பழைய மு.க. அழகிரியா .. இல்லை ரஜினிகாந்த் "பார்ட் 2-வா".. ரொம்ப உழப்புறாரே மதுரைக்காரர்!
சட்டசபை தேர்தலில் அழகிரியின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?
சென்னை: "ரஜினி பார்ட் 2" - என்றுதான் முக அழகிரியை சொல்ல வேண்டும்.. வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்று இல்லாமல் இன்றைய தேதியிலும், உழப்பிவிட்டு கொண்டு இருக்கிறார்.
முக அழகிரியை பொறுத்தவரை மென்மையானவர்.. அன்பானவர்.. கட்சி உறுப்பினர்கள் மீது பிடித்தமானவர்.. முக்கிய அடித்தட்டு தொண்டரின் உழைப்பையும் மதித்து போற்றக்கூடியவர். அப்படிப்பட்டவர்கள் மேலே முன்னேறி வர வேண்டும் என்ற அடித்தள ஆசை உடையவர்.
அதனால்தான் இன்னமும் கூட அழகிரி மீது திமுக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் பலர் தனிப்பட்ட முறையில் பிரியத்துடன் இருக்கிறார்கள்.. இந்த குணம்தான் மாற்று கட்சி தலைவர்களையும் கவர்ந்து இழுத்தது. இதில் பாஜக உட்பட பல கட்சிகள் அடக்கம்.
திமுகவை டேமேஜ் செய்ய அழகிரியை வைத்து பாஜக காய் நகர்த்தி வருவது தெரிந்த சமாச்சாரம்தான்.. என்றாலும், அதற்கு அழகிரி நோ சொல்லி விட்டார்.. பிறகு தனி கட்சி அமைக்க போவதாக சொன்னார்கள்.. அதையும் இன்னமும் ஆரம்பிக்கவில்லை.
இப்போது, திடீரென வந்து சட்டமன்றத்தில் தன் பங்களிப்பு இருக்கும் என்கிறார்... இதற்கு என்ன அர்த்தம்? கட்சி தொடங்க போகிறாரா இல்லையா? ரஜினி போலவே இவரையும் பாஜக முயற்சித்து கொண்டிருக்கிறது.. ரஜினி போலவே இவரும் இழுத்தடித்து கொண்டிருக்கிறார்.. ரஜினி போலவே இவருக்கும் போஸ்டர் அடித்து தலைமை தாங்க வருமாறு ஆதரவாளர்கள் கோரிக்கை வைத்தனர்.. அதையும் இவர் கண்டுகொள்ளவில்லை.
திமுகவில் இவரது மகனுக்கு சீட் தருவதாக ஒரு செய்தி கசிந்தது.. அப்படியானால் அங்கே உடன்பாடு ஏற்பட்டுள்ளதா? அல்லது அந்த செய்தி வதந்தியா என்று தெரியவில்லை.. ரஜினியுடன் சேரப் போவதாக சொன்னது என்னவாயிற்று? முதலில் ரஜினியே வருகிறாரா இல்லையா என்று நமக்கு தெரியவில்லையே.?!
எல்லாத்தையும் விடுங்க.. ரஜினி செய்ததிலேயே பெரிய தப்பு எது தெரியுமா.. சாட்சாத் இது மட்டும்தான்..!
ரஜினி, அழகிரி சம்பந்தமாக நித்தம் ஒரு பேச்சு, நித்தம் ஒரு செய்தி வந்து கொண்டிருப்பதால், எது உண்மை? எது வதந்தி? என்பது புரிபடவில்லை
இதில் எதுவாக இருந்தாலும், ரஜினி மாதிரியே இழுத்தடித்துக் கொண்டிருப்பது சரியில்லை. வெட்டு ஒன்று. துண்டு 2 என்று இல்லாமல் இழுபறியாக இருப்பதால் அழகிரியின் ஆதரவாளர்கள்தான் விரக்தி ஆவார்கள்.. இப்படித்தான் ரஜினி ரசிகர்கள் டயர்ட் ஆகிவிட்டார்கள்.. அதுமாதிரி தன் ஆதரவாளர்களையும் சோர்வாக்கி விடாமல் இருக்க வேண்டும் அஞ்சாநெஞ்சன் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.