முதல்ல பிள்ளை பொறக்கட்டும்.. பிறகு பெயர் வைப்பது குறித்து யோசிப்போம்!
ரஜினி - கராத்தே தியாகராஜன் சந்திப்பு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சென்னை: ரஜினி என்ன தான் பண்ண போறாரு? ஒன்னுமே புரியலையே?
கட்சி ஆரம்பிக்கும் முன்னரே, கொள்கையை அறிவிக்கும் முன்னரே, பரபரப்பாக பேசப்படும் நபர் ரஜினி மட்டும்தான்!! முக்கியமாக இந்த பரபரப்பு 20 வருடத்திற்கும் மேலாக அடங்காமல் வைத்திருப்பது அதைவிட ஹாட் ஸ்பெஷல்!!
ரஜினி பற்றிய விவகாரங்களும், செய்திகளும் தற்போது அதிகமாகவே தலைதூக்கி வருகின்றன. எப்போதுமே ரஜினியை அரசியல் சார்பற்று நட்பு வைத்திருப்பவர்கள் ஏராளம். தற்போது தேர்தல் தொடங்க உள்ள நிலையில், ரஜினியை யார் போய் சந்தித்து விட்டு வந்தாலும் அது ஒரு பரபரப்பாகவும், அரசியல் சூழலுக்குள் அடங்கி போன ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது.
[தினகரன் ஒரு மண் குதிரை.. அவரை நம்பி ஆற்றில் இறங்கலாமா.. அதான் அல்வா கொடுத்துவிட்டார்- ஜெயக்குமார்]
நெருக்கமான உறவு
இப்படித்தான் நேற்றுமுன்தினம் ரஜினியை கராத்தே தியாகராஜன் சென்று பார்த்தார். இதற்கு காரணம் ரஜினியின் நெருங்கிய நண்பர் கராத்தே தியாகராஜன் எனவே இவர்கள் சந்தித்து பேசிக் கொள்வதும் அரசியல் நிலவரம் குறித்து விவாதித்து கொள்வதும் வழக்கம். மத்திய அமைச்சரின் ஆதரவாளரான கராத்தே தியாகராஜன் இருந்தாலும், அரசியலுக்கு அப்பாற்பட்டு ரஜினியுடன் நெருக்கமான உறவினை எப்போதுமே கொண்டிருப்பவர்.
நட்பு மட்டும்தானா?
அந்த வகையில் நேற்றுமுன்தினம்கூட ரஜினியை போயஸ் கார்டன் வீட்டில் கராத்தே தியாகராஜன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரசியல் களத்தில் சலசலப்பையும் ஏற்படுத்தியது. இவர்களது சந்திப்பு ஒரு மணி நேரம் நடைபெற்றது. இருவரும் என்ன பேசி கொண்டார்கள் என்று முழுவதுமாக தெரியவில்லை. ஆனால் இந்த முறை கராத்தே தியாகராஜன் ரஜினியை சந்தித்துவிட்டு வந்ததை அப்படி நட்பு ரீதியாக மட்டும் பார்த்து விட முடியாது.
ஏன் சந்திப்பு?
அதற்கு முக்கிய காரணம், கட்சி தொடங்குவதற்கான பணிகளில் தற்போதுதான் ரஜினி முன்னெப்போதையும்விட தீவிரம் காட்டி வருகிறார். இரண்டாவது காரணம், திமுகவுடன் ரஜினிக்கு ஏழரை ஆரம்பித்துவிட்டது. அக்கட்சியுடன் சுமூகமான போக்கு இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது. இந்த நிலையில் காங்கிரசை சேர்ந்த கராத்தே தியாகராஜனின் இந்த சந்திப்புதான் முக்கியத்துவமாக பார்க்கப்பட காரணமாக இருக்கிறது.
எதிர்மறை விமர்சனங்கள்
இறுதியாக சந்திப்பு குறித்து பேசிய கராத்தே தியாகராஜன், ரஜினி தலைமையில் ஒரு அணியும் ஸ்டாலின் தலைமையில் ஒரு அணியும் உருவாகும் என்று சொன்னார். பலதரப்பட்ட அரசியல் கட்சிகளிடமிருந்து தமக்கு எந்தவிதமான எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் அரசியலை உன்னிப்பாகவே கவனித்து வந்து கொண்டிருக்கிறார் ரஜினி.
பகிரங்க அறிவிப்பு
திருநாவுக்கரசு தொடங்கி டிடிவி தினகரன், திருமாவளவன் வரை எல்லோருமே ரஜினிக்கு நண்பர்கள்தான். இன்னும் சொல்லப்போனால் திமுக தங்களுக்கு உடன்படாவிட்டால் ரஜினியை வளைத்து போடும் திட்டங்களை கூட காங்கிரஸ் இரு மாதங்களுக்கு முன்னமேயே எடுத்தது. அதேபோல திமுகவைவிட்டு விலகினால் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க தயார் என்று செப்டம்பர் மாதமே தினகரன் பகிரங்கமாகவே அறிவித்திருந்தார்.
குழப்பமாக உள்ளது
எனவே ரஜினி - திருநாவுக்கரசு - திருமாவளவன் - டிடிவி தினகரன் கூட்டணியா? என்ற புதிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே ஒன்றும் புரியாமல் தமிழக மக்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் இன்னும் கட்சிகூட ஆரம்பிக்காமலேயே இப்படி கூட்டணி வரை கராத்தே தியாகராஜன் பேசி வருவதுதான் குழப்பமாக உள்ளது. முதல்ல பிள்ளை பொறக்கட்டும்.. பிறகு பெயர் வைப்பது குறித்து யோசிப்போம்.