உத்தரகண்டில் திடீர் பனிச்சரிவுக்கு காரணம் என்ன... தமிழ்நாடு வெதர்மேன் சொல்லும் விளக்கத்தை பாருங்க!
சென்னை: உத்தரகண்ட் பனிச்சரிவு ஏற்பட்ட காரணம் என்னவென்று தெரியவில்லை, விரைவில் இதுகுறித்து தெரியவரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறினார்.
2 நாட்களுக்கு முன்பு நாசா அதே பிராந்தியத்திற்கு ஒரு நிலச்சரிவு எச்சரிக்கையை விடுத்தது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்தார்.
உத்தரகண்டில் பனிப்பாறை சரிவால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 150 பேர் வரை பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
உத்தரகண்ட் வெள்ளம்: இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதி உதவி... மாநில முதல்வர் அறிவிப்பு!
உத்தரகண்ட் வெள்ளப்பெருக்கு
உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் பனிப்பாறை ஒன்று திடீரென்று சரிந்து விழுந்தது. இதனால் அங்குள்ள அலக்நந்தா தவுளிகங்கா நதிகளில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
150 பேர் பலி?
இந்த வெள்ளப் பெருக்கு காரணமாக ரைனி கிராமத்தில் தவுலி கங்கை நதிக்கரையில் இருந்த பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்த 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 100 முதல் 150 பேர் வரை பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அங்கு தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவத்தினர், பல்வேறு மீட்பு குழுக்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு வெதர்மேன் கருத்து
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் இந்த வெள்ளபெருக்கு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முகநூலில் அவர் கூறியிருப்பதாவது:-உத்தரகண்ட் பனிச்சரிவு - 2013 முதல் மோசமான திடீர் வெள்ளம் ஆகும். இப்பகுதியில் சில நாட்களுக்கு முன்பு மழை / பனி இருந்தபோதிலும், கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது பனி மூட்டம் மிக உயர்ந்ததாகவோ அல்லது மிகக் குறைவாகவோ இல்லை.
பயமாக இருக்கிறது
இந்த பருவத்தில், ஒட்டுமொத்த மழை / பனி குறைவாக இருந்தது. பிப்ரவரியில் இது நடப்பது மிகவும் அரிதானது. பனிச்சரிவு ஏற்பட்ட காரணம் என்னவென்று தெரியவில்லை. விரைவில் இதற்கான காரணம் தெரியவரும். அங்கு மீட்பு பணிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த துயர சம்பவத்தில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என நம்புவோம். ஆனாலும் வெள்ளம் தொடர்பாக வரும் வீடியோ சற்று பயமாக இருக்கிறது.
நாசா எச்சரிக்கை
ஆச்சரியப்படும் விதமாக 2 நாட்களுக்கு முன்பு நாசா அதே பிராந்தியத்திற்கு ஒரு நிலச்சரிவு எச்சரிக்கையை அளித்தது, ஆனால் எதுவும் நடக்கவில்லை. இன்று ஏற்பட்ட நிலச்சரிவு எச்சரிக்கை பெரும்பாலும் பூடானில் விடப்பட்டது. அனால் உத்தரகண்ட் பகுதிகளுக்கு எந்த எச்சரிக்கையும் கொடுக்கப்படவில்லை, ஆனால் இந்த சம்பவம் எதிர்பாராதவிதமாக உத்தரகண்டில் நடந்துள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறினார்.