அதிமுகவுக்கு நாலாபக்கமும் செக்? .. பாஜகவின் திட்டம்தான் என்ன.. என்னதான் செய்ய போகுது?
தமிழக பாஜகவின் தேர்தல் வியூகம் என்னவென்று தெரியவில்லை
சென்னை: நாலாபக்கமும் அதிமுகவுக்கு செக் வைத்து வருகிறது பாஜக என்றுதான் சொல்ல வேண்டும்.. எடப்பாடியாரை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என்று வெளிப்படையாகவே இப்போது சொல்லி வருகிறது.. போகிற போக்கை பார்த்தால், அதிமுகவுக்கு அழுத்தம் கூடிக் கொண்டே செல்கிறது.
விரைவில் தேர்தல் வரப்போகிறது.. திமுக, அதிமுக வியூகங்களை தங்கள் ஸ்டைலில் முடக்கி விட்டு வருகின்றன.. அதேபோல, இந்த மெகா கட்சிகளுடன் கூட்டணியில் இருப்பவர்கள் வாயே திறக்காமல் இருந்து வருகிறார்கள்.
இதில், அதிமுகவின் கூட்டணியில் உள்ள பாஜக மட்டும், வரப்போகும் தேர்தலை சந்திப்பது பற்றி தொடர்ந்து கூறி வருகிறது.. இதை ஆரம்பித்து வைத்ததே மாநில தலைவர் எல்.முருகன்தான்.. 60 சீட்களில் தனித்து நின்றாலே பாஜக வெற்றி பெறும் என்றார்.. பிறகு கோட்டையில் காவி கொடி பறக்கும் என்றார்.
இதையடுத்து, சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக பாஜக- கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்... 2016 ல் தனித்து போட்டியிட்ட பாஜக 90 தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயித்தது.. அதுபோலவே இந்த முறையும் பெருவாரியாக நிர்ணயிக்கும் என்றார். முருகன் விடாமல் இவ்வளவு சொல்லியும் அதிமுக அமைதி காத்து வருகிறது..
பிறகு 2 நாளைக்கு முன்பு திடீரென பாஜகவின் மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது பேட்டியில், கடைசி நேரத்தில் அதிமுக, திமுகவுடன் கூட்டணி மாறும் என்று ஒரு பகீரை கிளப்பினார்.. இந்த பரபரப்பு பற்றி கொண்டு எரியவும், கூட்டணியில் தொடரக்கூடாது என்று நான் சொல்ல மாட்டேன்.. அதிமுகவில் இருக்கிறோம் என்று ஒரே நாளில் பின்வாங்கினார்.. அத்துடன் எடப்பாடி அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் பாராட்டு தெரிவித்தார்.
இந்நிலையில்தான் முதல்வர் வேட்பாளர் பிரச்சனை வெடித்தது.. வழிகாட்டு குழுவும் அமைக்கப்பட்டு, ஒரு சுமூகத்துக்கு அதிமுக வந்தது... எடப்பாடியாரை முதல்வர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.. இதுகுறித்து கருத்து தெரிவித்த பாஜக மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன், பாஜக ஏற்கனவே திமுக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது... தேர்தல் நேரத்தில் கூட்டணிகள் மாறுவது வழக்கமானது. இன்றைக்கு தேசிய ஜனநாயக கூட்டணி, அதிமுக தலைமையில் இருக்கிறது. எதிர்காலத்தில் பாஜக தலைமையில் கூட கூட்டணி அமையலாம்.
அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்பதில் எந்த தயக்கமும் இல்லை... அதேசமயம், தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர் வேட்பாளராக அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டாரா? என்பதை எங்களின் தேசிய தலைமை தான் சொல்ல வேண்டும்" என்றார்.
இன்னைக்கு புரட்டாசி வெள்ளிக்கிழமை.. ஆனா இப்டி வாழ்த்தா சொல்லி வெறுப்பேத்துறீங்களே மக்கா!
ஆக மொத்தம், இந்த பாஜக தலைவர்களின் பேட்டிகளை பார்த்தால், யாருமே திமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று உறுதியாக சொல்லவே இல்லை.. அதேநேரத்தில், அதிமுகவையும் பகைத்து கொள்ளவில்லை.. ஒருவேளை இப்போதையே கூட்டணியிலேயே தொடர அல்லது போதுமான சீட்டுகளை பெற கையாளப்படும் புது யுக்தியா? அதிமுகவே வாய்திறந்து பாஜகவை கூட்டணியில் சேர்த்து கொள்வதாக அறிவிக்க வேண்டும் என்று மறைமுகமாக தரப்படும் நிர்ப்பந்தமா? என்று தெரியவில்லை.
ஆனால், அதிமுக அமைதியாகவே உள்ளது.. அனைத்தையும் வேடிக்கை பார்த்து மட்டுமே வருகிறது.. எந்த பதிலையும், எந்த கருத்தையும் இதுவரை சொல்லவில்லை.. இன்னொரு பக்கம் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது, பாஜகவுக்கு திமுகவில் இடமில்லை என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் தெளிவுபடுத்திவிட்டார்.. அந்த வகையில், பாஜகவுக்கு இப்போது இருப்பது ஒரே 2 ஆப்ஷன்தான்.
ஒன்று, அதிமுகவுடன் கூட்டணி வைப்பது அல்லது பாமக, தேமுதிக (ரஜினி வந்தால் சேர்த்து கொள்ளலாம்) போன்ற கட்சிகளை ஒன்றிணைத்து தனித்து களம் காணுவது மட்டுமே! எனினும், முதல்வர் வேட்பாளரை, கூட்டணியில் உள்ள வேறு கட்சியின் தேசிய தலைமைதான் முடிவு செய்யும் என்று சொன்னது தமிழக அரசியல் வரலாற்றில் கொஞ்சம் வியப்பைதான் தந்து வருகிறது.