மிஷன் கர்மயோகி இயக்கம் என்றால் என்ன? - கர்மயோகிகள் உருவானால் மக்களுக்கு என்ன பலன்
யார் தன்னுடைய பணியில் தன்னை முழுமையாக அர்பணித்து கொள்கிறார்களோ அவர்களே கர்மயோகி.
சென்னை: கடமை செய் என்று பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறியிருக்கிறார். அதே போல எந்த ஒரு பணியையும் அர்ப்பணிப்பு உணர்வோடும் கடமை உணர்வோடும் செய்யவேண்டும் என்று சொல்வார்கள். கர்மயோகம் பற்றி விவேகானந்தர் அற்புதமாக விளக்கியிருக்கிறார். கர்மம் என்றால் செயல். நம்முடைய செயல் சேவை மனப்பான்மையோடு இருக்கவேண்டும் தவிர ஏதோ கொடுத்த கடமைக்காக செய்தோம் சம்பளம் வாங்கினோம் என்று இருக்கக் கூடாது. யார் தன்னுடைய பணியில் தன்னை முழுமையாக அர்பணித்து கொள்கிறார்களோ அவர்களே கர்மயோகி. அனைத்து அரசுப்பணியாளர்களையும் கர்மயோகிகளாக மாற்றுவதே மிஷன் திட்டத்தின் நோக்கமாகும்.
சிவில் சர்வீஸ் பணியில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரின் திறமையையும் பட்டைதீட்டி அவர்களை கர்மயோகிகளாக மாற்றுவதற்காகவே இந்த கர்மயோகி இயக்கத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
உலகத்தின் மிகப்பெரிய அரசு சேவைகள் சீர்திருத்த திட்டம் என்று கர்மயோகி இயக்கத்தை மத்திய அமைச்சர்கள் வர்ணிக்கின்றனர். தனிப்பட்ட, துறை சார்ந்த மற்றும் செயல்முறை அளவிலான திறன்மிகு பொது சேவை வழங்கலை கட்டமைப்பதற்கான விரிவான சீர்திருத்தம் இது என்றும் கூறிவருகின்றனர்.
அரசு ஊழியர்கள் சர்வதேச சிறந்த செயல்முறைகளை கற்றுக் கொள்ளும் அதேவேளையில், இந்திய கலாச்சாரத்திலும் அவர்கள் வேரூன்றி இருப்பதற்கான அடித்தளத்தை அமைப்பதற்காக, அரசு ஊழியர்களுக்கான தேசிய திறன் கட்டமைத்தல் திட்டமான கர்மயோகி இயக்கம் அமையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சீன செயலிகள் தடை செய்யப்பட்ட மறுநாளே.. ஹேக் செய்யப்பட்ட மோடியின் டிவிட்டர்.. யார் இந்த ஜான் விக்?
மிஷன் கர்மயோகி யாருக்கு
மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த மிஷன் கர்மயோகி திட்டம் யாருக்கானது என்றால் சிவில் சர்வீசஸ் பணியில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் போன்ற உயர் பணியில் இருப்பவர்களுக்கு இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டம் தனித்துவமானது, நிர்வாகம் சீர்த்திருத்தத்தை அளிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.
பிரதமரின் கீழ் ஒருங்கிணைப்பு
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் தேர்வில் வெற்றி பெற்று பயிற்சிகள் முடிந்து வேலைக்கு வந்த பிறகு அவர்களின் தனித்திறமையை மேம்படுத்த அவர்களுக்கு மேலும் பயிற்சி தரப்படும். இந்த பயிற்சிகளை ஒருங்கிணைத்து ஒன்றுபடுத்தி அங்கீகாரம் பிரதமரின் கீழ் வருகிறது. இந்த திட்டத்தின் பயிற்சி அளிக்க ஒரு உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு அதற்கு பாரத பிரதமர் தலைமையின் கீழ் இயக்கும். சர்வதேச நிபுணர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
கர்மயோகிகள் எப்படி இருக்க வேண்டும்
யார் தன்னுடைய பணியில் தன்னை முழுமையாக அர்பணித்து கொள்கிறார்களோ அவர்களே கர்மயோகி. அனைத்து அரசுப்பணியாளர்களையும் கர்மயோகிகளாக மாற்றுவதே இந்த திட்டத்தின் நோக்கம். கர்மயோகிகளாக மாறும் மத்திய அரசு பணியாளர்கள் அமைதி, பணிவும் கொண்டவர்களா இருக்கவேண்டும். ப்ரோ ஆக்டிவ் கொண்டவர்களாக இருக்கவேண்டும்.
