'சர்கார்' சட்டம் 49 பிக்கும், தேர்தல் விதி 49 பிக்கும் என்ன வித்தியாசம்!
Recommended Video
சென்னை : சர்கார் திரைப்படத்தில் கூறப்படும் 49 பிக்கும் நிஜத்தில் தேர்தல் ஆணையத்தின் விதிப்படி இருக்கும் 49 பிக்கும் என்ன வித்தியாசம் என்று தெரியுமா மக்களே.
தேர்தல் என்றால் வாக்களிப்பது இதைத் தவிர பிரபலமாகாத பல விஷயங்களை திரைப்படங்கள் பிரபலப்படுத்தி வருகின்றன. தேர்தலில் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று வாக்களிக்க விரும்புபவர்கள் நோட்டாவை பயன்படுத்தலாம் என்று தேர்தல் ஆணையம் ஒரு ஆப்ஷனை கொடுத்தது.
நோட்டா என்ற பெயரில் திரைப்படமே வந்துவிட்டது. தொடக்கத்தில் நோட்டாவை சாதாரணமாக நினைத்தன அரசியல் கட்சிகள். ஆனால் இப்போதெல்லாம் தேர்தல் நடந்தால் வேட்பாளர் டெபாசிட் இழந்தாரா இல்லையா என்ற செய்தியோடு நோட்டா பெற்ற ஓட்டுகளை கட்சிகள் பெற்றுள்ளனவா என்று ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது.
49பின்னா என்ன பாஸ்? கூகுளில் விழுந்து விழுந்து தேடிய மக்கள்.. டிரெண்டில் இடம்பிடித்தது!
மக்கள் பேசத் தொடங்கியுள்ளனர்
இதன் அடுத்த கட்டமாக முழுக்க முழுக்க அரசியல் பேசும் படமாக இருந்தாலும் 'சர்கார்' மூலம் 49 பி சட்டம் பற்றி மக்கள் பேசத் தொடங்கியுள்ளனர். சர்காரின் நாயகன் விஜய் ஓட்டு போடுவதற்காக அமெரிக்காவில் இருந்து தமிழகம் வருகிறார். ஆனால் ஓட்டு போடச் சென்ற போது தான் அவருடைய ஓட்டை கள்ள ஓட்டு போட்டுவிட்டார்கள் என்று தெரிகிறது.
சர்காரில் 49 பி
இதனால் கோபமடைந்த விஜய் 49 பி சட்டத்தை பயன்படுத்தி நீதிமன்றத்தை நாடி தேர்தலை நிறுத்துகிறார். பின்னர் தேர்தலில் போட்டியிட்டு தனக்கு பிடித்தவர்கள் வாயிலாக ஆட்சிக்கு வருகிறார்.
சட்டம் நடைமுறையில் எப்படி இருக்கிறது
தேர்தல் சட்டத்தில் 49 பி என்ற பிரிவு இருப்பது உண்மை தான், ஆனால் படத்தில் சொல்லப்பட்டது போல 49 பி பிரிவின் கீழ் வாக்களிப்பவர்களின் வாக்குகளுக்கு மதிப்பு இல்லை என்பது தான் உண்மை. வாக்காளர் ஓட்டளிக்க செல்லும் போது அவரின் ஓட்டு கள்ளஓட்டாக போடப்பட்டிருந்தால் தேர்தல் அலுவலரிடம் 49 பியின் கீழ் வாக்களிக்க விரும்புவதாக தெரிவிக்கலாம்.
எண்ணிக்கைக்கு உதவாது
அந்த வாக்காளருக்கு தனியாக ஒரு சீட்டு வழங்கப்படும், அந்தச் சீட்டில் வேட்பாளர்களின் பெயர்கள் இருக்கும் அதில் இருந்து தனக்கு விருப்பமான வேட்பாளருக்கு வாக்களிக்கலாம். இந்த வாக்குச் சீட்டு தனியே வைக்கப்படும், ஆனால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதியப்பட்ட கள்ள ஓட்டு தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். வாக்காளருக்கு வாக்களித்தோம் என்ற திருப்தி மட்டுமே கிடைக்கும்.
சிக்கல் ஏற்படலாம் என அச்சம்
எனினும் 49 பி பிரிவில் மற்றொரு சிக்கலும் இருக்கிறது. தனது ஓட்டு கள்ள ஓட்டாக போடப்பட்டுள்ளது என்று பலர் 49 பி பிரிவின் கீழ் வாக்களித்தால் அப்போது தேர்தலுக்கு சிக்கல் வர வாய்ப்பு இருக்கிறது. 49 பி பிரிவில் கள்ள ஓட்டு முற்றிலும் ஒழியாது ஆனால் மக்களுக்கு இந்தச் சட்டம் பிரபலமானால் சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அரசியல் கட்சிகள் கருதுகின்றன.