வலுவான கூட்டணி முக்கியம்.. கமல் அடுத்து சட்டுபுட்டுனு செய்ய வேண்டியது என்ன?
கமல் உடனடியாக செய்ய வேண்டியது என்னவாக இருக்கிறது?
சென்னை: பொறுப்பாளர்களை நியமித்துவிட்டார் சரி... இனி அடுத்து சட்டுபுட்டுனு கமல் செய்ய வேண்டியது என்ன?
கட்சி ஆரம்பிச்சு இன்னும் முழுசா ஒரு வருஷம் கூட முடியவில்லை. ஆனால் கமல் முனைப்புடன் செயல்பட்டு வருவது தெளிவாக தெரிகிறது.
ஆனால் இன்னும் கூட்டணி குறித்து வாய் திறக்காமல் இருக்கிறார். எந்த கட்சியாக இருந்தாலும் அதற்கு முதலில் வலுவான கொள்கை அவசியம். அதனை அடிப்படையாக, அல்லது அதனை ஒத்த கொள்கையுடைய கூட்டணியும் அவசியம். அப்போதுதான் வெற்றி பெறுவது எளிது.
விமர்சனங்கள்
மக்கள் நீதி மய்யம் தனது கொள்கை என்று சிலவற்றை முன்பே கூறியுள்ளது. இருப்பினும், மேம்போக்கான கொள்கை எந்த ஒரு வெற்றியையும் கொண்டு வந்து தராது. எனவே தீர்க்கமான கொள்கை என்பது ஒரு கட்சியின் முதுகெலும்பு. அதை முதலில் சொன்னாலே பாதி விமர்சனங்கள் மய்யத்தின் மீது தவிர்க்கப்பட்டு விடும்.
கூட்டணி சறுக்கல்
கட்சி ஆரம்பிக்கும்போதிலிருந்து இப்போது வரை கமல் சொல்லி கொண்டிருப்பது ஊழலை ஒழிப்பதை பற்றிதான். ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் எல்லா கட்சிகளிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சியை தவிர வேறு எந்த கட்சி மீது ஊழல் சாயம் பூசப்படவில்லை? இந்த கொள்கை கண்டிப்பாக அவரது தேர்தல் கூட்டணிக்கு சறுக்கலை தரும்.
சஸ்பென்ஸ்
ஒருமித்த கருத்து உடைய கட்சிகளோடுதான் கூட்டணி என்று சொல்லி இருக்கிறார். அதுதொடர்பான பேச்சுகள் நடந்து வருவதாகவும் கூறியுள்ளார். காங்கிரஸ் குறித்து சஸ்பென்ஸும் வைத்துள்ளார்.
ஊழல் இல்லாத கட்சி?
கமலின் ஒருமித்த கருத்து என்றால், அது என்ன கருத்து? ஊழலை ஒழிப்பேன் என்பதுதான் கமலின் கொள்கையாக இருந்தால், ஊழல் குற்றச்சாட்டு இல்லாத கட்சி எது? ஊழல் புரியாதவர்கள் யார் என்பதை பகிரங்கப்படுத்தி அவர்களுடன் கூட்டணி வைக்க வேண்டும்? ஆனால் அது சாத்தியமா? கூட்டணிக்கு வெற்றியை தேடி தருமா என தெரியாது.
கூட்டணி அறிவிக்க வேண்டும்
அதனால், ஊழலை ஒழிப்பேன் என்று கமல் சொல்வது நல்ல விஷயமாகவே இருந்தாலும், இப்போதைக்கு அது முக்கிய பிரச்சனை இல்லை. அதைவிட தலைபோகிற பிரச்சனைகள் தமிழகத்தை சூழ்ந்துள்ளன. சாதீய காரணங்கள், ஆணவ கொலைகள், பிரித்தாளும் சூழ்ச்சி, வளங்கள் கண்ணெதிரே கொள்ளை போவது உள்ளிட்ட அடிப்படையே ஆட்டம் கண்டு இருக்கின்றன. அதனால் கமல் உடனடியாக தன் கூட்டணியை அறிவிக்க வேண்டும்.
ஆட்சி கையில் வரட்டும்
வெறும் ஊழல் ஒழிப்பு கொள்கையை மட்டும் மக்கள் நம்பமாட்டார்கள். ஊழலை ஒழிப்பது அவசியம் என்றாலும், அதை வெறும் வார்த்தைகளாக சொல்லி கொண்டிருக்காமல், ஆட்சிக்கு வந்தபிறகு சொல்லாமலேயே கையில் எடுத்து செய்யலாம்.
வலை விரிப்பார்கள்
அதனால் கமல் செய்யவேண்டியது, டிடிவி தினகரன், பாமக, தினகரன், மதிமுக, த.மா.கா, விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்ட்கள் என அனைவரிடமும் பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார். இப்போதைக்கு அதிமுகமேல் மக்கள் அதிருப்தியில் இருப்பதால் எல்லோரும் திமுக கூட்டணிக்கு தான் வலைவிரிக்க பார்ப்பார்கள். இந்த வலையை கமலும் விரிக்க ஆரம்பிக்க வேண்டும்.
அரசியல் விளையாட்டு
இன்னும் சொல்லப்போனால் இது எப்பவோ நடந்து முடிந்திருக்கவும் வேண்டும். இதுவே தாமதம்தான். இனியாவது கமல் விரைந்து முடிவெடுக்க வேண்டும். இது அரசியல் விளையாட்டு. யார் முதலில் முந்துகிறார்களோ அவர்களுக்குதான் கூட்டணி வாய்ப்பு என்பதை உணர வேண்டும்.. கமல் உள்பட.