வக்கீல் தொழிலுக்காக கம்பம் டூ சென்னை... ரகுமான் கானின் ஆதி முதல் அந்தம் வரை...!
சென்னை: திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் ரகுமான் கான் இதயப்பிரச்சனைக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை காலமானார்.
திமுகவுக்கு அவர் ஆற்றிய தொண்டை கவுரவிக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் மூன்று நாட்களுக்கு கட்சிக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தனது சொற்பொழிவால் கருணாநிதியின் இதயத்தில் இடம்பிடித்த ரகுமான் கானுக்கு வக்பு வாரியம், சிறுசேமிப்புத்துறை என பல துறைகளில் உயர் பதவி கொடுக்கப்பட்டதோடு அமைச்சராகவும் ஆக்கியது திமுக.
வேதரத்தினத்தை இழுத்த திமுக.. ஜீவஜோதியை கையில் எடுக்கும் பாஜக.. அடுத்து என்னவெல்லாம் ஆகுமோ?!
வசதியான குடும்பம்
தேனி மாவட்டம் கம்பத்தை பூர்வீகமாக கொண்டவர் ரகுமான் கான். இவருடைய தந்தை ரஷீது கான் அந்தக் காலத்திலேயே கட்டிட ஒப்பந்தப் பணிகள் செய்யும் ஒப்பந்ததாரராக இருந்தார். கூடவே ரகுமான் குடும்பத்திற்கு சொந்தமாக கம்பத்தில் சில ஏக்கர்கள் விவசாய நிலங்களும் இருந்தன. இதனால் வசதிக்கு பஞ்சமில்லாத குடும்பம் என்பதால் ரகுமான் கானின் அரசியல் ஆசைக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் யாரும் தடை போடவில்லை.
படிப்பில் கெட்டிக்காரர்
பள்ளிப் பருவம் முதலே பேச்சில் கெட்டிக்காரராக திகழ்ந்த ரகுமான் கான் தனது பள்ளிப்படிப்பை கம்பத்தில் உள்ள ஏல விவசாயிகள் ஐக்கிய உயர்நிலைப் பள்ளியில் முடித்தார். அதற்கு பிறகு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை பட்டம் முடித்த அவர் நண்பர்களும், உறவினர்களும் கொடுத்த ஊக்கத்தின் காரணமாக மேற்கொண்டு சட்டம் பயின்று பட்டம் பெற்றார்.
வழக்கறிஞர் தொழில்
வழக்கறிஞருக்கு படித்து முடித்துவிட்டு ஊரில் இருந்தால் ஒன்றும் செய்ய முடியாது என எண்ணிய அவர் சென்னைக்கு சென்றால் தான் இந்த தொழிலின் நெளிவு சுளிவுகளை கற்க முடியும் எனக் கருதி சென்னைக்கு செல்கிறார். ஏற்கனவே திமுககாரரான அவர் சென்னையில் வழக்கறிஞர் தொழிலோடு சேர்த்து தன்னை கட்சிப் பணிகளிலும் ஈடுபடுத்தத் தொடங்கினார். தலைவர்கள் வருவதற்கு முன்பு பேசக்கூடிய பேச்சாளர் வாய்ப்பை நல்வாய்ப்பாக பயன்படுத்தி தனது திறமையை வெளிச்சம் போட்டுக் காட்டத்தொடங்கினார்.
சொற்பொழிவு
சொற்பொழிவுகளால் ஆட்சியை பிடித்த கட்சி திமுக என்பதால், தகுதியுள்ள சொற்பொழிவாளர்களை அங்கீகரித்து அவர்களுக்கு பல நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தார் கருணாநிதி. அதில் ரகுமான் கானும் ஒருவர். 1977, 1980, 1984 ஆகிய மூன்று தேர்தல்களில் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு சட்டமன்றத்திற்குள் நுழைந்த ரகுமான் கான் கோடைமழை இடிமுழக்கத்தை போன்று முழங்கினார். ரகுமான் கான் உரையை அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரே ரசித்து கேட்டதாகவும் கூறப்படுகிறது.
அமைச்சர் பதவி
1996-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட அனுப்புகிறார் கருணாநிதி. அங்கு வெற்றிபெற்று வந்த ரகுமான் கானுக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அதற்கு பிறகு வக்பு வாரியம், சிறுசேமிப்புத்துறை உள்ளிட்ட அரசு வாரியங்களில் தலைவர் பதவி கொடுக்கப்பட்டது.
கடுங்கோபம்
ரகுமான் கானை பொறுத்தவரை துரைமுருகன் அளவுக்கு சிரித்துப் பேசி அனைவரிடமும் நயமாக பழகத் தெரியாதவர். சற்று இறுக்கமாகத் தான் இருப்பார். இதனாலேயே அவருக்கும் கட்சியில் ஜூனியர்களான கே.என்.நேரு போன்ற சிலருக்கும் சட்டமன்றத்தில் பெரிய லடாயே வந்துள்ளது. ஒரு கட்டத்தில் ரகுமான் கானை டென்ஷன் பார்ட்டி என கட்சியினர் அடைமொழியிட்டு அழைக்கத் தொடங்கினர்.
பல வருடங்களாக
காலப்போக்கில் அவரது இதயத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக அரசியல் பணிகளில் இருந்து மெல்ல ஓய்வெடுக்கத் தொடங்கினார். குறிப்பாக 2002-ம் ஆண்டு அவருக்கு நடைபெற்ற பைபாஸ் சர்ஜரிக்கு பிறகு கட்சி நிகழ்ச்சிகளை குறைத்துக்கொண்டார். இந்நிலையில் அவரது மகன் சுபேர் கான் நடத்தி வரும் ஆர்தோமெட் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.