ஆரம்பித்தது பாஜக ஆட்டம்... சிபிஐ விசாரணையில் மகன்...அழகிரி சொல்லும் சட்டசபை தேர்தல் 'பங்கு' என்ன?
சென்னை: சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் சிபிஐ விசாரணை வளையத்தில் மு.க.அழகிரி மகன் துரைதயாநிதி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனையடுத்து சட்டசபை தேர்தலில் எனது பங்கும் இருக்கும் என மு.க. அழகிரி பேட்டி தந்ததாகவும் கூறப்படுகிறது.
சட்டசபை தேர்தலில் ரஜினிகாந்த் அல்லது மு.க. அழகிரியை தனிக் கட்சி தொடங்க வைக்க பாஜக பகீரத பிரயத்தனம் செய்தது. ஆனால் அது நடக்கவில்லை. ரஜினிகாந்தை பொறுத்தவரையில் தனிக்கட்சி தொடங்கமாட்டார் என்பது உறுதியாகிவிட்டது.
பலம் தெரிந்ததால் ஜகா
மு.க. அழகிரி, கலைஞர் திமுக என கட்சியைத் தொடங்கி திமுக வாக்குகளைப் பிரிப்பார் என சிலர் கனவு கண்டனர். ஆனால் ரஜினிகாந்துக்கும் மு.க. அழகிரிக்கும் தங்களது பலம் என்ன? வாக்குகள் என்ன என்பது தெரியும் என்பதால் இந்த விஷப் பரீட்சையில் உடனே இறங்கவும் இல்லை.
டெல்லி ஆட்டம் ஆரம்பம்
இந்த நிலையில் அதிமுக- பாஜக கூட்டணி உறுதியாகி அவர்கள் வேலையை பார்க்கத் தொடங்கிவிட்டனர்; திமுக- காங்கிரஸ் கூட்டணியும் தேர்தல் வேலைகளில் பிஸியாகிவிட்டனர். இப்போது தங்களது பிடிக்கு வராத மு.க. அழகிரிக்கு நெருக்கடி தரும் வேலைகளை டெல்லி தொடங்கி இருப்பதாக மதுரை தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசாரணை வளையத்தில் துரை தயாநிதி?
ஏற்கனவே மு.க. அழகிரி மகன் துரை தயாநிதி பெயரிலான சில வழக்குகளை சிபிஐ இப்போது கையில் எடுத்துள்ளதாம். துரை தயாநிதியை விசாரணை என்ற பெயரில் சிபிஐ வளைத்துள்ளதாம். இப்படி சிபிஐ நெருக்கடி தருவதால்தான் மதுரையில் திடீரென செய்தியாளர்களை மு.க. அழகிரி சந்தித்தார்.
என்ன பங்களிப்பு?
அந்த சந்திப்பில், சட்டசபை தேர்தலில் என்னுடைய பங்கும் இருக்கும் என மு.க. அழகிரி கூறினார். மேலும் பாஜகவில் இணைவது தொடர்பான கேள்வியையும் வதந்தி என நிராகரித்துவிட்டார் மு.க. அழகிரி. அவரது இந்த பேட்டி என்பது திமுகவுடனான நேசக்கரத்துக்கான அறிகுறியா? அல்லது பாஜகவின் போக்குக்கு இணங்கி தனிக்கட்சி தொடங்கியாக வேண்டியதுதான் என்பதன் வெளிப்பாடா? என்பதுதான் அழகிரி ஆதரவாளர்களிடம் விவாதமாக இருக்கிறது.