தமிழிசை சென்றபின் தொடங்கிய சண்டை.. செம கடுப்பில் ஓபிஎஸ்-இபிஎஸ்.. பாஜக-அதிமுக கூட்டணிக்கு என்ன ஆனது?
அதிமுக பாஜக கூட்டணியில் கடந்த சில நாட்களாக உறவு அவ்வளவு சரியாக இல்லை.
சென்னை: அதிமுக பாஜக கூட்டணியில் கடந்த சில நாட்களாக உறவு அவ்வளவு சரியாக இல்லை. எப்போது வேண்டுமானாலும் பாஜக - அதிமுகவின் மாபெரும் கூட்டணி உடைய வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இந்த நிலையில்தான், கட்சியில் இருக்கும் தலைவர்களை கொஞ்சம் '' அடக்கி வாசிக்கும்படி'' முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
உள்ளாட்சி தேர்தலில் இருந்துதான் அதிமுக - பாஜக இடையே சண்டை உருவாக தொடங்கியது. அதிமுக கேட்ட இடங்களை கொடுக்கவில்லை என்று பாஜக புகார் வைத்து வந்தது. லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் தோல்வி அடைந்தோம்.
தனியாக நின்று இருந்தால் கூட, ஒரு எம்பியாவது வென்று இருப்போம். அதுவும் கிடைக்கவில்லை என்று பாஜக மூத்த தலைவர்கள் சிலர் கூறி இருந்தனர். தமிழக பாஜக தலைவராக தமிழிசை இருந்தவரை எல்லாமும் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் தமிழிசை தெலுங்கானா ஆளுநர் ஆன பின் பாஜக - அதிமுக உறவில் விரிசல் ஏற்பட்டது.
பாஜகவை கடுமையாக விமர்சிக்கலாம்.. க்ரீன் சிக்னல் கொடுத்தது அதிமுக?
எங்கே தொடங்கியது
பாஜக அதிமுக இடையிலான சண்டை விஸ்வரூபம் எடுத்தது, நாகர்கோவிலில் களியக்காவிளை பகுதியில் எஸ்.ஐ வில்சன் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட பின்தான். இந்த கொலை குறித்து முன்னாள் பாஜக அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்து இருந்தார். அதில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது.தமிழகத்தில் வன்முறை பெருகிவிட்டது. அரசு இதை கட்டுப்படுத்த தவறிவிட்டது. தமிழகம் தீவிரவாதிகளின் பயிற்சி கூடாரமாக மாறிவிட்டது என்று கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.
அதிமுக கோபம்
பாஜகவின் இந்த கருத்து அதிமுகவினரை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது. இதற்கு தமிழக அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்து இருந்தார். அதில், அரசை குற்றஞ்சாட்டுவதை பொன். ராதாகிருஷ்ணன் வாடிக்கையாக வைத்துள்ளார். அவர் பதவி கிடைக்காத விரக்தியில் இப்படி பேசுகிறார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது. பொன். ராதாகிருஷ்ணன் அமைச்சராக இருந்த போது தமிழகத்திற்கு எந்த நலத்திட்டத்தையும் கொண்டு வரவில்லை, என்று குறிப்பிட்டார்.
எதிர்ப்பு இல்லை
ஜெயக்குமாரின் இந்த கருத்துக்கு முதல்வர் பழனிசாமி எதிர்ப்பு தெரிவிப்பார் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் முதல்வர் அதற்கு எதிர்மாறான நிலைப்பாட்டை எடுத்து இருந்தார். ஜெயக்குமாரின் கருத்துக்கு முதல்வர் பழனிச்சாமி பதில் அளித்துள்ளார். பொன்.ராதாகிருஷ்ணன் குறித்த கருத்து குறித்த கேள்விக்கு, அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்து சரியானதே . அவரின் கருத்தே என்னுடைய கருத்தும். அவரின் கருத்தும் அதிமுகவின் நிலைப்பாடும் சரிதான்.
என்ன சொன்னார்
தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது. இதை பற்றி தவறாக விமர்சிக்க கூடாது. தமிழகத்திற்கு எதிராக யார் செயல்பட்டாலும் அரசு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும், என்று குறிப்பிட்டார். முதல்வர் பழனிச்சாமியின் இந்த பேட்டி பாஜகவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பாஜகவின் மூத்த தலைவர் ஒருவரின் கருத்து முதல்வர் நேரடியாக எதிர்த்து பேசுவது இதுவே முதல்முறை. ஜெயக்குமார் சொன்ன அதே கருத்தை சொல்லி, பொன்னாருக்கு முதல்வர் பதிலடி கொடுத்து இருந்தார்.
