பொருளாதார மந்த நிலைன்னா என்ன.. டாஸ்மாக் கூட்டத்தை வைத்து முடிவு செய்ய முடியுமா... சிம்பிள் விளக்கம்
சென்னை: மாலை 6 மணிக்கு மேல் டாஸ்மாக் கடையிலும் புரோட்டா கடைகளிலும் கூடும் கூட்டத்தைவைத்து பொருளாதாரத்தை முடிவு செய்ய முடியுமா? சாமானியர்களுக்கும் புரியும்படி உண்மையில் பொருளாதார மந்த நிலை என்றால் என்ன என்பது குறித்து பார்ப்போம்.
முதலில் எத்தனை பேருக்கு பொருளாதாரம் குறித்து புரிதல் இருக்கிறது. தினசரி செய்திதாள்களில் எத்தனை பேர் பிசினஸ் பக்கத்தை புரட்டி படித்து பார்க்கிறார்கள்.
உண்மையில் வணிகப் பகுதிதான் மிக முக்கியமானது. பிறகுதான் சினிமா, கிரிக்கெட், அரசியல் இதெல்லாம். அதை பற்றிய பெரிய புரிதல் எத்தனை பேருக்கு இருக்கிறதோ அவர்களுக்கு பொருளாதார மந்த நிலை நிச்சயம் தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்கு சொல்லிவிட வேண்டும் என்பதற்காகவே இந்த கட்டுரை.
குடிப்பதால் குடும்பம் பாதிப்பு
டாஸ்மாக் கடையில் ஆறு மணிக்கு மேல் கூடும் மக்கள் கூட்டத்தை வைத்தும், புரோட்டோ கடையில் மக்கள் கூடுவதை வைத்தும் பொருளாதாரம் வலுவாக இருப்பதாக சிலர் சிந்திக்கிறார்கள். ஆனால் அதில் உண்மையில்லை. தினமும் குடிக்க வேண்டும் என்ற மனநிலையை உடையவர்கள் அதற்காக இருக்கும் அனைத்து பணத்தையும் செலவழிக்க தயாராகிறார்கள். அவர்களின் அன்றைய நாளின் முதன்மை நோக்கம் குடிப்பது. அதன்பிறகு ஓட்டலில் காரசாரமாக சாப்பிடுவது அவ்வளவு தான். அதனால் குடும்பத்தில் ஏற்படும் பாதிப்புகளை பற்றி துளியும் அவர்கள் கவலைப்படுவது இல்லை.
சமானிய மக்களுக்கு தெரிய வேண்டும்
மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான வருமானம் அவர்களின் வேலை மூலம் வர வேண்டும். அப்படி வருமானத்தை வைத்து தேவையானதை வாங்கக்கூடிய நிலை இருக்க வேண்டும். அவரவர் சக்திக்கு தகுந்தபடி பணக்காரர் முதல் ஏழை வரை அவர்களின் சராசரி வாழ்க்கைகு தேவையானதை வாங்க கூடிய நிலை இருந்தால் பொருளாதாரம் வலுவாக இருப்பதாக அர்த்தம்.
நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கை
மாறாக மக்கள் வருமானத்தை இழந்து தேவைகளை சுருக்கி, எதுவும் வாங்காமல் போனால், அதாவது மக்களின் நுகர்வு குறைந்து போனால், உற்பத்தி செய்வது என்பது அனைத்து துறையிலும் குறைந்துவிடும். ஜனவரியில் இருந்து ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒருமுறை அனைத்து பெரிய நிறுவனமும் எப்படி வருமானம் சம்பாதித்துள்ளன. எவ்வளவு உற்பத்தி செய்துள்ளன என்பதை நிதிநிலை அறிக்கையில் தெரிவிப்பார்கள்.
ஜிடிபி வளர்ச்சி
இதேபோல் இந்திய அரசும் காய்கறி விலை உள்பட பல்வேறு பொருள்கனின் விலையை புள்ளி விவரத்தில் தெரிவிக்கும். இதை வைத்து தான் நாட்டின் வளர்ச்சி (ஜிபிடி) மற்றும் பணவீக்கம் கணக்கிடப்படுகிறது. இதில் பெரும்பாலான துறைகளில் லாபம் இருந்தால் வளர்ச்சி. நஷ்டம் ஏற்பட்டால் வீழ்ச்சி. இவை அனைத்தையும் தீர்மானிப்பது மக்களின் வாங்கும் சக்தி தான்.
வருமானமே தீர்மானிக்கும்
மக்களின் வாங்கும் சக்தியை தீர்மானிப்பது அவர்களின் வருமானம் தான். எனவே வருமானம் வர அவர்களுக்கு வேலை இருக்க வேண்டும். இல்லாவிட்டால வருமானம் வராது. இந்தியா விவசாயம் சார்ந்த நாடு. கடந்த ஓராண்டில் மழை பொய்த்து போனதால் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டு மக்களிடம் வருமானம் இல்லாமல் போனது. இதன் தாக்கம் ஆட்டோ மொபைல், ரியஸ் எஸ்டேட், சில்லறை விற்பனை என பல துறைகளையும் இன்று கடுமையாக பாதித்திருக்கிறது இதைத்தான் பொருளாதார மந்த நிலை என்கிறார்கள்.