எதிர்கால இந்தியாவிற்கான திட்டம்
எதிர்கால இந்தியாவிற்கு ஏற்ற வகையில் இந்தியாவின் அரசு ஊழியர்களை இன்னும் படைப்பாற்றல் மிக்கவர்களாக, கற்பனைத்திறன் மிக்கவர்களாக, புதுமைகளை படைப்பவர்களாக, செயல்திறன் மிக்கவர்களாக, நிபுணத்துவம் பெற்றவர்களாக, முற்போக்கானவர்களாக, ஆற்றல் மிக்கவர்களாக, ஆக்கப்பூர்வமானவர்களாக, வெளிப்படைத்தன்மை மிக்கவர்களாக, தொழில்நுட்பத்தை பயன்படுத்துபவர்களாக தயார்படுத்துவதே கர்மயோகி இயக்கத்தின் நோக்கமாகும்.
பயிற்சிகளின் மூலம் திறமை மேம்படுத்துதல்
கர்மயோகி திட்டத்தின் மூலம் மக்களுக்கு பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு பல்வேறு கட்ட பயிற்சிகள் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சிவில் சர்வீஸ் பணி செய்யும் அதிகாரிகளுக்கு திறமை என்ன இருக்கிறது என்பதை அறிந்து அதில் பயிற்சி பெற வேண்டும். பிரதமர் தலைமையிலான குழு இந்த பயிற்சியை நிர்ணயிக்கும். மனித வளத்தை மேம்படுத்துவதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
தொழில் நுட்பத்திறன்
இந்த திட்டத்தில் பிரதமர் மோடி தலைமையில் மனிதவள கவுன்சில் இயங்கும் என்றும், இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு சேவை செய்யும் பணியில் உள்ளோர் படைப்பாற்றலுடனும், தொழில்நுட்பத்தை பற்றி அறிந்துகொள்ளவும் முடியும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
கர்மயோகி இயக்கத்தின் நோக்கம்
பிரதமரின் பொது மனிதவள மேம்பாட்டுக் குழு, திறன் வளர்த்தல் ஆணையம், டிஜிட்டல் சொத்துகள் மற்றும் ஆன்லைன் பயிற்சிக்கான தொழில்நுட்ப தளத்தை நிர்வகிக்க சிறப்பு நோக்கு அமைப்பு, அமைச்சரவை செயலாளர் தலைமையிலான ஒருங்கிணைப்புக் குழு செயல்படும்.
திறமைகள் வெளிப்படும்
இது இரண்டு பாதைகளைக் கொண்டிருக்கும். சுயமாக இயக்கப்படும். இதன் மூலம் அதிகாரி தனக்கு ஆர்வமுள்ள துறையைத் தேர்வுசெய்ய முடியும். மேலும் அதற்கான வழிகாட்டுதல்களும் அதிகாரிகளுக்கு வழங்கப்படும். இதன் மூலம் அதிகாரிகள் தங்கள் வேலைகளை திறம்படச் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
மோடி விளக்கம்
அரசு ஊழியர்களின் திறன்களை மேம்படுத்த நவீன உள்கட்டமைப்பு பயன்படுத்தப்படும். வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் அரசு ஊழியர்களை இன்னும் படைப்பாற்றல் மிக்கவர்களாகவும், ஆக்கப்பூர்வமானவர்களாகவும் மற்றும் புதுமைகளை புகுத்துபவர்களாகவும் ஆக்குவதே கர்மயோகி இயக்கத்தின் நோக்கமாகும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
சீர்திருத்த பணிகள்
அரசுப் பணிகளில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வருவதை கர்மயோகி இயக்கம் லட்சியமாகக் கொண்டுள்ளது. தனிப்பட்ட மற்றும் அமைப்பு சார்ந்த திறன்மிகு பொது சேவை வழங்கலை கட்டமைப்பதற்கான முழுமையான மற்றும் விரிவான சீர்திருத்தம் இது என்று உள்துறை அமித் ஷா தெரிவித்துள்ளார். தொலைநோக்கு பார்வை கொண்ட இந்த சீர்திருத்தத்திற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
கர்மயோகிகள் உருவானால் நன்மை
21ஆம் நூற்றாண்டுக்கான மிகப்பெரிய சீர்திருத்தமான இந்த இயக்கம் புதிய பணி கலாச்சாரத்தை உருவக்கும் என்றும், இலக்கு சார்ந்த தொடர் பயிற்சிகள் அரசுப் பணியாளர்களுக்கு ஊக்கமளித்து, அதிகாரமளிக்கும் என்று
மத்திய அமைச்சர்கள் கூறியுள்ளனர். ஒரு சில பணியாளர்கள், அதிகாரிகள் தவிர சிலர் அரசுப்பணியை ஏதோ கடமைக்காக செய்கின்றனர். நிஜமாகவே கர்மயோகிகள் மத்திய அரசுப்பணியாளர்களாக கிடைத்தால் அது நாட்டு மக்களுக்குத்தான் நன்மை செய்யும்.