு யோசித்து வருவது போல ஈபிஎஸ்ஸும் யோசித்திருப்பார். இப்போது அவருக்கு பலமான ஏரியாவில் இடைத்தேர்தல் வந்துள்ளது. அதிமுகவில் நிலவும் ஓபிஎஸ் உடனான போட்டியில், தனக்கு தொண்டர்கள் ஆதரவு இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக களத்தில் தீவிரமாக நிற்கிறார். இரட்டை இலை இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று நிற்கிறார். எடப்பாடி பழனிசாமியின் கணக்கு, வெற்றி பெறுவது அல்ல, தான் தான் அதிமுக என நிரூபிப்பதற்காகத்தான். அதற்கேற்ற வகையில் வலுவான வேட்பாளரையே ஈபிஎஸ் களமிறக்கியுள்ளார்.
4 சாய்ஸ்
கேள்வி : பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஈரோடு கிழக்கில் வலுவான வேட்பாளர் நிற்க வேண்டும், கொஞ்சம் பொறுத்திருங்கள் எங்கள் நிலைப்பாட்டைச் சொல்வோம் என்கிறார். பாஜக யாரை ஆதரிக்க வாய்ப்புகள் அதிகம்?
பதில் : பாஜகவுக்கு 4 வாய்ப்புகள் இருக்கின்றன.
1. யாருக்கும் ஆதரவு தராமல் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கவேண்டும்.
2. இருவரில் ஒருவரை ஆதரிக்க வேண்டும்.
3. பாஜக போட்டியிடுவதாக அறிவிக்க வேண்டும்.
4. இரட்டை இலை சின்னம் யாரிடம் இருக்கிறதோ அவர்களுக்கு ஆதரவு என்று சொல்ல வேண்டும்.
இரட்டை இலை சின்னம் என்பதில் பிரச்சனை இருக்கிறது. யாராவது ஒருவருக்கு இரட்டை இலை சின்னம் வழங்கப்பட்டால் அது உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கின் முடிவையே பாதிக்கும். அதனால் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுங்கள் என்று கூறப்படவே வாய்ப்பு அதிகம்.
எடப்பாடி சாதுர்யம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக எடப்பாடி பழனிசாமி அணி அமைத்துள்ள பணிமனையில் வைக்கப்பட்டுள்ள பேனரில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தை உத்தேசித்து தேசிய ஜனநாயக கூட்டணி என்றில்லாமல் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்று குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் அந்த பேனரில் மோடி படம் எங்குமே இல்லை. எடப்பாடி பழனிசாமி புத்திசாலித்தனமாக, இதை ஒரு மாநில அளவு விஷயமாகவும் இதற்கும் தேசிய அளவில் நடக்கப்போகும் நாடாளுமன்ற தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, சட்டமன்ற இடைத்தேர்தலில் நாங்கள் ஒரு ஸ்டாண்டை எடுத்திருக்கிறோம் என்ற விஷயத்தை முன்வைக்கிறார்.
ஈபிஎஸ் கணக்கு
பாஜக இந்த இடைத்தேர்தலில் நின்றால், எடப்பாடி பழனிசாமி தனது தரப்பு வேட்பாளருக்கு தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயரை பயன்படுத்த முடியாது. ஏனெனில் அது பாஜக தலைமையிலான கூட்டணி. அதனால் தான் அந்த கூட்டணி பெயரில் ஒரு வார்த்தையை சேர்த்திருக்கிறார். பாஜகவை நேரடியாக பகைத்துக் கொள்ளக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார் ஈபிஎஸ். அதேநேரம் இது மாநிலத்துக்குள் நடைபெறும் இடைத்தேர்தல் என்பதால், ஒரு அணியை உருவாக்கி இருக்கிறோம் என்கிற ரீதியில் கணக்கு போட்டுள்ளார். பாஜக இல்லை என்றாலும் கவலையில்லை, அதேசமயம் ஒரேயடியாகவும் கைவிட முடியாது என்ற முடிவில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
தனியாக ஒரு கேம்
இப்போது இப்படி போட்டுக் கொள்ளலாம். இடைத்தேர்தல் முடிந்தபிறகு, மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்று சொல்லிவிட்டால் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி உறுதியாகிவிடும். அதேவேளையில், அதிமுக மோதல் பிரச்சனை ஓரளவுக்கு முடிவுக்கு வந்து கட்சி யாரிடம் இருக்கிறது என்று தெரிந்துவிடும். அதனால், இந்த இடைத்தேர்தலில் தனியாக ஒரு கேமை ஆடுகிறார் எடப்பாடி பழனிசாமி. இப்போது என் சண்டை ஓபிஎஸ் உடன் தான், நீங்கள் தலையிட தேவையில்லை என்பதுதான் எடப்பாடி பழனிசாமி பாஜகவுக்கு சொல்லும் சேதி.
அண்ணாமலை + எடப்பாடி
கேள்வி : அதிமுக - பாஜக உறவு தாண்டி, எடப்பாடி பழனிசாமி - அண்ணாமலை உறவு பூடகமாகவே இருக்கிறதே.. அண்ணாமலை மூலம் பாஜக ஈபிஎஸ் அணியை ஆதரிக்க வாய்ப்பிருக்கிறதா?
பதில் : 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி ஆதரவு கொங்கு மண்டலத்தில் பாஜகவுக்கு கை கொடுக்கும் என்ற ஒரு கணக்கு இருக்கிறது. ஆனால், அதிமுகவின் ஒரு பகுதியினர், திமுகவுக்கு எதிரான ஒட்டுமொத்த வாக்குகளும் நமக்கே கிடைக்க வேண்டும், பாஜகவுடன் கூட்டணி அமைத்தால், அந்த வாக்குகள் சிதற வாய்ப்புள்ளது, முழுமையாக நமக்குக் கிடைக்காது, ஒட்டுமொத்த திமுக எதிர்ப்பு வாக்குகளும் நமக்கே கிடைக்க வேண்டும், பாஜக குறுக்கே வந்து நம்மால் ஏன் பலனடைய வேண்டும் என்று நினைக்கின்றனர். அண்ணாமலை + எடப்பாடி பழனிசாமி கூட்டணியால் மற்ற சமூக வாக்குகளில் சிதறல் ஏற்படும் என்ற ஐயமும் அவர்களுக்கு இருக்கிறது.
மேலிடம் கணக்கு
பாஜகவை பொறுத்தவரை அண்ணாமலை எடப்பாடியை ஆதரிக்க விரும்பினாலும், மேலிடம் சொன்னால் தான் ஆதரிக்க முடியும்.
ஆனால், மேலிடத்தில் ஓபிஎஸ் மீது தான் நல்ல அபிமானம் இருக்கிறது. கொங்கு மண்டலத்திற்காக எடப்பாடியை ஆதரிக்க முடிவெடுத்தால், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓபிஎஸ் ஆதரவு நமக்குத் தேவை. இந்த இடைத்தேர்தலில் எடப்பாடிக்கு பலம் அதிகம் என்று அவரை ஆதரித்துவிட்டு, ஓபிஎஸ்ஸை ஏன் பகைத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறது பாஜக மேலிடம். எனவே, இந்த இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளித்து நம் நிலைப்பாட்டை காட்டிக்கொள்ள வேண்டாம், அவர்கள் இருவரும் பஞ்சாயத்தை தீர்த்துக்கொண்டு வரட்டும், இப்போதைக்கு யாருக்கும் ஆதரவு அளிக்க வேண்டாம் என நினைப்பதாகக் கூறப்படுகிறது.