வேறு என்ன சிக்கல்
ஆனால் சிக்கல் அதோடு முடியவில்லை. இங்கே அதிமுக - பாஜக சண்டையில் இருந்த போது இன்னொரு பக்கம் திமுக - காங்கிரஸ் சண்டையில் இருந்தது. அப்போது காங்கிரஸ் கட்சிக்கு அதிமுக ஆதரவாக பேசியது. பாஜகவை இந்த விஷயம் கோபத்திற்கு உள்ளாகியது. திமுக - காங்கிரஸ் சண்டை குறித்து பேசிய ஜெயக்குமார், காங்கிரஸ் கட்சி தன்மானத்தோடு இருப்பது குறித்து அக்கட்சியே முடிவெடுக்கும். காங்கிரஸ் கட்சி சிந்துத்து செயல்பட வேண்டும். திமுக கூட்டணி குறித்து எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, உண்மையாக செயல்பட்டு காங்கிரஸ் கட்சி முடிவு எடுக்க வேண்டும்.
கூட்டணி எப்படி
அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் இணைந்திடுமா? என்று இப்போது கூற முடியாது. ஆனால் அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். எப்படி வேண்டுமானாலும் மாற்றங்கள் வரலாம். நாளை எதுவானாலும் நடக்கலாம் என்று ஜெயக்குமார் கூறினார். இதனால் காங்கிரஸ் கட்சியுடன் அதிமுக கூட்டணி வைக்க போகிறதா என்று கேள்விகள் எழ தொடங்கியது. பாஜக தரப்பிற்கும் இது அதிக அளவில் சந்தேகத்தை கொடுத்தது.
கருத்து என்ன
இந்த பிரச்சனை காரணமாக,பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்து செல்ல அதிமுக நேரம் பார்த்து கொண்டிருக்கிறது என தமிழக அமைச்சர் பாஸ்கரன், கூறியிருந்தார். அதன்பின் தன்னுடைய கருத்தை அவர் திரும்ப பெற்றுக்கொண்டார். ஆனால் அதிமுக அமைச்சர் ஒருவர் நேரடியாக சொன்னது பாஜகவை கதிகலங்க வைத்தது. தமிழகத்தில் அதிமுகவை நம்பித்தான் பாஜக இருக்கிறது. வரிசையாக இப்படி நிறைய விஷயங்கள் நடந்தது.
என்ன முடிவு
அப்போதுதான் முத்தாய்ப்பாக, பாஜகவின் செய்தி தொடர்பாளர் நாராயணனை அதிமுகவின் ஜவஹர் அலி டிவி விவாதம் ஒன்றில் மிக மோசமாக விமர்சனம் செய்தார். பயன்படுத்த கூடாத வார்த்தை ஒன்றை பயன்படுத்தி மிக மோசமாக நாராயணனை ஜவஹர் அலி திட்டினார். ஜவஹர் அலி குறித்து பாஜகவின் தேசிய தலைமையிடம் நாராயணனன் புகார் அளித்துள்ளார். அதோடு தமிழக அதிமுக தலைவர்களிடமும் இது தொடர்பாக நாராயணன் கடுமையாக பேசி இருக்கிறார்.
சமாதானம் செய்ய முடிவு
அதிமுக தலைவர்களின் இந்த தொடர் பேச்சு ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இதனால்தான் தற்போது அதிமுக பாஜகவுடன் சமாதானமாக செல்ல முடிவு எடுத்துள்ளது. எதுவாக இருந்தால் 2021 தேர்தலின் போது பார்த்துக் கொள்ளலாம். இப்போது பாஜக உடன் கூட்டணியில் இருப்பதுதான் சரியாக இருக்கும் என்று அதிமுக முடிவு செய்துள்ளது. இதனால்தான் அதிமுக தலைவர்களுக்கு முதல்வர் பழனிசாமி அதிரடி கட்டளைகளை பிறப்பித்துள்ளார். அதில், தேவையற்ற கருத்துகளை பொது வெளியில் பேசக் கூடாது. சர்ச்சை உண்டாகும் வகையில் பேச கூடாது.
பேச கூடாது
செய்தியாளர்களிடம் பேசுவதற்கு என்று ஒரு குழு இருக்கிறது. அந்த குழு மட்டும்தான் பேச வேண்டும். அவர்களை தவிர வேறு யாரும் செய்தியாளர்களிடம் பேச கூடாது, என்று எடப்பாடி பழனிச்சாமியும் அதிரடியாக தெரிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி முறிய கூடாது என்பதற்காகத்தான் இப்படி அவர் கூறியுள்ளார் என்கிறார்கள். இதனால் அதிமுகவில் நிறைய கட்டுப்பாடுகளும் வந்துள்ளது.
புதிய தலைவர் எப்படி
இன்னும் ஒரு வருடத்திற்கு இந்த கூட்டணியில் நீடிப்பதே சரியானதாக இருக்கும் என்று அதிமுக நம்புகிறது. அதேபோல் பாஜகவின் புதிய தமிழக தலைவர் அதிமுகவுடன் இசைந்து போக வாய்ப்பு குறைவுதான் என்றும் கூறுகிறார்கள். தமிழிசை போல அவருக்கு சகிப்புத்தன்மை அதிகம் இருக்காது. இதனால் பெரிய பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. அதனால் இப்போதே அமைச்சகர்களை, செய்தி தொடர்பாளர்களை தட்டி வைக்க வேண்டும் என்று அதிமுக முடிவு செய்துள்ளது. அதிமுகவில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளுக்கு இதுதான் காரணம் என்கிறார்கள்.